காமாட்சி அம்மன் விளக்கு பயன் படுத்துவது ஏன் ?

Published:

vilakku kamatchi amman - 2026காமாட்சி விளக்கை ஏன் பயன்படுத்துகிறார்கள்?

வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பதே, வீட்டை ஒளியூட்டும் சிறப்பான ஒரு விஷயம்தான். விளக்குகளில் வட்ட முகம், இரட்டை முகம் முதல் 5 முகம் என பல விதங்களில் காணப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இல்லங்களில் ஏற்றப்படும் காமாட்சி விளக்கு திகழ்கிறது. இது பெரும்பாலும் பல வீடுகளில் இருக்கும். காமாட்சி விளக்கை ஏன் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள்? அந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பதால் என்ன நன்மை ஏற்படும்? என்பதை இப்போது காணலாம்.

  • உலக மக்களின் நன்மைக்காக தவம் இருந்தவர், காமாட்சி அம்மன். அவர் அப்படி தவம் இருந்த வேளையில், சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது. இதன் காரணமாக காமாட்சி அம்மனை வழிபட்டாலே, ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும்.

  • காமாட்சி அம்மனுக்குள் சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகம். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காமாட்சி அம்மனுடைய அருளும், அவரவர் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

  • ஒரு சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் எது? என்பது தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள், காமாட்சி அம்மனையே குலதெய்வமாக நினைத்துக் கொண்டு, ‘நீயே என் குல தெய்வமாய் இருந்து என் குலத்தை காப்பாற்று’ என வணங்கியபடி விளக்கேற்றி வழிபடுவார்கள். அதற்கு ‘காமாட்சி தீபம்’ என்று பெயர்.

  • அனைத்து தெய்வங்களின் அருளையும், ஒன்றாகப் பெறுவதற்காகத்தான், திருமண சமயங்களில் கூட, மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரச் சொல்கிறார்கள். திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்லும் மணப்பெண், அங்கு முதன் முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதற்கும் இதுதான் காரணம். அதோடு காமாட்சி விளக்கில் குலதெய்வமும் இருந்து அருள்புரிவதால், முதன்முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.

  • மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று. காமாட்சி விளக்கு புனிதமானது. இதில் கஜலட்சுமியின் உருவமே பொறிக்கப்பட்டிருக்கும். இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபட்டு வந்தால் வறுமை விலகும்.

  • மணப்பெண்ணுக்கு சீர்வரிசைகளை தரும் போது, காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்குவார்கள்.

  • சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர். பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். புதுமனை புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கு, இந்த காமாட்சி அம்மன் விளக்கு.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img