விதியை விழிகளால் மாற்றும் கோலவிழி அம்மன்
மயிலாப்பூரை காவல் காத்து வரும் கோலவிழி அம்மனுக்கு சோழர் காலத்துக்கும் முந்தைய வரலாறு உண்டு. ஆடி செவ்வாய் தேடி குளித்து என்று பக்தர்கள் கொண்டாடும் இந்த கோலவிழியம்மனை வேண்டாமல் மயிலாப்பூர்வாசிகள் எந்த காரியங்களிலும் ஈடுபடுவதில்லை. முதல் மரியாதை காவல் தெய்வமான கோலவிழி அம்மனுக்கு தான்.
இந்த ஜாதகக்காரன் எதற்குமே லாயக்கில்லை..இதெல்லாம் தூக்கியெறிய வேண்டிய ஜாதகம்’ என்று எத்தனை சோதிடர்கள் நிராகரித்தாலும், அம்மன் நிராகரிப்பதில்லை. அவள் தான், தன்னை நாடி வரும் பக்தர்களை தனது விழிகளால் அருள் பார்வை பார்த்து, அவர்களின் விதியை மாற்றி எழுதுகிறவளாயிற்றே!ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல், ஒரு சிறிய தெருவின் கடைக்கோடியில் அமர்ந்து அருளாட்சி செய்து வரும் கோல விழியம்மனை தரிசிக்க எங்கெங்கோ இருந்து பக்தர்கள் வருகிறார்கள். வடக்கு நோக்கி வீற்றிருக்கும் இந்த அம்பிகைத் தான், தன்னைத் தேடி வரும் பக்தர்களின் குறைகளை தன் அகண்ட விழிகளால் அருட்பார்வை பார்த்து துயர் துடைக்கிறாள்.தக்கனின் யாகத்தை அழிக்க காளி ரூபத்தில் வீரபத்திரரை அனுப்பியதாக புராணங்கள் கூறுவதை மெய்ப்பிக்கும் வகையில் மேற்கே வீரபத்திரர் ஆலயமும் உண்டு. இந்த தலம், அகோரிகள் வழிபட்ட தலம் என்பது சித்தர்களின் வாக்கு.அன்னையின் இடது கால் அசுரனின் தலை மேல் வைத்து வலது காலை மடக்கி அமர்ந்த நிலையில் பத்ரகாளியாய் காட்சி அளிக்கிறாள்.
கைகளில் அங்குசம்,கேடயம், கபாலம் , மணி, வாள், உடுக்கை, சூலம், வேதாளம் ஏந்தி ஆக்ரோஷத்தோடு வீற்றிருக்கிறாள். பத்ர எனில் மங்கலம் என்று பொருள். தம்மை சரணாகதி அடையும் பக்தர்களின் வாழ்வில் மங்கலங்களை உருவாக்குகிறாள் அன்னை. இவள் உக்கிரமாக இருப்பதால் அலங்காரங்கள், தூப தீபங்கள், ஆராதனைகள் மட்டுமே. உற்சவ நடனமாடும் காளிக்கே அபிஷேகங்கள். இந்த அம்மன் மூலம் மூலவரை குளிர்விப்பதாக ஐதீகம். கருவறை நேர் எதிரில் உள்ள ஆமை சிற்பத்திற்கு ராகு காலங்களில் இளநீர் அபிஷேகம் செய்ய ஏவல்,பில்லி, சூனியம், தீராத நோய்கள் விலகுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்தோற்றம் உக்கிரமாக இருப்பினும் கருணை பொங்கும் விழிகள் தான் இந்த அம்பிகையின் சிறப்பே. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளோடு ஆலயத்தை 27 முறை வலமாகவும், 2 முறை இடமாகவும் வலம் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
ராகு தோஷம் உள்ளவர்கள், ராகு திசை நடப்பவர்கள் இங்கு உள்ள சப்த கன்னியர்களில் வாராஹியை வழிபடுகிறார்கள். தீராத நோய்கள், குடும்ப பிரச்சனை, மன அமைதி ,திருமணம், குழந்தைப்பேறு என சகலவிதமான பிரச்சனைகளையும் தன் கருணை பொங்கும் விழிகளால் தீர்த்து வைக்கிறாள் அன்னை.
இத்தலத்தில் பூட்டு பிரார்த்தனையும் உண்டு. எந்த பிரச்சனையாக இருப்பினும் வேலியில் பூட்டப்பட்ட சாவியை அம்பிகையின் காலடியில் வைத்து சரணாகதி அடைந்தால் நிச்சயம் பிரச்சனைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருக்க தூண்டும் விழிகளால் கோலவிழி அம்மன் பக்தர்களுக்கு கோலகலமான வாழ்வை அள்ளித்தருகிறாள்.