
ஸ்ரீ இராமர் இராவணனை கொன்றதால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொள்கின்றது. அப்பாவம் நீங்க அவர் சிவ பூஜை செய்ய வேண்டியது அவசியமாகின்றது. ஹனுமானை அழைத்து காசிக்குப் போய் ஒருசிவலிங்கம் எடுத்துவா என்று கட்டளையிட்டார்.
காசிக்குச் சென்ற ஆஞ்சநேயர் அங்கு அதிகமாக லிங்கம் இருந்த இடத்துக்குச் சென்று எது சுயம்பு லிங்கம் எப்படிக் கண்டு எடுத்து செல்வது என்று தடுமாறினார்!
அப்போது ஒரு சிவலிங்கத்துக்கு மேலே கருடன் வட்டமிட்டார்! அதுதான் சுயம்புலிங்கம் என்று கண்டு கொண்ட ஆஞ்சநேயர் இதை எடுத்துச் செல்லலாம் என்று முடிவு செய்தார்.
அதை ஆமோதிப்பது போல் கௌளி பல்லி சத்தமிட்டு ஆமோதித்தது. அந்த சுயம்புலிங்கத்தை எடுத்துக் கொண்டு அவர் வெளியே வரும்போது காலபைரவர் இது என் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. என்னைக் கோட்காமல் நீ எப்படி எடுத்துச் செல்லலாம் என்று கூறி தடுத்தார்.
அவரோடு வாக்குவாதம் செய்யும்போது கௌளி என்ற பல்லியும் கருடனும் ராமர் காரியத்துக்கு உதவி செய்தார்கள் என்று ஹனுமன் கூறினார்!
என் கடமைக்கு குந்தகம் உண்டாக்கிய பல்லியே நீ இனி காசியில் ஒலிக்கக் கூடாது! ஏ கருடா! நீ காசியில் பறக்கக் கூடாது என்று காலபைரவர் சாபம் இட்டார்!
இவ்வாறு தாமதமானதால் சீதா தேவியார் மணலால் லிங்கம் அமைக்க இராமர் சிவபூஜை செய்தார். பின்னர் அனுமன் வருத்தப்படக்கூடாது என்று அவர் காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கே இராமேஸ்வரத்தில் முதல் பூஜை என்று வரம் கொடுத்தார்.எனவே இப்போதும் கருடன் காசியில் பறப்பதில்லை. கௌலி பல்லியும் கத்துவதில்லை.


