ஸ்ரீ ரா. கணபதி அவர்கள்
எழுதியதிலிருந்து……………………………… அந்த பொன்னடிகள்தாம்
பெயர் தெரியாத எத்தனை குக்க்ராமங்களில் பட்டு, பல காலம் கூட தங்கி, அவற்றை
புனித ஸ்தலங்களாக புகழ் பெறவைத்திருக்கின்றன. ஸ்ரீ பெரியவா, காட்டுப்பள்ளியில்
1965 ம் வருஷத்துக்கு முன், சந்தவேளூர் என்ற ஊரை, சிவலோகமாக்கினார்.அவ்வருஷ
சிவராத்ரியை அங்கே நடத்தினார். பிற்பகல் நாலு மணி இருக்கலாம். பொக்கையும்
போரயுமான படிக்கட்டுகளும், பாசியும் பசலையுமான தண்ணீரும் கொண்ட குளக்கரையில்
இந்த நூற்றாண்டு கண்ட அந்த உண்மையான வேதகால சந்நியாசி அமர்ந்திருந்தார்.
விந்தையாக கழுத்தில் மலர் மாலை அணிந்திருந்தார்.சன்யாசிகள் மாலை அணியலாமா
அன்று ஒரு வாதமே எழுந்ததுண்டு. அனால் பெரியவா மாலை அணியும் முறையை புரிந்து
கொண்டு பார்த்தால்அதை தனக்கு அலங்காரமாக அவர் தரிக்கவேயில்லை என்று தெரியும்.
மாலையை அவர் கழுத்தில் போட்டுக்கொள்ளாமல்சிரசிலேயே வைத்து கொள்வது வழக்கம்.
சிரசில் குருமூர்த்தியான அம்பிகையின் பாதம் இருப்பதாக சாஸ்திரம்.
பெரியவாளுக்கோ அந்தசாஸ்திரம் அனுபவமே! அதனால் குரு அஞ்சலியாக அம்பாள்
சரணத்திற்கு அலங்காரமாகத்தான் அவர் “அலங்கல் அணிந்தருள்வது” அப்புறம் அது
நழுவி கழுத்தில்விழும்போது அவளது பிரசாதமேயன்றி சுய அலங்காரமல்ல. அப்படி
கழுத்தில் சரிந்ததை உடனே களைந்து விடுவதேஅவரது பொது வழக்கம். இன்று
வழக்கத்திற்கு மாறாக மாலையும் கழுத்துமாகவே மனோஹர தரிசனம் அளித்தார்.
இளைஞரொருவர் அவரது திருமுன்பாடிக்கொண்டிருந்தார். நான் செய்த பாக்கியம்
பெரியவாளை தரிசித்தது மட்டுமல்ல; நான் போகும்போது பாடகர் பாட்டின் முடிவு
பகுதிக்குவந்திருந்ததுதான்! அவர் சரணத்தின் பின்னிரு வரிகளுக்கு வந்து ஓரிரு
நிமிஷத்திலேயே அதை முடித்தது என் பாக்கியமே! அப்பேர்ப்பட்ட”தேவகானம்” !
“கராஜுனி ஹ்ருதய சரோஜவாசினி முராரி சோதரி பராசக்தி ந்னு” என்று அவர்
திருப்பியபோது, நல்ல வேளை, என் கோபம் சிரிப்பாக மாறியது! முந்தைய பாத
இறுதியில் வரும் “த்யா” என்பதோடு இணைத்து “த்யாகராஜுனி ஹ்ருதய சரோஜ” என்று பாட
வேண்டியதைத்தான் அந்தபுண்ணியவான் “கராஜுனி” என்று அமர்க்களமாக தாளம் தட்டி
சிதைத்து பாடினார். பெரியவாளின் பெருமைகள் அனந்தம் என்றால் உபசார வாக்கல்ல.
சத்தியமாகவே அனந்தம்தான்! அந்த பெருமைக்கு இரு கண்மணிகள்அல்லது இரு சுவாச
கோசங்கள் போல பொறுமையும், எளிமையும். மற்ற விஷயங்களை பொறுத்து கொண்டாலும்
பொறுத்து கொள்ளலாம்; ஒரு தேர்ந்த ரசிகனால், ரசக்குறைவானதை பொறுத்து கொள்வது
மாத்திரம் ரொம்ப ரொம்ப ஸ்ரமமானது! அந்த ஸ்ரமசாத்தியத்தைதான் நம்பெரியவா
அனாயாசமாக சாதித்திருக்கிறார்! ஏனென்றால், இன்று ‘பாட்டு பாடுதல்” என்ற அந்த
பாடு படுதலுக்கு ராகம் மட்டுமின்றி,சாஹித்யமும் ஆளாயிற்று. இசை கொலை பிளஸ்
மொழி கொலை! “வினாயகுநிவெல்லன்னு ப்ரோவவேனினு வினா வேல்புலேவரம்மா” என்ற
பல்லவியை எடுத்து, அதில் எத்தனை அக்ஷர பிழை, ஸ்வர பிழை
செய்யலாமோஅவ்வளவும்செய்து,ஒருவழியாகதலைகட்டினார்.
பொறுமையின் அவதாரமான பெரியவா இனித்த முகமாகவே பாட்டை கேட்டு கொண்டிருந்தார்.
பாடி முடித்தவர் , “பாட்டு சரியா இருந்துதா?” என்று கேட்டார்.
“என்ன தைரியம்?” என்று ஆச்சரியப்பட்டேன். பெரியவா என்ன சொல்ல போகிறார் என்று
ஆர்வமாக கேட்டேன். அவர் சொன்ன பதில் மேலும்ஆச்சரியமாக இருந்தது. “எனக்கு சரியா
இருந்தது. ஒனக்கு வேண்டியது அதானே?” என்றார். “ஆமாம் பெரிவா, எனக்கு வேற
ஒண்ணும் வேணாம்” என்று பாட்டுக்காரர் தண்டமாக விழுந்து கும்பிட்டார். அவரிடம்
வேடிக்கையாக பேச ஆரம்பித்தார் பெரியவா. “இது என்ன ராகம்?” “மத்யமாவதி”
“மத்யமாவதியா? அபூர்வ ராகம்னே சிலதை சொல்றதுண்டோன்னோ, அப்படி அபூர்வம பாடினே”
“பெரிவா அனுக்ரகம்” பாட்டுக்காரரிடம் என் கோபமும் சிரிப்பும் போய் பரிவு
உண்டாயிற்று. நன்குபரிச்சயமான ராகத்தையே உருமாற்றி ஏதோ அபூர்வ ராகம் போல அவர்
பாடினார், என்பதையே அந்த பொல்லாத கிழவனார் குறும்பில் குத்தவதை
புரிந்துகொள்ளாத அப்பாவியாக இருக்கிறாரே என்ற பரிவு. இம்மாதிரி அப்பாவிகளிடம்
பெரியவாளின் கருணை இரு மடங்காக பெருகும். பின் ஏன் குறும்பிலே குத்தினார்
என்றால், அவர்கள் பெரும்கருணையில் பாதியளவே பெறுகின்ற “புத்திசாலி” களான
நம்முடைய புத்திக்கும் வேடிக்கை வினோதம் காட்டத்தான்! குத்தல் நமக்குத்தான்
தெரியுமே தவிர, குத்தப்படுபவர்களுக்கு தெரியாது. அதுதான் அவர்கள்
அப்பாவிகளாச்சே! குழந்தையிடம் நாம்,அம்மா குத்து, திம்மா
குத்து”விளையாடும்போது, பிறருக்குத்தான் மிகவும் பலமாக குத்துவது போல
தெரியுமேயொழிய குழந்தையின் கையில் குத்து மெத்தாகத்தானேவிழும்! பரிஹசிப்பதாக
நமக்கு காட்டும்போதே, “இவரை விட அழகாக உரையாட நவகண்டத்தில் ஒருவர் உண்டா”
எனத்தக்க நாயகர். “மத்யமாவதின்னா என்ன?” அப்பாவியை விடவும் அப்பாவி போல்
கேட்டார். “ராகத்தின் பேரு” பாட்டுகாரரிடமிருந்து அப்பாவி பதில் வந்தது.
“அதுதான், நான் என்ன ராகம்னு கேட்டப்பவே மத்யமாவதின்னுட்டியே! அதையேதான
மறுபடியும் சொல்றே? மத்யமாவதின்ன என்னஅர்த்தம்?” “மத்யமம்னா “நடு” இல்லியா?
நடு பாகம் அவதியா இருந்த மத்யமாவதியா?” “பெரிவா எப்படி சொல்றேளோ அப்படி”
“புத்திசாலி”களான நாம், அந்த அப்பாவி போல அப்படி பெரியவா சொல்வதை வேதவாக்காக
கொள்வோமா? “எழுத்தாளன்”ன்னு என்னை கூப்பிட்டு,”மத்யமாவதிக்கு நான் குடுத்த
defenition கேட்டியோ?” “பாட தெரியாதவா பாடினா…….. மத்யமாவதி மத்யமத்துலே
மட்டுமில்லாம ஆரம்பம் – மத்யமம் அந்தம் எல்லாமே அவதியாத்தான்இருக்கும்”
என்றேன். சட்டென ஏதோ நினைத்து கொண்டார்ப்போல், பாட்டுக்காரரை பார்த்து, “நீ
இந்த பாட்டு பாடினதுக்கு என்ன காரணம்?” “அனாத ரக்ஷகி ஸ்ரீ காமாக்ஷி -ன்னு
வரதுதான்” “அதனால…” அடேயப்பா! அப்பாவியினும் அப்பாவியாக என்ன நடிப்பு!!
“பெரிவாளுக்கு காமக்ஷிதான் எல்லாம்; பெரிவாளே காமக்ஷிதான்-கிறதால” ஆஹா!!
அப்பாவி என்ன போடு போட்டு விட்டார்? “புத்திசாலி”களால் இயலாத எத்தகைய சகஜ
பாவத்துடன் சத்தியத்தை சொல்லி விட்டார்! சற்றேனும் இது போல அந்த புத்திசாலிகள்
சொன்னாலும், உடனே பேச்சை ‘அபௌட்டர்ன்” திருப்பி விடும் பெரியவா, அன்று அதை
தாமும் சகஜமாக ஏற்று கொண்டு “காமக்ஷிதான் எனக்கு எல்லாம், நானே காமக்ஷிதான் [
இப்படி அவர் இயல்பாக கூற கேட்டபோது உள்ளங்கால் முதல்உச்சந்தலை வரை ஜிவ்வென்று
சிலிர்த்தது!] ..ங்கரையே…நீ என்ன கண்டு பிடிச்சியோ? எதை வெச்சு
கண்டுபிடிச்சே? ” “பெரிவா” அப்பாவி தேம்ப ஆரம்பித்தார்,”கண்டு பிடிக்கல்லாம்
எனக்கு ஒண்ணும் தெரியாது, பெரிவா! ரொம்ப பேர் அப்படித்தான் சொல்லியிருக்கா.
எனக்கும் பெரிவாளை பாத்தா அப்பிடித்தான் தோணித்து” என்று தேம்பலுக்கிடையே
குழறி முடித்தார். அப்பாவி! உன்பாக்யமே பாக்கியம்!! பூலோகம் காணாத புஷ்ப்பமா
பெரியவா உட்க்கார்ந்திருந்தார். தேம்பல் தேய்ந்தது. குறும்பு குத்தலில்
மீண்டும் இறங்கினார் குருநாதர். “சரி……அனுபல்லவிலே “காமாக்ஷி”ன்னுனா
இருக்கு? ஒரு வேளை பாட்டு பிள்ளையார் பேர்ல இருக்குமோ என்னமோ! நீ பாட்டுக்கு
காமாக்ஷிபாட்டுன்னு பாடிட்டியே?” “என்ன தப்பா இருந்தாலும் பெரிவா
மன்னிச்சுக்கணும்” என்று அழ இருந்த பாட்டுக்காரரை, “அழாதேப்பா! அழாதேப்பா!
என்று சந்தனமாகஆற்றி கொடுத்தார். “தப்பு ஒண்ணும் சொல்லலேப்பா! “விநாயக”ன்னு
ஆரம்பிச்சுட்டு “காமாக்ஷி”ன்னு போறதேன்னு கேட்டேன்.அவ்வளவுதான். போகட்டும்,
பாட்டு என்ன பாஷை?” குறும்பு குத்தல்தான்! “தெலுங்கு” என்றார் பாட்டுக்காரர்.
“அப்படியா!” என்ற பெரியவா ஒரு “திம்திமா” குத்தே விட்டார்! அபூர்வ
ராகம்பாடினாப்ல, அபூர்வ பாஷையும் பாடரயோன்னுனா ஆச்சர்ரியப்பட்டேன்!” “பெரிவா
அனுக்ரகம்!” திம்திமாவையும் மெத்திலும் மெத்தாக ஏற்ற பதில்.பாட்டுக்காரர்
குறித்து முதலில் கோபமுற்றவன், அப்புறம் சிரித்தவன், பின்னர் பரிவு கொண்டவன்,
இப்போது அழுதுவிடுவேன் போலாயிற்று! “பாக்யசாலி !” உன் அப்பாவித்தனம் எனக்கு
வாய்க்குமா?” “புரிஞ்சாலும் சரி, புரியாவிட்டாலும் போகட்டும் [குறும்பு
குத்தல்] பெரியவா பேசறா, கேட்டுண்டயிருப்போம்னு ஒக்காந்திருக்கியே……
பஸ்போய்ட போறதுப்பா! என்ன டைம்?” என்று பறந்தார். பாட்டுக்காரரை பற்றி
சொன்னார். வலக்கை, இடக்கை தெரியாத ஆயப்பசங்களிடம் கீதையை தனக்குள் அடக்கி
கொண்டிருந்த ஞானச்சாரியனுக்கு இருந்த அதே பரிவு. பாட்டுக்காரருக்கு வேலூர்
தாண்டி ஏதோ கிராமமாம். “ஸ்வல்ல்ப்ப பூஸ்திதி. அதுதான் ஜீவனோபாயம். படிப்பு
பண்ற க்ருத்ரிமம் தெரியாம இருந்துண்டிருக்கான் [படிப்பு ஏறாததை இத்தனை அழகாக
ஏற்றம் கொடுத்து சொல்ல அந்த எளிமை தெய்வத்தால்தான் முடியும். இங்கே நம் அத்தனை
பேருக்கும் குறும்பு குத்தல்] விதந்து தாயாரும் ஒரே பிள்ளையான இவனுமா
இருந்துண்டிருக்கா. கல்யாணத்தை பத்தி யோஜனை போகலையாம். அவா பாட்டுக்கு ஒரு
கஞ்சியை, கூழை குடிச்சுண்டு ஒருத்தருக்கு ஒரு ஹானி செய்யாம நிம்மதியா
இருந்திண்டுருக்கா. பாட்டுன்னா இவனுக்கு கொழந்தை நாள்லேர்ந்து ஒரு ஆசையாம்.
சிக்ஷை சொல்லிக்க வசதி கெடயாது. யார் ஆத்திலயாவது,ஹோட்டல்லயாவது ரேடியோ,
ரெகார்ட் வெச்சா ஓடி ஓடி போய் கேக்கறதாம். தனக்கு இருக்கற க்ராஹ்ய சக்தியிலே
எவ்வளவு பிடிச்சுக்கமுடியறதோ பிடிச்சுக்கறதாம். லட்சியமும், மனோபாவமும்தான்
முக்யமே தவிர, கார்யத்ல என்ன சாதிக்க முடியுங்கறதா முக்கியம்! அப்படி,அங்க
இங்க ஓடி தன்னால முடிஞ்ச மட்டும் பாட்டு கத்துண்டு இருக்கான். என்ன பத்தி
கேள்விபட்டதிலேந்து… [பாட்டுக்காரரை பார்த்து]எப்போப்பா கேள்விப்பட்டே?”
“கனகாபிஷேகம் நடந்துதே அப்போ” “அதாவது, ஏழெட்டு வருஷமா, அம்பாள், கிம்பாள்”
ன்னு என்னை பத்தி யாரோ சொல்லி கேட்டதுலேர்ந்து என்கிட்டே ஒரே பக்தி
வந்துடுத்தாம்.எனக்கு பாடி காட்டணும் காட்டணும்..ன்னு ஆசையாம். “அதெல்லாம்
நம்மை அல்லௌ பண்ணுவாளன்னும் பயமாம். அதோட, காஞ்சிவரம் வந்துட்டு போறதுன்ன
ரெண்டு, மூணு ஆகுமே, அதுக்குகூட வசதி இல்லாத ஸ்ரமமாம்”…. பாட்டுக்காரரின்
தேம்பல் பெரியவாளை இழுத்தது. அருள்மயமாக அவர் பக்கம் திரும்பி, “அழாதேப்பா!
பணம் காசு வரும் போகும். நீஅதுக்காக பறக்காம இருக்கியே, இந்த மனசு யாருக்கும்
வல்லே; வரது துர்லபம். ஐநூறு ஆயிரம் சம்பாதிக்கற இளம் பசங்ககூட [சொன்னது
40வருஷங்கள் முன்னால்] அமெரிக்காவுக்கு ஓடலாமான்னு பாக்கற நாள்ல, பசங்களை
சொல்வானேன்? ஆயிரம், ரெண்டாயிரம் சம்பாதிச்சுரிடையர்ஆனவாகூட extension க்காக
இல்லாத தில்லு முல்லு பண்ற இந்த நாள்ல, போறும்கிற எண்ணம் வரதே இல்லே…ஏதோ வர
மாதிரிக்ஷணம் வந்தாலும் ஓடி போய்டறது. ஒனக்கு அது தன்னால வந்திருக்கு. அது
போகவும் படாது. என்னை பாக்கறதுக்காக கூட பணம் காசுவந்தா தேவலையேன்னு
நெனைக்காதே. நா… ஒன் கூடவேதான் இருக்கேன்னு வெச்சுக்கோ…….” யாருக்கு
கிடைக்கும் அந்த சர்வகால சஹவாச வாக்குறுதி! பாக்கிய அப்பாவி நெடுஞ்சாண்கிடையாக
நமஸ்கரித்தார்.
“என்னைபத்திகேட்டதுலேர்ந்துபாக்கணும்,பாடணும்னுதவிக்கஆரம்பிச்சுட்டான்……..ஏழெட்டு
வருஷமா எனக்காக தவிச்சிருக்கான். தபஸ் இருக்காப்ப்லேயே……..இப்பத்தான்
வாழ்நாள்ல மொதல் தரமாsavings ன்னு ஒரு பத்து பதினஞ்சு கையிலே
சேந்துதாம்…..அது அப்படியே பெரியவாளுக்குன்னு [பெரியவா அடக்கிகொண்ட போதிலும்
அவரதுஉள்ளுருக்கம்அந்த வார்த்தைகளில் ஜாடை காட்டியது]
பஸ் சார்ஜ் போக, மீதிக்கு எனக்கு புஷ்பம், பழம், இதோ மாலைபோட்டுண்டிருக்கேனே,
இது எல்லாம் வாங்கிண்டு ஓடி வந்துட்டான் [ஓஹோ! மாமுனிவர் கழற்றாமல்
அணிந்திருந்த மாலையின் ரகசியம்இதுதான?] திரும்பி போறதுக்கு சரியா என்ன பஸ்
சார்ஜோ அவ்வளவுதான் கையிலே வேச்சுண்டிருக்கான்” அடாடா! அப்பாவி! உன் பக்தி
மட்டுமில்லை, அபரிக்ரஹமும், த்யாகமும்கூட எங்களுக்கு கனவிலும் வராது! அந்த
பாகியசாலிக்கு ஏதேனும் பணிபுரிய வேண்டுமென எனக்கு உந்துதல் ஏற்ப்பட்டதால்,
“ராத்திரி பூஜை பாத்துட்டு போறமாதிரிதான்வந்திருக்கேன். அதனால, அவரை எங்க
வண்டியிலே கிராமத்துக்கு கொண்டு விட்டுட்டு வர சொல்லவா?” உடனே பெரியவா
பளிச்சென்று சொன்னார் “அந்த சவுகர்யத்துக்கேல்லாம் அவனை காட்டி கொடுக்காதே!
[காட்டிகொடுக்காதே….என்ன அர்த்தபுஷ்ட்டியான பதப்ரயோகம்!]
“பாத்தியா…….பெரிய எழுத்தாளர் ஒன்கிட்ட எவ்வளவு பிரியமா இருக்கார்?
அதுக்காக அவர் எழுதறது, எதையாவது படிச்சுட்டு திண்டாடாதே! அவர் பணம், காசு
கொடுத்தா தொடாதே! கார் சவாரி பண்ணி வெக்கறேன்னாலும் ஒத்துக்காதே !” பையன்
சொன்னார் “நான் படிக்க மாட்டேன் பெரிவா! எனக்கு அதெல்லாம் புரியாது; காசும்
யார்கிட்டேயும் வாங்கறதில்லே, பெரிவா; கார் சவாரிக்கேல்லாம் ஆசைப்படலை பெரிவா!
பெரிவா ஆசிர்வாதந்தான் வேணும்” “வேண்டியமட்டும் தரேன் ” என்று வாரிவிட்ட
வள்ளல் பாகியசாலியிடம் “ஒனக்கு நாழியாச்சு…..சட்னு போய் சந்திர
மௌலீஸ்வரருக்கு நமஸ்காரம் பண்ணிட்டு வா, பிரசாதம் தரேன்” “சந்திர மௌலீஸ்வரர்னா
எந்த சுவாமி? எங்கே கோவில் இருக்கு?” என்று பெரியவாளையே கேட்டார், தன
அறியாமையாலேயே கண்களை மல்க செய்த பாக்கியசாலி.
“சந்திர மௌலீஸ்வரர்தான் இந்த மடத்துக்கு சுவாமி. அதோ அங்கேதான் நாங்க அவரை
வெச்சுண்டு தங்கி இருக்கோம். போய் நமஸ்காரம்பண்ணிட்டு ஓடி வா” “மடத்து சுவாமி
காமாக்ஷி அம்மன் இல்லியா?” “அவளுந்தான். அவ மடத்துக்கு மட்டும் இல்லாம ஊர்
உலகத்துக்கெல்லாம் பொதுவா காஞ்சிபுரத்ல பொது கோவில்லஇருக்கா……..அவளேதான்
இந்த மடத்தை பாத்துக்கறதுக்காக, இந்த மடத்து சாமியார்கள் மட்டும் பூஜை
பண்ணறதுக்காக – ஆனா மடத்துக்காக மட்டும் இல்லாம, லோகம் பூராவுக்குமாக பூஜை
பண்றதுக்காக – சந்திர மௌலீஸ்வரர்ன்னு அவளோட ஆத்துக்காரர் [ எளியவர்க்கேற்ற
எளியபத பிரயோகம்] அவரை ஸ்படிக லிங்க ரூபத்திலே இங்கே அனுப்பிச்சு வெச்சு, அவர்
பக்கத்திலே தானும் வேறே ஒரு மாதிரி ரூபத்திலே [ ஸ்ரீசக்ரம், மேரு என்றெல்லாம்
சொல்லி அவரை திண்டாட வைக்காத அருமை பாருங்கள்] இருக்கா. கவசமும் அலங்காரமும்,
புஷ்ப்பமுமாபோட்டிருக்கரதாலே ஒனக்கு லிங்கம், அம்பாள்ன்னு எல்லாம் ஒண்ணும்
ஸ்பஷ்ட்டமா தெரியாது. அதுக்காக தேடிண்டு இருக்காதே! “இங்கேசுவாமி இருக்கார்
ன்னு ” நெனச்சுண்டு ஒரு நமஸ்காரத்தை பண்ணிட்டு ஓடி வா” அவர் போனதும் என்னிடம்
“நீ அவனை கார்ல அனுப்பி வெச்சு கார், மோர் ன்னு போய் கிராமத்தல எறங்கரான்னு
வெச்சுக்கோ, அப்பா ஒருமெதப்பு எண்ணம் வந்தாலும் வந்துடலாம். அவனுக்கு எதுக்கு
அதெல்லாம்? அவனுக்கு வசதி வேண்டாம், சவுகர்யம் வேண்டாம், status,தோரணை ஒண்ணும்
வேண்டாம். அறிவு, வித்வத்கூட வேண்டாம். ஆமாம், வேண்டாந்தான்! சொல்றேன் கேளு”
“சமீப காலமா வேலூர்லேர்ந்து ஒரு பாட்டு வாத்யார் என்கிட்டே வந்துண்டு
இருக்கார். ஓரளவு விஷயம் தெரிஞ்சவர்; அதைவிட [குறும்பானசிரிப்புடன்]
பொறுமைசாலின்னும் தெரியறது………நான் சொன்னேன்னா…..இவனுக்கு ப்ரீயாவே
கத்துக்கொடுப்பார். அப்படி பண்ண அவருக்குஅபிப்ராயமில்லேன்னு தெரிஞ்சாலும்,
நான் யார் தலையிலாவது கை வெச்சு அவனுக்காக சம்பளம் கட்டறதுக்கு ஈஸியா
ஏற்பாடுபண்ணிடலாம்…….ஆனா அந்த மாதிரி எதுக்கும் அவனை நான் காட்டி கொடுக்க
நெனைக்கலே …..சரியா பாடறதுங்கர சாமர்த்தியம் கூடஅவனுக்கு வேண்டாம். அவன்
பாட்டுக்கு இருக்கறபடி இருக்கட்டும். இப்ப பாடறபடியே பாடிண்டு போகட்டும்.
தற்கால புத்திசாலி உலகத்திலேயும் தப்பி தவறி, இந்த மாதிரி அசடா இருக்கறவா,
நித்திய அசடாவே இருக்கட்டும். அவாளை கெடுக்க வேண்டாம்னே எனக்கு இருக்கு”
சந்திர மௌலீஸ்வரர் யாரென்று தெரியாமலே, நடமாடும் சந்திர மௌலீஸ்வரியால் இன்றைய
புத்திசாலி உலகுக்கு மாற்று மருந்தாக போற்றப்பட்ட பாகியசாலி, அவர் சொன்னபடியே
நமஸ்கரித்து விட்டு வந்தார். “நமஸ்காரம் பண்ணிக்கோ நாழியாச்சு!”பிரிய
மனமின்றி, கண்ணீரும் கம்பலையுமாக பாக்கியசாலி நமஸ்கரித்தார்………..நீ
பாடினியே, அந்த விநாயகனை ரக்ஷிக்கராப்ல ஒன்ன அம்பாள் எப்பவும் ரக்ஷிசுண்டு
இருக்கட்டும்” என்று ஆசிர்வதிக்கவே ஏற்ப்பட்டதிருக்கரத்தை தூக்கினார்
“அப்பாவியின் பாட்டுக்கு, அபயம் கிடைத்தiது”
Popular Categories



