பெரியவாளிடம் ஒருவர் வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு கொஞ்சம் தயங்கி நின்றார்.
” என்ன?” என்பது போல் பெரியவா பார்த்தார்.
” இல்ல….வந்து….எங்கம்மாக்கு புத்தி ஸ்வாதீனம் இல்ல……”
பெரியவா எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“… வாஸக்கதவை தொறந்து போட்டுட்டு எங்கியாவது போய்டறா! அப்றம் அங்க இங்க அலஞ்சு தேடி கண்டு பிடிக்க வேண்டியிருக்கு! ஆத்துல வேற யாருமே இல்ல….அதுனால,……….”
“அதுனால?…..”
“அம்மாவ….மடத்துல கொண்டு வந்து விட்டுடலாமா?……” இழுத்தார்.
“நல்லவேளை….எங்கியாவது கண்காணாத காட்டுல கொண்டு போய் விட்டுடலாமான்னு கேக்காம, அந்த மட்டுல, எங்கிட்ட கொண்டு வந்து விடலாமான்னு கேக்கத் தோணித்தே ஒனக்கு!”
பெரியவா சற்று கடுமையாகவும், வேதனையோடும் கூறினார்.
“பாரு ….தாயார்ங்கறவ தெய்வம்! ‘தாயாருக்கு மேல் தெய்வமில்லே; ஏகாதஸிக்கு மேல் வ்ரதமில்லே’ன்னு பழமொழியே உண்டு. என்ன பண்ணறது? தாயார்கள் பாடு இந்த மாதிரி ஆயிடுத்து!.” என்று சொல்லிக் கொண்டே எழுந்து உள்ளே போய் விட்டார்.
பக்தரோ….”ச்சே! என்ன செஞ்சுட்டேன்! பெரியவாகிட்டயா இப்டி பேசிட்டேன்!” தவித்துவிட்டார்! அதோடு, தன் தவறை உணர்ந்தும் விட்டார்.
பெரியவா கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தார்.
“பெரியவா க்ஷமிக்கணும். எங்கம்மாவைப் பத்தி தப்பா பேசிட்டேன்” கெஞ்சினார்.
ஶாந்தரூபமான பெரியவா அவரை முன்னிட்டு, நம் எல்லோருக்கும் [முக்யமாக, ‘பெரியவாதான் எல்லாம்! ‘ என்று சொல்லிக் கொண்டு அலைபவர்களுக்கும்] முக்யமான உபதேஸத்தை அருளினார்.
“வயோதிக காலத்ல பெத்தவாளை காப்பாத்த வேண்டியது பிள்ளேளோட கடமை; அம்மா, அப்பா ஶாபம் குடுத்தா……… பின்னால வர்ற குடும்பமே வீணாப் போய்டும்! தனியா ஒன்னால அம்மாவை கவனிச்சுக்க முடியலேன்னா…ஒரு ஆஸாமியை ஒத்தாஸைக்கு வெச்சுக்கோ…. ! பத்து கொழந்தேள்னாலும், அம்மாக்காரி கஷ்டமோ, நஷ்டமோ வளக்கலையா? பாவம் ஏதோ கர்மா….புத்தி ஸ்வாதீனத்ல இல்லேன்னா….தொரத்தி விட்டுடுவேளா எங்கியாவது? மனுஷாளுக்கும், ம்ருகத்துக்கும் அப்றம் என்ன வித்யாஸம்? இதே நீ பெத்த கொழந்தைன்னா….இப்டி கேப்பியா?”
” மன்னிச்சிடுங்கோ! பெரியவா மனஸை ரொம்ப நோக அடிச்சுட்டேன். அம்மாவை நல்லபடி பாத்துக்குவேன்…..”
“ஸந்தோஷம்….. லோகத்ல, எத்தனையோ கொழந்தேள் அனாதையா திரியறதுகள். அம்மாங்கறவ நம்மளுக்கு அந்த அனாதைப்பட்டம் கெடைக்காம பரம உபகாரம் பண்ணியிருக்கா…..அவளோட வ்ருத்த தஸைல, அவளை நல்லபடி கவனிச்சுக்கற பாக்யம் எல்லாருக்கும் கெடைக்காது….ஒனக்கு கெடச்சிருக்கு….”
ஆஸிர்வாதம் செய்தார். கண்களில் கண்ணீரோடு, தன் அம்மாவுக்கு நல்லதொரு பிள்ளையாக, திரும்பிப் போனார் அந்த பக்தர்.
இன்று பெரியவா ஸ்தூலமாக நம்மிடையே இருந்தால்??? இப்போதைய காலகட்டத்தில் ஓரளவு வஸதி படைத்த பல பெற்றோர்களும் கூட, ஸ்வதந்த்ரமாக, பிக்கு பிடுங்கல் இல்லாமல் வாழ விரும்புவதால், இது சர்ச்சைக்குரிய விஷயம் என்று விட்டிருப்பாரோ என்னவோ? ஏனெனில் யாரையுமே குற்றம் சொல்ல முடியாது.
எப்படியிருந்தாலும், கையில் காஸும் இல்லாமல், பெற்று வளர்த்த குழந்தைகளும் “இருக்கியா? செத்தியா?” என்று கவனிக்காமல், நம்முடைய ஸ்ரீமடம் மற்றும் சில நல்ல உள்ளங்களால் நடத்தப்படும் இலவஸ முதியோர் இல்லங்களில் தங்கள் கடைசி காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
– ஏ.பி.ராமன், சிங்கப்பூர்



