ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-12)

Published:

bharathi theerthar

ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும்: (பகுதி-12)
– மீ.விசுவநாதன்

“கோபத்தை ஜெயித்தல்”

ஒரு சமயம் மைசூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த காட்டு இலாகா மேலதிகாரி ஒருவர் சிருங்கேரிக்கு வந்து சேர்ந்தார். ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயத்தில் தரிசனம் செய்து விட்டு ஸ்ரீ மகாசன்னிதானத் தினிடத்தில் (ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதாநந்த சிவாபிநவ நரஸிம்ஹ பாரதீ (33ஆவது பீடாதிபதி) நமஸ்கரித்துத் தெரிவித்துக் கொண்டார்.

மஹா: இந்தக் காட்டிலாக்கா உத்தியோக முறையில் நீங்கள்தான் மேலான அதிகாரியோ?

அதிகாரி: எனக்குமேல் அதிகாரிகள் இருந்த போதிலும் என்னையும் ஒரு மேலதிகாரி என்று சொல்லலாம்.

மஹா: உங்களுக்குள்ள மேலதிகாரப் பதவியை வகிப்பதில் கோபம் வருவதற்கு நிமித்தங்கள் ஏற்படுமோ?

அதிகாரி: நிறைய ஏற்படுகிறது.

மஹா: கோபித்துக் கொள்கிறவர்கள் மூன்று விதம். தனக்குக் கோபம் வரப்போகிறதென்று தெரிந்தவர்கள் சிலர். தனக்குக் கோபம் வந்திருக்கின்றது என்று தெரிந்து கொண்டவர்கள் சிலர். தனக்குக் கோபம் வந்துவிட்டுப் போய் இருக்கிறது என்று பின்னல் உணர்பவர்களே பெரும்பாலோர். நீங்கள் இந்த மூன்று வகையில் எதைச் சேர்ந்தவர்கள்?

அதிகாரி: எனக்குக் கோபம் வருகிறது என்று முன்னாலேயே தெரிகிறது.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

மஹா : அப்படியா? நிரம்ப ஸந்தோஷம். கோபம் வரப்போகிறது என்று தெரியும். ஷணத்தில் கோபம் வந்திராது. வாஸ்தவமாக கோபம் வந்ஹு விடுவதற்கு முன் கொஞ்சம் இடைவெளியிருக்கும். அந்த இடைவெளியில் வரப்போகிற கோபத்திற்கு இடம்கொடுக்க வேண்டியது அவசியம் தானா என்று ஒரு ஷணம் ஆலோசனை செய்து விட்டு, அவசியம்தான் என்று ஏற்பட்டால் பின்னல் கோபித்துக் கொள்ளலாம். அவ்வளவு அவசியம் இல்லை என்று ஏற்பட்டால் கோபித்துக் கொள்ளாமல் நிறுத்தி விடலாம். இவ்விரண்டிற்கும் ஸ்வாதந்திரியம் உண்டு. அதை உபயோகித்துக் கொண்டால் எப்பொழுதும் நல்லது. கோபம் வந்திருப்பதாகத் தெரிகிறவர்களும், அவ்விதம் தெரிந்தவுடன் மேலால் கோபித்துக் கொள்வது அவசியம்தானா என்று சற்று ஆலோசித்தால் அந்த கோபத்தின் வேகம் குறையும். அப்யாசத்தினால் கோபமே நின்றுவிடும். அப்படியே கோபத்திற்கு பரவசர்களாகி , கோபம் வந்துவிட்டுப் போனதாகப் பின்னல் உணர்கிற மூன்றாவது விதத்தவர்களும், நாம் கோபித்துக் கொண்டது நியாயம் தானா என்று கொஞ்சம் ஆலோசனையில் இறங்கும் அப்யாசத்தில் ஈடுபடத் தொடங்கினால், அவர்களுக்கும் கோப வேகம் குறைந்து கோபம் வருவதே நின்றுவிடும். ஆகையால் கோபம் வரும்போதெல்லாம் அதன் காரணத்தைப் பற்றி சற்று பரிசீலனை செய்கிறதென்ற வழக்கம் ஏற்படுத்திக் கொண்டால் மிகவும் அனுகூலமாயிருக்கும்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

அதிகாரி: ” தாங்கள் சொல்லியபடி செய்து பார்க்கிறேன்” என்று சொல்லி உத்தரவு வாங்கிக்கொண்டார்.

(ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் எழுதிய “ஸ்ரீமத் ஆசார்யேந்த்ர வைபவம்” என்ற நூலில் இருந்து பகிரப்பட்டது.)


“கோபத்தை வெற்றிகொள்”

bharathi theerthar - 2026

ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் 2012ம் வருடம் தமிழ்நாட்டில் விஜய யாத்திரை மேற்கொண்டார்கள். அதுசமயம் திருப்பூரில் செய்த அருளுரையில் கோபத்தை ஜெயிக்க வேண்டும் என்றும் அதற்கான வழியையும் கூறினார்.

“கோபம் மிகக் கொடியது. கோபம் வந்தால் என்ன பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம் என்று தெரியாது. கோபத்தில் குருவைக்கூட நிந்தனை செய்து விடுவோம். சரி அந்தக் கோபத்தை எப்படி ஜெயிக்க முடியும் என்று கேட்டால், கோபம் வரும் பொழுது “சிரிச்சுடு” (சிரித்து விடு) என்று சொல்லுவேன்.

இப்படி நாங்கள் சொன்னதை நமது சிஷ்யர் ஒருவர் புத்தகமாகப் போட்டிருக்கிறார். அந்த புத்தகம் ஒரு முஸ்லீம் அன்பருக்குக் கிடைத்திருக்கிறது. ஒரு நாள் வெளியூருக்குச் செல்லும் பொழுது விமான நிலையத்தில் நேரம் கிடைக்கும் பொழுது அவர் அந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறார்.

அதைப் படிப்தற்குச் சில நாட்களுக்கு முன்பாக அவருக்கும் அவருடைய நண்பருக்கும் நடந்த வாக்கு வாதத்தில் கோபம் வந்து இருவருக்கும் பேச்சு வார்த்தையே இல்லாமல் போய்விட்டதாகவும், உங்களுடைய அந்த உபதேச மொழிகள் அடங்கிய புத்தகத்தைப் படித்த பிறகு என் கோபத்தை மறந்து அந்த நண்பரின் வீட்டிற்கே சென்று சிரித்துப் பேசினேன். பகையை மறந்து மீண்டும் சேர்ந்து விட்டோம். நீங்கள் சொன்னது போலவே இப்பொழுது கோபம் வந்தால் சிரிக்கப் பழகிக் கொண்டு வருகிறேன். இதற்காக உங்களை நான் வணங்குகிறேன் என்று அந்த முஸ்லீம் அன்பர் ஒரு கடிதத்தை எங்கள் மடத்திற்கே எழுதி இருக்கிறார்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

இங்கே கடிதம் எழுதியவர் முஸ்லீமா, இந்துவா என்பது அல்ல முக்கியம்.. கோபத்தை சிரித்தே ஜெயிக்க முடியும் என்பதுதான் முக்கியம், அதற்காகத்தான் இந்தச் செய்தியை இங்கே சொன்னேன்.”

(வித்யையும் விநயமும் தொடரும்)

Related articles

Recent articles

spot_img