திருப்புகழ்க் கதைகள் 151
- முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்
அவனிதனிலே பிறந்து – பழநி
மூலாகமங்களும், உபாகமங்களும்
கிரியாபாதம், சரியாபாதம், யோகபாதம், வித்தியாபாதம் ஆகிய கருத்துக்களை விளக்க எழுந்தவை 28 மூலாகமங்கள் ஆகும். அவை காமிகம் முதலானவை. எல்லா ஆகமங்களும் எல்லாக் கருத்தையும் ஒருசேரக் கூறாமல் சில சில கருத்துக்களை மிக விரிவாகவும் மற்றவற்றைச் சுருக்கியும் கூறுகின்றன. அவ்வாறே 207 உபாகமங்கள் மூலாகமங்களின் அடிப்படையில் சிற்பச் செய்திகளையும், பலவிதமான உற்சவங்கள் முதலியவற்றையும் விளக்குகின்றன.
மூலாகமங்களில் கூறப்படும் கிரியைகள் மிகச் சுருக்கமாகவும், அடிப்படைகள் விரித்துக் கூறப்படாமலும் இருப்பதால் சீடர்கள் எளிதில் அக்கிரியைகளை இயற்றுவதற்காக கிரியாபாதச் செய்திகளை ஆகமங்களிலிருந்து திரட்டித் தொகுத்துக் கிரியைகளைச் செய்யும் முறையுடன் விளக்குவன பத்ததிகள் எனப்படுவன; அவை முற்காலத்திலிருந்து போஜதேவர், பிரஹ்மசம்பு, வருணசம்பு, ஸோமசம்பு, அகோரசிவர் முதலான பல சைவ ஆசாரியர்களால் இயற்றப்பட்டவை.
அதைப் போன்றே, மஹோத்ஸவம், பிரதிஷ்டை, பிராயச்சித்தம் ஆகிய ஒவ்வொரு தலைப்பின் அடிப்படையிலும் ஆகம சுலோகங்களைத் தொகுத்துக் கூறுவன ஸகலாகமஸங்கிரஹம் எனப்படும் தொகுப்பு நூல்கள். இவையும் பற்பல காலங்களில் தொகுக்கப்பட்டுள்ளன.
மற்றெந்த ஆகமவகைக்கும் இல்லாத தனிச் சிறப்பு ஒன்று சைவசித்தாந்த ஆகமங்களுக்கு உண்டு. அது மிகப் பழங்காலந்தொட்டே ஆகமங்களுக்கு ஆசாரியர்கள் இயற்றிய வியாக்கியானம் என்னும் உரைநூல்கள். உக்ரஜ்யோதி, ப்ருஹஸ்பதி, ஸத்யோஜ்யோதி முதலான ஆசாரியர்கள் ரௌரவம் ஸ்வாயம்புவம் முதலான ஆகமங்களுக்கு உரை எழுதியுள்ளனர். இவர்கள் ஆறாம்-ஏழாம் நூற்றாண்டுகளில் காஷ்மீரதேசத்தில் பெரும்பாலும் வாழ்ந்தவர்கள்.
1. ஸத்யோஜ்யோதி சிவாசாரியார்
இவர்களுள் ஸத்யோஜ்யோதி சிவாசாரியாருடைய ஸ்வாயம்புவாகம உரையும் மற்றநூல்களுமே நமக்குக் கிடைத்துள்ளன. இவையே இன்று நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான ஆகம உரைகள். மேலும், இவ்வாசாரியர் ரௌரவாகமம், ஸ்வாயம்புவாகமம் ஆகியவற்றின் அடிப்படையில் அவ்வாகமங்களின் ஞானபாதக் கருத்துக்களைச் சுருக்கி தத்வத்ரயநிர்ணயம், தத்வஸங்க்ரஹம், போககாரிகை, மோக்ஷகாரிகை, பரமோக்ஷநிராஸகாரிகை ஆகிய நூல்களையும், பௌத்தசமயக் கொள்கைகளைக் கண்டித்து தனியாக ஆன்மாக்களும், அனைத்துலகங்களுக்கும் ஆன்மாக்களுக்கும் தலைவனாகச் சிவபெருமானெனும் பரம்பொருளும் உண்டு என்னும் கருத்தை மிக்க வாதத்திறமையுடன் நிறுவும் நரேச்வரபரீக்ஷா என்னும் நூல்களையும் இயற்றிச் சைவசித்தாந்த சாத்திரத்திற்கு மிக வலிமையான ஆதாரத்தையும் தத்துவக் கோட்பாடுகளின் அடித்தளத்தையும் அமைத்துத் தந்துள்ளார்.
இவர் காலத்திற்குப் பின்னர் தோன்றிய அனைத்துச் சைவ நூல்களிலும், உரைநூல்களிலும் இவருடைய நூல்களிலிருந்து ஏராளமான மேற்கோள்கள் எடுக்கப்படுகின்றன; அந்நூல்களை மேற்கோளாக எடுக்காத சைவஆசாரியரோ வியாக்கியான நூலோ இல்லை என்றே கூறலாம். சைவர்களின் புண்ணியத்தினால் இவ்வாசிரியரின் அனைத்து நூல்களுக்கும் அகோரசிவாசாரியாரும் இராமகண்டர் என்னும் புகழ்மிக்க ஆசாரியரும் நூற்கருத்துக்களை நாம் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் உரைகளை எழுதி நமக்குப் பேருதவி புரிந்துள்ளனர்.
2. இராமகண்ட சிவாசாரியார்
ஸத்யோஜ்யோதி ஆசாரியர் இட்ட அடித்தளத்தில் சைவசித்தாந்தத் தத்துவக்கோட்பாடுகளின் (Śaivasiddhānta Philosophy) மிக விசாலமான கட்டிடத்தை நிறுவியவர் இராமகண்ட சிவாசாரியார். மற்ற தரிசனங்களான பௌத்தம், நியாயம், மீமாம்ஸை முதலிய அனைத்துச் சாத்திரங்களிலும் மிக்க புலமை பெற்று அச்சாத்திரக்கருத்துக்களைத் தமது வாதத் திறமையினால் வென்று சைவசித்தாந்த சாத்திரத்தை வளர்த்தவர் இவ்வாசாரியர். இக்காலகட்டத்தில் வைதிகம் மற்றும் ஆகமநெறிகளுக்கு எதிராகப் பௌத்தசமயம் குறிப்பாகக் காஷ்மீரம் முதலிய தேசங்களில் ஓங்கிப் பரவியிருந்ததால் ஸத்யோஜ்யோதி, இராமகண்டர் ஆகியோருடைய நூல்களில் பௌத்தமதக் கொள்கைகள் மிக விரிவாக ஆராயப்பட்டு மறுக்கபடுவதைக் காணலாம்.
இவர் கிரணாகமத்தின் ஞானபாதம், மதங்கபாரமேசுவராகமத்தின் நாற்பாதங்கள் ஆகியவற்றிற்கு மிக விரிவான வியாக்கியானங்களை இயற்றியுள்ளார். 350 சுலோகங்கள் கொண்ட ஸார்த்தத்ரி-சதிகாலோத்தர-ஆகமத்திற்கு ஒரு விரிவான வியாக்கியானமும் இவர் இயற்றியதே. சைவாகமங்களின் மந்திரசாத்திரத்திற்கு அடிப்படைக் கொள்களை வரையறுத்து நிலைபெறச் செய்த மிக முக்கிய உரைகளுள் இதுவும் ஒன்று.
இவருடைய எல்லையற்ற புலமையும், வாதத்திறமையும், சைவாகமங்களில் அவருக்கிருந்த ஆழ்ந்த பயிற்சியும், எல்லாவற்றிற்கும் மேலாக சைவத்தில் அவர்கொண்டிருந்த பற்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இவருடைய நூல் நடை சற்றுக் கடினமானது; காஷ்மீரதேசத்தில் அக்காலத்திலிருந்த வித்வான்களின் அனைத்துச் சாத்திரப்புலமைக்கும் ஒரு எடுத்துக் காட்டாக இவர் விளங்குகிறார். சைவாகமங்கள் சிவபெருமானால் அருளப்பட்டவை; அவையும் நால்வேதங்களுக்குச் சமமான பிரமாணம் கொண்டவை. அவை வேதநெறிக்குப் புறம்பானவை அன்று என வாதிட்டு ஸர்வாகமப்ராமாண்யம் என்னும் நூலையும் இவர் இயற்றியுள்ளார். ஆனால், அந்நூல் முழுவதும் இன்று நமக்குக் கிடைக்கவில்லை.
இதே காலத்தில் வாழ்ந்த யாமுனாசாரியார் என்னும் வைணவ ஆசாரியர் பாஞ்சராத்திர ஆகமங்கள் தான் பிரமாணம் உடையன; பாசுபதம், காபாலம் முதலான சைவாகமங்களோ ஏற்கப்படக் கூடியன அல்ல எனத் தம்முடைய ஆகமப்ராமாண்யம் என்னும் நூலில் கூறுகிறார்.
ஸத்யோஜ்யோதியின் நரேச்வரபரீக்ஷா என்னும் நூலுக்குப் ப்ரகாசிகா என்றதொரு விரிவான உரையில் சைவாகமங்களின் ப்ராமாண்யத்தையும், பசுக்களாகிய ஆன்மாக்கள் தனியே உண்டென்றும், பரம்பொருளாகிய சிவபெருமானின் குணங்களையும் நமக்கு எடுத்துரைக்கிறார். சைவஸித்தாந்தத்தின் ஆரம்பகால வளர்ச்சியையும், தனிக்கொள்களையும் ஆழ்ந்து அறிவதற்கு இன்றியமையாத நூல்கள் இவை. இராமகண்டரின் சீடர் ஸ்ரீகண்டர் இரத்னத்ரயம் என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூலும் மிக முக்கியமானது.