spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: பாதி மதி நதி

திருப்புகழ் கதைகள்: பாதி மதி நதி

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் 313
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

பாதி மதி நதி– சுவாமி மலை

     அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி இருபத்தி எட்டாவது திருப்புகழான “பாதி மதி நதி” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, இயமபயம் உண்டாகா வண்ணம் உமது திருவடித் தொழும்பைத் தருவீர்”என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

     இளம் வயதில் நான் ஒரு முறை என் குடும்பத்தாரோடு பூம்புகார் சென்று வந்தேன். ஒரு கடற்கரைக்குச் செல்வது அதுதான் முதல் முறை. கடலலையில் கால் நனைய நிற்பது மிகவும் இன்பமூட்டுவதாக இருந்தது. மாலையில் வீடு திரும்பிவிட்டோம். ஆனால் என்னால் தரையில் நிற்க முடியவில்லை. அப்படி நின்றால் என் காலுக்குக் கீழ் தரை நகர்வது போல ஓர் உணர்வு. நான் அழத்தொடங்கினேன். உறவினர்கள் நான் அழுவதைக் கண்டு கேலி செய்தனர். நான் அழுவது கேட்டு என் தாயார் அங்கு வந்தார்கள். என்னைக் கட்டிப்பிடித்து, கண்ணைத் துடைத்து, “உனக்கு பயமாக இருந்தால் நான் ஒரு பாட்டு சொல்லித்தருகிறேன். அதப் பாடு எல்லாப் பயமும் போய்விடும்” எனச் சொல்லி இந்தப் பாடலைப் பாடினார்கள். அன்று முதல் நான் மறக்காத பாடல் இது. எளிய மெட்டு; சிரமம் இல்லாத பாடல் வரிகள்.

பாதி மதிநதி போது மணிசடை

     நாத ரருளிய …… குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்

     பாதம் வருடிய …… மணவாளா

காது மொருவிழி காக முறஅருள்

     மாய னரிதிரு …… மருகோனே

கால னெனையணு காம லுனதிரு

     காலில் வழிபட …… அருள்வாயே

ஆதி யயனொடு தேவர் சுரருல

     காளும் வகையுறு …… சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்

     சூழ வரவரு …… மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு

     வாமி மலைதனி …… லுறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட

     வேலை விடவல …… பெருமாளே.

     இத்திருப்புகழின் பொருளாவது – பிறைச் சந்திரனையும், கங்கா நதியையும், மலர்களையும் கருணையுடன் சூடிக்கொண்டுள்ள சடைமுடியையுடையவரும் எப்பொருட்கும் இறைவரும் ஆகிய சிவபெருமான் பெற்றருளிய திருக்குமாரரே; தனிப்பெருந் தலைவரே; கற்கண்டின் பாகினையும் கனிரசத்தையும் ஒத்த இனிய மொழியையுடைய வள்ளி நாயகியாரது திருவடியைப் பிடித்து வணங்கிய கணவரே;

     கொல்லுவதற்கு என்று கணைவிட்டும், அடைக்கலம் புகுந்ததனால், ஒரு கண்ணைக் கொடுத்துக் காகத்திற்கு அருள் புரிந்தவரும், மாயவல்லபரும், பாவநாசகருமாகிய நாராயணமூர்த்தியினுடைய மருகரே; படைப்புத் தொழிலுக்கு முதல்வராகிய நான்முகக் கடவுளுடன் ஏனைய தேவர்களும், தங்கள் தங்கள் உலகங்களைப் பண்டுபோல் அரசுசெலுத்தி ஆளும்படி அவர்கட்குற்ற சிறையை நீக்கி மீட்டு, தாள ஒத்துக்கிசைய ஆடுகின்ற மயிற்பரியின் மீது எழுந்தருளி, தேவர் குழாங்கள் சூழ்ந்துவர பவனி வந்த என்றுமகலா இளமை யுடையவரே;

     மாமரங்கள் வளம்பெற மிகவும் வளர்ந்துள்ள குளிர்ந்த சோலைகள் பல சூழ்ந்து விளங்கும் சுவாமி மலையின் மீது உறைகின்றவரே; சூரபத்மனுடைய வச்சிரயாக்கை பிளவுபட்டழியவும் கடல் வற்றவும் வேற்படையை விட்டருளிய வல்லபத்தையுடைய பெருமித மிக்கவரே; கூற்றுவன் அடியேனிடம் அணுகாவகை உமது திருவடித் தாமரைகள் இரண்டையும் வழிபட்டு உய்யுமாறு அருள்புரிவீர் – என்பதாகும்.

     இத்திருப்புகழில் அருணகிரிநாதர் பாதி மதிநதி போது மணிசடை நாதர் அருளிய குமரேசா என முதல் பத்தியில் பாடுகிறார். தக்கன் கொடுத்த சாபத்தால் தேய்ந்து ஒளி மழுங்கிய சந்திரன் உள்ளம் நடுங்கி, வேறு புகலிடமின்றி சிவபெருமானிடம் சரண் புகுந்தான். பரமகருணாமூர்த்தியாகிய பரமேசுவரர் அவனுடைய குருதார கமனம் முதலிய குற்றங்களை நினையாதவராய் கருணைகொண்டு குறை மதியை தமது தலையிற் சூடிக்கொண்டு காத்தருளினார். பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா என சுந்தரரும் தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி என திருஞானசம்பந்தரும் பாடியிருக்கிறார்கள் என்பதை இங்கே நினைவுகூறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe