தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு!

Published:

tanjor - 2026

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு விழா நடத்தப்படும் என ஐகோர்ட் கிளையில் அரசு உறுதியளித்துள்ளது. இதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு அரசு மற்றும் தேவஸ்தான நிர்வாகத்துக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம், மோர்பண்ணையை சேர்ந்த வக்கீல் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”தஞ்சை பெருவுடையார் (பெரிய) கோயில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயில் யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது.

தொன்மையான இந்த ஆலயத்தில் வரும் பிப்.5ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. சைவ சமய நெறிப்படி அமைக்கப்பட்ட இந்த கோயிலில் 1997ல் பிரதிஷ்டை விழா நடந்தது. சமஸ்கிருத மொழியில் நடத்தப்பட்டதால் அப்போது பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பலர் இறந்தனர். தற்போது பிப்.5ல் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதேபோல் தஞ்சையைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவரும் ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோரது அமர்வில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன. நீதிபதிகள் நேற்று காலை வழக்குகளை விசாரிக்கத் துவங்கினர். அப்போது கரூரை சேர்ந்த வக்கீல் தமிழ் ராஜேந்திரன் மற்றும் பெ.மணியரசன் ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வக்கீல் சரவணன் என்பவர் சார்பில், ‘தஞ்சை பெரிய கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், குடமுழுக்கு நடத்த தொல்லியல் துறை அனுமதி பெறவில்லை. எனவே, தொல்லியல் துறை அனுமதி பெறவும், அனுமதியின்றி குடமுழுக்கு நடத்த தடையும் விதிக்க வலியுறுத்தி மனு செய்யவுள்ளதாக’ கூறப்பட்டது.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

இதேபோல், சென்னையை சேர்ந்த ரமேஷ் என்பவர் சார்பில், ‘சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் எனவும், இந்த மனுக்களையும் அவசர மனுவாக ஏற்று ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களோடு சேர்த்து விசாரிக்க வேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசு வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி, ”பெரிய கோயில் குடமுழுக்கு தொடர்பாக பதில்மனு செய்ய நாளை (இன்று) வரை அவகாசம் வேண்டும்” என்றார். இதையடுத்து முறையீடு செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை இன்று (ஜன.28) தள்ளி வைத்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் இன்று நீதிபதிகள் எம்.துரைசுவாமி மற்றும் டி.ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது கோயில் தேவஸ்தானம் சார்பில், ‘குடமுழுக்க நடத்த மத்திய தொல்லியல் துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஓதுவார்கள் மூலம் தமிழ் பெருமுறை மந்திரங்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவை இசைக்கப்பட உள்ளது. இதற்கென ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு, அந்த விபரம் அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1997ம் ஆண்டு தீ விபத்து நடந்ததால் இம்முறை யாக குண்டங்கள் அனைத்தும் கோயிலுக்கு வெளிப்புறம் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

தமிழக அரசு சார்பில், ‘குடமுழுக்கு விழா தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இருமொழிகளில் நடத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், ‘குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் பங்கேற்கும் வகையில் குடமுழுக்கு நடத்தப்படுகிறது இது தவிர்க்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின்படி அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்க உறுதி செய்யப்பட வேண்டும்.

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கல்லூரிகளில் அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகர்களாக பயிற்சி பெற்றுள்ளனர். குடமுழுக்கு விழாவை அவர்களும் பங்கேற்று நடத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது

இதையடுத்து, ‘தமிழக அரசு மற்றும் தேவஸ்தானம் சார்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக பிரமாண பத்திரம் நாளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுக்கள் மீதான விசாரணையை நாளை தள்ளி வைத்தனர்.

Related articles

Recent articles

spot_img