உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனத்திற்கு பின், மரகத நடராஜருக்கு புதிய சந்தனக்காப்பு அணிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
இங்கு ஆருத்ரா தரிசன விழா 11ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.அபூர்வ பச்சை மரகத நடராஜருக்கு தனி சன்னிதி உண்டு. ஆருத்ரா தரிசன விழா நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு துவங்கியது. சந்தனம் களையப்பட்ட மரகத நடராஜரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
ஆருத்ரா மகா அபிஷேகம், விசேஷ தீபாராதனை நிறைவேற்றப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணியளவில், அருணோதய காலத்தில் பச்சை மரகத நடராஜருக்கு புதிய சந்தனக்காப்பு இடப்பட்டு, சர்வ மலர் அலங்கார தீபாராதனை நடந்தது.
கோவில் அருகே கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான், மாணிக்கவாசகர் எழுந்தருளினர். உற்சவ மூர்த்தி உள் பிரகார வீதி உலா நடந்தது. தொடர்ந்து மரகத நடராஜருக்கு வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை செய்யப்பட்டு நடை சாத்தப்பட்டது.