திருப்பாவை – பாசுரம் 27 (கூடாரை வெல்லும் சீர்)

Published:

thiruppavai pasuram 27 - 2026

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:
முந்தைய பாசுரத்தில் தங்கள் நோன்புக்காக, சங்குகள், பறை, பல்லாண்டு இசைப்பார், கோலவிளக்கு, கொடி, விதானம் அனைத்தையும் அருள வேண்டும் என்று ஆய்ச்சியர் கண்ணனிடம் வேண்டினர். பின்னர், மார்கழி நீராட்ட நோன்புக்கு வேண்டியவை இவை. நோன்பு நோற்று தலைக்கட்டின பின்பு, நாங்கள் உன்னிடம் பெற வேண்டிய வெகுமதிகளும் உண்டு. அவற்றைப் பெற்று மகிழும்படி நீ எங்களுக்கு அருள்புரிய வேண்டும் என்று அவர்கள் கண்ணனிடம் பிரார்த்திக்கும் பாசுரம் இது.

தன் அடி பணியாதவர்களை வெல்லுகின்ற சீர்மைக் குணங்களைக் கொண்ட கண்ணபிரானே! கோவிந்தனே! உன்னை நாங்கள் வாயாரப் பாடி உன்னிடத்தே யாம் வேண்டுகின்ற பறையைப் பெற்று, அதன் பிறகும் யாம் பெறக்கூடிய சன்மானம் ஒன்றும் உண்டு… நாட்டிலுள்ளோர் புகழும்படியாக கையில் அணியும் ஆபரணமான சூடகங்களும், தோள் வளைகளும், காதுக்கு அணியும் ஆபரணமான தோடும் செவிப்பூவும், பாதகடகம் என்று சொல்லப்படும் ஆபரணங்களை அருள வேண்டும். இவையும் மற்றும் பல ஆபரணங்களும் உன்னாலும் நப்பினைப் பிராட்டியினாலும் கொடுக்கப்பட்டு யாம் நன்றாக அணிவோம். சேலைகளை உடுத்துக் கொள்வோம். அதற்குப் பிறகு பால் சோறானது மறையும்வண்ணம், நெய் பரிமாறி முழங்கையில் வழியும்படியாக உட்கொண்டு, நீயும் நாங்களுமாகக் கூடியிருந்து குளிர வேண்டும் என்று கண்ணனைப் பிரார்த்திக்கிறார்கள்.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

’நாடு புகழும் பரிசில்’ என்றனர். அதாவது, இந்த நோன்புக்காக மேற்கொண்ட செயல்களைக் கண்டு ஊரார் முன் இவர்கள் அவமானப் பட்டனராம். அந்த அவமானம் எல்லாம் மறக்கும்படியாக, “ஆ இந்தப் பெண்கள் கண்ணனைக் குறித்து நோன்பு நோற்று எப்படிப்பட்ட பேறுகளைப் பெற்றுவிட்டார்கள்?!” என்று அனைவரும் போற்றிக் கொண்டாடும்படி கண்ணன் பரிசில் தரவேண்டுமாம்!

இந்த நோன்புக்காக நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்று தவிர்த்தவர்கள், இன்று நோன்பு நோற்று முடிக்கின்றதால், உணவை வேண்டுகின்றனர். ஆய்ச்சிகள் உணவைத் தவிர்த்தனரே என்று கண்ணனும் உண்ணாதிருந்ததால், ஊரில் நெய்யும் பாலும் அளவற்றுக் கிடந்ததாம். எனவேதான் மூட நெய் பெய்து முழங்கை வழிவார உண்ண அழைக்கிறார்கள் கண்ணனை!

பசி தீர்வதற்காக உணவு அன்று, பிரிந்து பட்ட துயரம் தீருமாறு எல்லாரும் கூடிக் களித்திருக்க எண்ணியே கூடியிருந்து குளிர்ந்து என்கிறார் ஸ்ரீஆண்டாள்.

விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img