ஏழாம் பாசுரம் I – ஆட்கொண்டவில்லி ஜீயர் எழுந்தருளா நிற்கச் செய்தே, நஞ்சீயர் தண்டனிட்டு நிற்க, ” பகவத் விஷயத்தில் ருசி நமக்கு பிறந்ததில்லை காணும்” என்று அருளிச் செய்ய “உம்மைப்போல் ஆசாரியர்வான்கள் உண்டோ! இங்ஙனே அருளிச் செய்வான் என்”, என்ன பகவத் விஷயத்தில் மெய்யே ருசி உண்டு என்று இருக்கையாவது பாகவதர்களைக் கண்டால் உகக்கும் அன்று காணும் ..என்றருளிச் செய்தார். நாலாயிரப்படி.
ஆண்டாள் நாச்சியார் ஆறாம் பாசுரம் முதல் 15 ம் பாசுரம் வரை பல பாக்வதப் பெண்களை எழுப்பி கூடியிருந்து குளிர அழைக்கிறாள்.இதிலிருந்து பாகவதப் பிரபாவம் வெளிப்படுகிறது.
ஒரு முறை நஞ்சீயர் ஆட்கொண்டவில்லி ஜீயரை வணங்கி நிற்கையில், ஆட்கொண்டவில்லி ஜீயர், உண்மையாக எம்பெருமான் விஷயத்தில் ஈடுபாடு உடையவன் தான் இல்லை என்று தெரிவிக்க, ஸ்ரீ நஞ்சீயரும், இப்பேர்ப்பட்ட உத்தமமான நீர் இப்படி சொல்வதேன்? என்று கேட்க, அதற்கு எம்பெருமானுடைய அடியவர்களான பாகவதர்களைக் கண்டால் என்றைக்கு உகப்பு ஏற்படுகிறதோ அன்றுதான் எம்பெருமானுடைய விஷயத்தில் ஈடுபாடு பூர்த்தியாகும் என்று பதிலிறுத்தார்.
இங்கு டாக்டர் எம் ஏ வி ஸ்வாமியின் குறிப்பு நோக்கத்தக்கது. ஆட்கொண்டவில்லி ஜீயரை தண்டனிட்டு நஞ்சீயர் நிற்க, பதிலுக்கு அவரை ஆட்கொண்டவில்லி ஜீயர் வணங்க்வில்லை.
நஞ்சீயர் என்னும் ஸ்ரீவைஷ்ணவ அடியாரை தாம் வணங்காததால் தனக்கு பகவத் விஷயத்தில் உண்மையான ஈடுபாடு இல்லை என்று அவர் சொன்னதாகக் கொள்ளலாம் என்பது மிகவும் பொருத்தமாக உள்ளது.
II விடிவோர மாளிகையில் சென்று எழுப்புவாரும் கவி சொல்லுவாரும், வம்சாவளி ஒதுவாரமாக எழுந்திருக்க கடவ, இவர் பக்ஷிகளுக்கு முன்னே உணரும்படி ஆவதே என்ன தர்மஹானி என்று ஆய்த்தான் அருளிச் செய்தார் .. ஈராயிரப்படி.
அதாவது பறவைகள் ஒலியைக் கொண்டு திருப்பாவையில் விடிந்தமைக்கு அடையாளம் உணர்த்தப்படுகிறது. இப்படி சக்கரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமபிரான் காட்டிலே எழுந்தருளியிருக்கும்போது காலை விடிந்த அடையாளம் பறவை ஒலிகொண்டு தெரிவிக்கப்படுகிறது.
அப்போது ஆய்த்தான் என்பவர், ராஜாவான ஸ்ரீராமபிரான் காலையில் எழுந்திருக்கையில் இனிய பாடல்கள் பாடுவார்களும், பல்லாண்டு பாடியும், அவர் குலப் பெருமையயென்ன, வம்சம் என்ன என்று சொல்லி எழுப்ப வேண்டி இருக்க, இப்படி காட்டிலே பறவை ஒலிக் கொண்டு எழுந்திருக்க வேண்டி ஆகிவிட்டதே! என்று வருத்தப்பட்டாராம்.
- வானமாமலை பத்மநாபன்