புதுக்கோட்டை மாவட்டம் ஆவுர் புனித பெரியநாயகி மாதா ஆலய திருவிழாவையொட்டி அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.
இதில் செங்களாகுடியைச் சேர்ந்த அன்பு என்பவரின் காளையும் களம் கண்டது. வாடிவாசலில் சீறிக்கொண்டு வந்த அந்த காளை மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் திமிறிக்கொண்டு பாய்ந்து சென்றது.
இந்நிலையில் காளையின் உரிமையாளர் அன்பு வசமும் சிக்காமல் வயலுக்குள் புகுந்த அந்த காளை அங்கும் இங்கும் போக்கு காட்டி கடைசியாக மேலப்பட்டி என்னுமிடத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தது.
இதில் மின்சாரம் பாய்ந்து காளையானது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. காளையை கண்டு அந்த உரிமையாளர் கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.