ஈரோட்டில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ.40,000-த்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஈரோடு, சூளை, ஈபிபி நகர், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் இளங்கோ(43). இவர் அவரது மனைவி, மகன், மகளுடன் வசித்து வந்தார். இளங்கோ ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த 18ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு மொடக்குறிச்சியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு இளங்கோ குடும்பத்துடன் சென்றுவிட்டார். இந்நிலையில் இளங்கோவின் மாமியார் இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு இளங்கோவிற்கு தகவல் தெரிவித்தார்.
அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது 16 பவுன் நகை, ரூ.40,000 பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.