அட.. இந்தத் தமிழ்ப் பெயருக்குப் பின்னே… இவ்வளவு இருக்கா.. இளவேனில்?

Published:

ilavenil valarivan - 2026

சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் சாதனைப் பதக்கம் வென்று அசத்தினார் இந்தச் சுட்டிப் பெண். அவரது பெயர் உச்சரிக்கப் பட்ட போது, இளவேனில் என்ற தமிழ்ப் பெயர் மட்டும் பலருக்கும் பழக்கமானது. ஆனால்…

அதென்ன இந்த இளவேனிலுக்குப் பின்னர் வரும் இந்தப் பெயர் வளரிவான்… வளரிவன்… வாளறிவான்… என்றெல்லாம் குழம்பிக் குழம்பி பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சிலரோ, ஏன் இந்த வம்பு..? வெறும் இளவேனிலை மட்டும் போட்டுவிடுவோம் என்று வசதியாக அந்த Valarivan ஆங்கிலச் சொல்லைத் தவிர்த்து விட்டனர்.

அதுசரி…?! திருக்குறள் படித்திருந்தால் தெரிந்திருக்கும்…! தமிழர் என்று மார் தட்டி முன்னே நின்றால் போதாது…! தமிழர் இலக்கியத்தின் இலக்கை அடைய வேண்டுமானால், அது குறித்து தெரிந்திருக்க வேண்டுமே!

கற்றதனால் ஆய பயன் என்? கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்..?!

என்ற திருக்குறளைப் படித்தவர்களுக்கு இந்தப் பெயர் பழக்கமானது என்றாகியிருக்கும்!

இந்த வாலறிவனுக்கு திருக்குறளுக்கு உரையெழுதிய உரையாசிரியர்கள் எப்படி எல்லாம் கொடுத்தார்கள்…? சற்று பார்ப்போமே!

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

வால் அறிவன் – தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவன் -என்கிறார் மு.வரதராசனார்.

வால் அறிவன் நல் தாள் தொழா அர் எனின் -மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாதவராயின்… ஆகம அறிவுக்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவி அறுத்தல் என்பது இதனால் கூறப் பட்டது – என்கிறார் பரிமேலழகர்.

விளங்கின அறிவினை உடையவன் திருவடியைத் தொழார் ஆயின்?! – சொல்லினால் பொருள் அறியப் படும். ஆதலான் அதனைக் கற்கவே மெய் உணர்ந்து வீடு பெறலாகும் என்கிறார் மணக்குடவர்.

தேவநேயப் பாவாணர் தமது உரையில்… வால் அறிவன் நல்தாள் தொழார் எனின் -தூய அறிவை உடைய இறைவனின் நல்ல திருவடிகளைத் தொழாதவர் ஆயின்… என்கிறார்.

இந்தப் பெருந்தமிழர்கள் எல்லோரும் அறிவுடையவர் அல்லர் எனும் கருத்தில் பின்னாளில் திருக்குறளுக்கு உடை எழுதிய முத்தமிழ் வித்தவர் மு.கருணாநிதி, தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளர் என்று வாலறிவனுக்கு உரை எழுதினார். திருக்குறளின் மிக மோசமான திரிபு வாதத்தைப் புகுத்திய நாத்திக கருணாநிதியின் இத்தகைய விடம் தோய்ந்த கருத்துகளைத் தமிழர்கள் கைவிட்டார் என்றால், தமிழ் மரபு சீர்ப்படும்!

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

திருக்குறளில் காட்டப் பெற்ற வாலறிவனும், இறைவனுமே இந்த இளவேனிலின் பெருமையை வெளிக்காட்டியிருக்கிறது.

இளவேனிலின் தாத்தா பெயர் #உருத்திராபதி, அப்பா பெயர் #வாலறிவன், அண்ணன் பெயர் #இறைவன், தங்க மங்கை பெயர் #இளவேனில்… ஆகா… என்ன அழகிய தமிழ் பெயர்கள் ?!❤

இளவேனிலின் அண்ணன் இந்திய ராணுவத்தில் சேவை செய்கிறார்.. இளவேனில், மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும், துப்பாக்கி சுடும் விளையாட்டில் உள்ள ஆர்வத்தால் அதை நிராகரித்து, தன் லட்சிய பயணத்தில் பயணித்து வருகிறார்.

தங்க மங்கை இளவேனில் மேன்மேலும் சாதனைகளைப் புரிய வாழ்த்துகிறோம்… அத்துடன் இந்தத் தமிழ்ப் பெயர்கள் உலகை ஆளவும் வாழ்த்துகிறோம்!

Related articles

Recent articles

spot_img