
தமிழக பாஜக., தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் ராஜினாமா செய்துள்ள நிலையில், விரைவில் புதிய தலைவர் நியமிக்கப் படுவார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், இது குறித்துக் கூறிய போது…
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டிருப்பது, அவரது 5 ஆண்டுகால அயராத உழைப்புக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம்…
தமிழகத்தில் புதிய தலைவரை நியமிப்பதற்கான அமைப்பு ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வரும் டிசம்பருக்குள் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறினார்.
இதனிடையே, ஆளுநர் பதவி கேட்டு முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பாஜக தலைமையிடம் வேண்டுகோள் வைத்ததாகவும், தமிழிசை அமைதியாக இருந்து காரியத்தை சாதித்துவிட்டதாகவும் ஊடகங்களில் தகவல் பகிரப் பட்டுவருகின்றது. ஆனால் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் எம்பி ஆக வாய்ப்பு உண்டு அமைச்சர் ஆகவும் வாய்ப்பு உண்டு அவர் கவர்னர் பதவி கேட்டு எக் காலத்திலும் பாஜக தலைமையிடத்தில் அணுகவில்லை என்கின்றனர் தமிழக பாஜகவினர்.
முன்னதாக, தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்திரராஜன். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகினார். தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.

