சுபாஷிதம்: நேரமில்லை என்பதற்காக… இதை விடலாமா?

Published:

subhashitam 1 3 - 2026

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

90. முன்னுரிமை எதற்கு?

ஸ்லோகம்:

சதம் விஹாய போக்தவ்யம் சஹஸ்ரம் ஸ்நானமாசரேத் !
லக்ஷம் விஹாய தாதவ்யம் கோடிம் த்யக்த்வா ஹரிம் பஜேத் !!
– ஆரிய தர்மம்

பொருள்:

நூறு வேலைகள் இருந்தாலும் நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். ஆயிரம் வேலைகள் இருந்தாலும் நேரத்திற்கு குளிக்க வேண்டும். லட்சம் செலவுகள் இருந்தாலும் தான தர்மத்திற்கு பணம் ஒதுக்க வேண்டும். கோடிக்கணக்கான வேலைகள் இருந்தாலும் கடவுளை வணங்குவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

விளக்கம்: 

வேலைகளில் அழுத்தம் அதிகமாகி நம் முன்னுரிமைகள் தாறுமாறாகும் இந்த நாட்களில் அனைவருக்கும் உபயோகப்படும் இந்த சுலோகம் சிந்திக்க வைக்கிறது. இதன் கருத்து முன்னுரிமைகளின் மீது கவனம் கொள் என்று எச்சரிக்கை செய்கிறது.

எந்தப் பணியில் இருப்பவர் ஆனாலும் தலைமுழுகிப் போகும் வேலையில்  இருந்தால், அசட்டை செய்வது உணவைத்தான். நேரம் கிடைக்காமல் பசியை அடக்கிக் கொள்பவர்களிடம் இந்த ஸ்லோகம் நூறு வேலைகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு நேரத்துக்கு சாப்பிடு என்கிறது.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

பசியோடு வேலை செய்தால் அதில் கவனக்குறைவு ஏற்படும். ஆர்வம் குறையும். பொறுமை இழப்போம். சரியான நேரத்திற்கு உணவு ஏற்காவிடில் உடல் நலம் கெடும். அதனால் நூறு வேலைகளை நிறுத்திவிட்டாவது நேரத்திற்கு சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்குக் கூட கொடுத்து வைக்காவிட்டால் அந்த செல்வம் எதற்காக?

சுலோகத்தின் இரண்டாவது முன்னுரிமை குளிப்பதற்கு அளிக்கப்பட்டுள்ளது. குளிப்பது என்றால் சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம். ஆயிரம் வேலைகள் இருந்தாலும் காலையிலேயே குளித்து விட வேண்டும். அடுத்தது தானம் பற்றி கூறுகிறார். லட்சம் செலவுகள் இருந்தாலும் தானம் செய்வதற்கு பணம் எடுத்து வைத்து விடவேண்டும்.

இந்தப் பிறவியில் நாம் வயிறு நிறைய சாப்பிடுகிறோம் என்றால் முற்பிறவிகளில் நாம் தானம் செய்ததால்தான் என்கிறது சாஸ்திரம். இறுதியாக கோடி வேலைகள் இருந்தாலும் கடவுளை வணங்க வேண்டும் என்கிறது சுலோகம்.

வேலை இருக்கிறது என்று கூறி இறைவழிபாட்டை ஒதுக்கி விடக் கூடாது. கடவுளுக்கு நன்றி செலுத்தும் பண்பு தினசரிக் கடமையாக வேண்டும்

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img