பெரியபாளையம் பவானி அம்மன்
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
பொன்னியம்மன்மேட்டிலிருந்து மீண்டும் வட கிராண்ட் ட்ரங்க் ரோடு அல்லது சென்னை-கொல்கொத்தா சாலைக்கு வந்து நேராகப் பயணிக்க வேண்டும். 100 அடி சாலையைக் கடந்து, புழலேரியைக் கடந்து, கொசஸ்தலை ஆற்றின் மீதுள்ள காரனோடைப் பாலம் கடந்து பின்னர் ஜனப்பசத்திரம் கூட்டு ரோடு புள்ளியில் இடதுபுறம் சென்னை-திருப்பதி ரோடில் திரும்பி பயணிக்க வேண்டும்.
இந்தச் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் பயணித்தால் ஆரணி ஆற்றங்கரையில் பெரியபாளையம் வரும். பெரம்பூரிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் பெரியபாளையம் உள்ளது. காரில் சுமார் ஒரு மணி நேரப் பயணம். சுமார் 0720 மணிக்கு நாங்கள் பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.
இந்தக் கோவிலில் எப்போதும் கூட்டமாக இருக்கும், அல்லது ரொம்பக் கூட்டமாக இருக்கும். பவானி அம்மனே இக்கோயிலின் பிரதான தெய்வம், வார இறுதி நாட்கள், ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் ஆயிரக்கணக்கில் அம்மனை தரிசிக்க வருகிறார்கள். பவானி அம்மனின் கதை கிருஷ்ணபரமாத்மாவின் பிறப்போடு தொடர்புடையது.
யதுவம்சத்துப் போசகுலத்தவனாகிய உட்க்கிரசேனனுக்கு குமாரனாகத் தோன்றிய கம்சனுக்கு தங்கையாகத் தோன்றிய தேவகியை கம்சன் வாசுதேவருக்கு திருமணம் செய்து வைத்தார். ஒரு நாள் மிக வினோதமாய் கம்சன் வாசுதேவரையும் தேவகியையும் தன் தேரில் ஏற்றிக் கொண்டு அந்தத் தேரை தானே செலுத்திச் சென்றான். அவ்வாறு செல்லுங்கால் தெய்வக் சக்தியால் அசரீரி ஒன்று உண்டாயிற்று அதாவது உன் தங்கை வயிற்றில் பிறக்கும் எட்டாவது சிசு உன்னை கொல்லும் என்றது.
இச்சொல்லைச் செவி மடுத்த கம்சன் தேரை நிறுத்தி தன் தங்கையைக் கொல்ல முற்பட்டான். அதைக் கண்டு வாசுதேவர் கம்சனை தடுக்க, கம்சன் மறுத்து தேவகியை கொன்றேத் தீருவேன் என்று நின்றபோது, வாசுதேவர் உன் தங்கை பெற்றெடுக்கும் சிசுக்கள் எல்லாவற்றையும் உன் முன் கொண்டு வந்து தருவேன் என்று உறுதிமொழி கூறினார். ஆனால் சினங்கொண்டு நின்ற கம்சன் வாசுதேவரின் உறுதிமொழியைச் செவிமடுக்காமல் வாசுதேவரையும், தேவகியையும் விலங்கிட்டு அழைத்துச் சென்று சிறையிலடைத்தான்.
சிறைக்குள் தேவகி பெற்றெடுத்த ஒவ்வொரு சிசுவையும் வாசுதேவர் தன் சொல் காக்கும் நிலையில் கம்சன் முன் கொண்டு வந்து வைப்பார். கம்சன் அந்த சிசுக்களை துன்புறுத்தி அழித்தான். எட்டாவது கருவை கம்சன் எதிர்பார்த்திருந்த பொழுது கண்ணன் பிறந்தான். முன்னர் வசுமதியென்றும், தாரா என்றும் இருந்தவள், அஸ்தியின் தேவியாகத் தோன்றிய இரப்பி அரசனது மந்திரியின் குமாரியாக விளங்கி நந்தகோபனை மணந்த யசோதை மாயையைப் பெண் மகளாகப் பெற்றெடுத்தாள். கண்ணன் நந்தகோபன் மனைக்குமாறி நந்தகோபன் மனையிலிருந்த மாயாதேவியை தேவகியிடம் சிசுவாக விடப்பட்டார்.
பிறந்தவுடன் கண்ணன் தமது பஞ்சாயுதத்துடன் வாசுதேவருக்கும், தேவகிக்கும் காட்சி தந்து, அவ்விருவரின் முற்பிறப்பின் சிறப்பை எடுத்துக் கூறித் தன்னை துஷ்டநிக்ரகம் செய்து நிஷ்ட பரிபாலனம் செய்ய நந்தகோபர் மனைவியான யசோதையிடம் கொண்டுபோய் விட்டு, அங்குள்ள மாயா தேவியை சிறைக்குக் கொண்டுவருமாறு ஸ்ரீகிருஷ்ணர் பணித்தார்.
உலகுய்யப் பிறந்த கண்ணன் உற்றமுறையில் யசோதையிடம் வளர்ந்து வருங்கால் தன்னைக் கொல்லும் நோக்குடன் பால்தர முற்பட்ட பூதகியையும் அவள் கணவன் பூதனையும் கொன்று, சகடா சூரனையும் திருவாவர்த்தனையும் கொன்றான். பெருந்தவ முனிவரான, சாக்கியரால் தமக்கு நாமகரணம் செய்யப் பெற்றும், ஆயர்பாடியிலுள்ள கோபியர்களின் நவநீதம் உண்டான். அங்கு விளையாடும் குழந்தைகளைபோல் கண்ணன் மண் உண்ண, அந்தக் காட்சியை யசோதை கண்டாள்.
யசோதை கண்ணனை அச்சுறுத்த, கண்ணன் தன் தாய்க்குத் தான் மண் சாப்பிடவில்லை என்பதைக் காட்டும் முறையில் தனது வாயைத் திறந்து தன்னுள் அடங்கிய அண்டங்கள் அனைத்தையும் அன்னை யசோதை அறியக்காட்டிநான். இதன் மூலம் கண்ணன் தானும் மாயையானவன்.