முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் பல சிவாலயங்களில் சில இடங்களில், குறிப்பிட்ட ஒரு மாதத்தைல் காலையில் சூரிய ஒளி லிங்க மூர்த்தி மீது விழுமாறு அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஆலயங்கள் கிழக்குப் பார்த்த ஆலயங்களாக இருக்கும். அதே போல சில மேற்கு பார்த்த ஆலயங்களில் மாலை நேரத்தில் சூரிய ஓளி ஒரு குறிப்பிட்ட மாதத்தில் விழுமாறு அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த ஞாயிறு கோயிலில் சூரிய பகவான் இவர் எப்போதும் இங்கு சிவனை வழிபட்டுக் கொண்டிருப்பதாக ஐதீகம். சித்திரை பிறப்பின்போது, முதல் 7 நாட்கள் புஷ்பரதேஸ்வரர் மீது சூரிய ஒளி விழுகிறது. அந்த நாட்களில் சிவனுக்கான பூஜையை, சூரியனே செய்வதாக ஐதீகம். எனவே, அன்று உச்சிக் காலத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்வதில்லை.
படம்: ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் கோயிலின் கோபுரம்
ஞாயிற்றுக்கிழமைகளிலும், சூரியன், வடக்கு நோக்கிய பயணத்தை (உத்தாரயண புண்ணிய காலம்) துவங்கும் நாளான மகர சங்கராந்தியன்றும் (தைப்பொங்கல்) சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது.
சூரியன், பிற கிரகங்களுக்கு தலைமை கிரகம் என்பதால், இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்குள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
இது பஞ்ச பாஸ்கரத் தலங்களில் ஒன்று. திருவாரூர் அருகில் உள்ள தலைஞாயிறு, நீடாமங்கலம் அருகில் உள்ள திருப்பரிதிமங்கலம், ஆடுதுறை அருகில் உள்ள திருமங்கலக்குடி (சூரியனார் கோயில்), நன்னிலம் அருகில் உள்ள திருச்சிறுகுடி, இந்த ஞாயிறு கோயில் ஆகியவை பஞ்ச பாஸ்கரத்தலங்கள்.
அம்பாள் சொர்ணாம்பிகைக்குத் தனி சன்னதி இருக்கிறது. பிரகாரத்தில் உற்சவ மூர்த்திகள், விநாயகர், முருகர், காசி விஸ்வநாதேஸ்வரர், துர்கை (சுதை சிற்பம்) ஆகிய தெய்வங்களுக்குத் தனி சன்னதிகள் உள்ளன. சங்கிலி நாச்சியாருக்கு ஒரு தனி சன்னதி இருக்கிறது. கண்வ மகரிஷி இங்கே முக்தி அடைந்தார் என்பதால் அவர் ஒரு சுதை சிற்பமாகக் காட்சி அளிக்கிறார்.
இந்தக் கோயிலின் தலவிருட்சம் தாமரை ஆகும். கோயிலுக்குள் ஒரு சிறிய தாமரைத் தடாகம் உள்ளது. ஒரு பழமையான நாகலிங்க மரமும், ஒரு திருவோட்டு மரமும் உள்ளன.
இந்தக் கோயிலுக்கு வெளியே, தெற்கு வாசலுக்கு அருகில் ஒரு சீதா சமேத சொர்ண கல்யாணராமர் கோயில் இருக்கிறது. இங்கு ஸ்ரீ சுதர்சனர், ஹனுமான் ஆகியோருக்குத் தனி சன்னிதி உள்ளன. இங்கு வாரந்தோறும் ஸ்ரீ சுதர்சன ஹோமம் நடைபெறுகிறது.
ஞாயிறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கும் செல்லத் தவறுவதில்லை. பல்வேறு திருக்கோயில்களில் பிரசாதமாகவே நிறைய சாப்பிட்டுவிட்டதால் எவருக்கும் மதிய உணவு சாப்பிடத் தோன்றவில்லை.
மாணவர்களை அவரவர் வீடுகளில் விட்டுவிட்டு நாங்கள் எங்கள் இல்லத்திற்குத் திரும்பினோம். எங்கள் வடசென்னை சுற்றுலா இனிதாக முடிந்ததற்கு விநாயகருக்கு நன்றி செலுத்தினோம்.