
ஐ.எஸ்.ஐ.எஸ்., தலைவன் அபுபக்ர் அல் பாக்டாடி, நேற்று தற்கொலை பாம் ஒன்றினால் இறந்து போனான்..!
அபு பக்ர் அல் பாக்டாடி ஒரு சுரங்கப்பாதையில் ஓடி அதன் முடிவில் போய், வேறு வழியின்றி, தனக்கு முடிவு நெருங்குகிறதென்று உணர்ந்து அழுது கொண்டும் கத்திக் கொண்டும் பைத்தியம் போல் இறந்து போனான். அவனைத் துரத்தியது அமெரிக்க ராணுவ நாய்கள் என்று டிரம்ப் கூறியுள்ளார்..!
தன்னுடன் மூன்று குழந்தைகளையும் வைத்துக் கொண்டு தன்னுடைய உடம்பில் அணிந்து கொண்டிருந்த தற்கொலை உடுப்பை தானே ஆன் செய்து ஆக்டிவேட் ஆக்கி.. தன்னோடு சேர்த்து அந்த மூன்று குழந்தைகளையும் தகர்த்துக் கொண்டான்.
அவன் இறப்பு ஒரு நாயின் சாவைப் போல் இருந்தது. அவன் ஒரு கேவலமான கோழை. இந்த உலகம் இப்போது மிகவும் பாதுகாப்பாக உள்ளது… என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்!
உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய இஸ்லாமிய அடிப்படைவாதம் கொண்ட பயங்கரவாத அமைப்பு ஐ.எஸ் எனப்படும் (இஸ்லாமிக் ஸ்டேட்) அமைப்பு. ஈராக் நாட்டில் தொடங்கப்பட்ட இது, படிப்படியாக சிரியாவிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது. தாங்கள் கைப்பற்றும் நகரங்களில் உள்ள கட்டளைக்கு அடிபணிய மறுக்கும் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்துவது அடிமையாக்குவது, சித்திரவதை செய்வது என்றும், குழந்தைகள் ஆயிரக்கணக்கானவர்களை கொடூரமாக கொலை செய்தும் தங்களை ஒரு கொடூரமான இயக்கமாக வளர்த்துக் கொண்டது.
சிரியாவின் மோசூல் நகரை தலைமை இடமாக அறிவித்துக் கொண்டு, இஸ்லாமிய அரசை நிறுவி அதன் மன்னனாக அபுபக்கர் அல்-பக்தாதி தன்னை 29-6-2014 அன்று பிரகடனப்படுத்திக் கொண்டான். இவர்களை ஒழிக்க அமெரிக்கா, ரஷியா, ஈராக், சிரியா உள்பட பல நாடுகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வந்தன.
இந்நிலையில், நேற்று சிரியாவின் இட்லி பகுதியில் அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். அமைப்பின் தலைவன் அபு பக்ர் அல்-பக்தாதி கொல்லப் பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்பின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான், நீங்கள் தான் உருவாக்கினீர்கள், நீங்களே அழித்துள்ளீர்கள் என்று கூறியுள்ளது.
ஈரான் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முகமது ஜாவத் அசாரி இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்து…
‘ஐ.எஸ். அமைப்பின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டது ஒன்றும் மிகப்பெரிய விஷயம் இல்லை. நீங்கள் உருவாக்கியதை நீங்களே கொன்றிருக்கிறீர்கள்’ என்று கூறியுள்ளார்.
இதனிடையே, ‘பக்தாதி கொல்லப்பட்டு விட்டாலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கான பாதை இன்னும் அழிக்கப்படவில்லை. அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகும் அந்த பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதுபோல் ஐ.எஸ். அமைப்பையும் வெடி குண்டுகளாலும், ஆயுதங்களாலும் ஒழிக்கமுடியாது. அந்த அமைப்பு இன்னும் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது’ என்று கூறியுள்ளார் ஈரான் செய்தித் தொடர்பாளர்.