அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றை மாணவர்கள் மிகவும் அலட்சியமாக கையாள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாட்டு அரசுகள் மிகவும் தீவிரமாக முயற்சி செய்துகொண்டுவரும் நிலையில், அமெரிக்காவில் கொரோன நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.
உலகிலேயே அதிகம் பாதிப்படைந்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு திணறிவரும் நிலையில், Tuscaloosa நகரத்தில் உள்ள மாணவர்கள் சிலர் கொரோனா பார்ட்டியை ஒருங்கிணைத்து, அங்கே கொரோனா பாதிப்படைந்தவர்களை பங்கேற்கவைத்து வைரஸை பரப்புகின்றனர்.
மேலும், பார்ட்டியில் கலந்துகொண்டு முதலில் நோய்த்தொற்று ஏற்படும் நபர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பால் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் அந்த பார்ட்டிகளில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி அதிகாரி சோனியா மெக் என்பவர் கூறியதாவது, “மாணவர்கள் இதுபோன்ற பார்ட்டிகளில் ஈடுபடுவது கொரோனா தொற்று பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்விதமாக உள்ளது. முதலில் நோய்த்தொற்று ஏற்படுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்பது மிகவும் முட்டாள்த்தனமானது” என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்களால் நடத்தப்படும் கொரோனா பார்ட்டி குறித்து, அப்பகுதி காவலர்களிடம் இன்னும் யாரும் புகார் கொடுக்கவில்லை எனவும் அவர்கள் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பலகட்ட முயற்சிகளை மேற்கொள்ளும்போது அமெரிக்காவில் இதுபோன்று நிகழ்வது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.