அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை காட்டிக் கொடுத்த நபரின் வழக்குரைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் மறைந்திருந்த அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைக் கண்டுபிடிக்க அமெரிக்காவுக்கு உதவியவர், பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஷகீல் அப்ரிதியின் முன்னாள் வழக்குரைஞர் சமியுல்லா அப்ரிதி. அவர் ஷகீலுக்காக வாதாடியதால் சமியுல்லாவுக்கு பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். ஒசாமாவை கண்டுபிடிக்க உதவிய மருத்துவர், பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்று கூறி அவருக்கு 2012ம் ஆண்டு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் தண்டனை 23 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இதை அடுத்து ஷகீலுக்கு சட்ட உதவி செய்வதால் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என்றும், அதனால் அவரது வழக்கில் இருந்து விலகுகிறேன் எனவும் சமியுல்லா அப்ரிதி கடந்த ஆண்டு கூறியிருந்தார். இந்நிலையில் சமியுல்லா, மத்ரா என்ற கிராமத்துகுச் சென்றுவிட்டு தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவர் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பியோடினர். இச்சம்பவத்தில் சமியுல்லா உயிரிழந்தார். இந்தக் கொலைக்கு ஜன்துல்லா மற்றும் தெஹ்ரிக் இ தாலிபான் ஆகிய இரு அமைப்புகள் பொறுப்பேற்றுள்ளன.
பின்லேடனை காட்டிக் கொடுத்தவரின் வழக்குரைஞர் அப்ரிதி சுட்டுக் கொலை
Published:

