கொழும்பு: இலங்கை சுதந்திர தின விழா அணிவகுப்பின்போது இலங்கை அதிபர் சிறீசேனாவைக் கொல்ல சதி நடந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த சுதந்திர தினவிழாவின் போது அதிபர் சிறீசேனவை கொல்ல முயற்சி நடந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4ம் தேதி இலங்கை ஸ்ரீஜெயவர்தனபுர கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் அதிபர் உள்பட அமைச்சர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த அதிர்ச்சி தகவல் அரசுக்குக் கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே குண்டு துளைக்காத மேலாடையை அதிபர் மைத்ரிபால சிறீசேன, விழாவின்போது அணிந்திருந்ததாக இலங்கையில் இருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 1981ம் ஆண்டு எகிப்து அதிபர் அன்வர் சதாத், அணிவகுப்பு மரியாதையில் சுட்டுக்கொல்லப்பட்டது போன்ற தாக்குதலை இலங்கை அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக உளவுத்துறை அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. அவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கை, தாக்குதலில் இருந்து தப்பிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு துறைச் செயலாளர் பஸ்நாயக அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், யாரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட உள்ளது. தாக்குதலை நடத்த திட்டமிட்டது யார் என்ற தகவல்கள் தெரிவிக்கப் படவில்லை. முன்னாள் அதிபர் ராஜபட்சவின் சொந்த ஊரான வீரக்கெட்டியவில், இந்த முறை சுதந்திர தின விழாவை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், கடைசி நேரத்தில் இதை சிறீசேன மாற்றினார் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இலங்கையில் 2 முறை அதிபராக இருந்த மகிந்த ராஜபட்சவை, எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபால சிறீசேன வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். இந்நிலையில் தேர்தலின் போதே ராணுவத்தைப் பயன்படுத்தி தேர்தலை சீர்குலைக்க ராஜபட்ச சதி செய்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதை அடுத்து, ராஜபட்ச ஆட்சிக்கு எதிராக சதி உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்துள்ளன. இந்நிலையில், கடந்த ஜன.9ஆம் தேதி புதிய அதிபராக மைத்ரிபால சிறீசேன பொறுப்பேற்றார். இதன் பின்னர், ராஜபட்ச ஆட்சியில் நடந்த ஊழல்கள், முறைகேடுகள், வெள்ளை வேன் கொலைகள் உள்ளிட்டவை குறித்து விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் ராஜபட்ச மகன்கள், அவரது தம்பிகள், குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தப்பியோடினர் என்பது குறிப்பிடத் தக்கது.
இலங்கை அதிபர் சிறீசேனாவை கொல்ல முயற்சி?: அதிர்ச்சித் தகவல்!
Popular Categories


