பீஜிங்: சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்துக்கு வருவது எங்கள் அரசின் காலத்தில் நடக்காது என்று கூறியுள்ளார் இலங்கை அமைச்சர் சமரவீர. சீனாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார் இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர. இலங்கை அதிபராக சிறீசேன பொறுப்பேற்ற பின்னர், தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா வந்தார். அவரின் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் சீனா என முடிவாகியுள்ளது. இதை ஒட்டி அவர் இந்த மாதத்தில் சீனா செல்கிறார். அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காக இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர சீனா சென்றுள்ளார். சீனத் தலைநகர் பீஜிங்கில் சனிக்கிழமை நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சீன நீர்மூழ்கி வந்தது எப்படி என எனக்குத் தெரியவில்லை. அப்போது, ராஜபட்ச அரசு ஆட்சியில் இருந்தது என்பதால், அதுகுறித்த விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது போன்ற சம்பவங்கள், எங்கள் ஆட்சிக் காலத்தில் நடைபெறாது என உறுதியளிக்கிறேன்… என்றார் சமரவீர. இலங்கையில் கடந்த பத்தாண்டுகளாக அதிபராக இருந்த ராஜபட்ச, இலங்கையின் உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள சீனாவுக்கு ஒப்பந்தங்களை அதிகம் வழங்கினார். அம்பந்தோட்டாவில், செயற்கை துறைமுகம், கொழும்பு துறைமுக மேம்பாட்டுப் பணிகள் என பல ஒப்பந்தங்களை ராஜபட்ச சீனாவிடம் வழங்கினார். பல பிரமாண்ட திட்டங்களில் சீனா இலங்கையில் முதலீடு செய்துள்ளது. ஆனால், சீனாவுக்கு இலங்கை அதிக இடம் அளிப்பதும், முக்கியத்துவம் கொடுப்பதும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. இருப்பினும், சீனாவை வைத்து இந்தியாவை மிரட்ட ராஜபட்ச காய் நகர்த்தினார். இந்நிலையில், இலங்கைத் தேர்தலில் ராஜபட்ச படுதோல்வி அடைந்தார். இதை அடுத்து புதிய அதிபராகப் பொறுப்பேற்ற சிறீசேனாவிடம், இந்திய பிரதமர் மோடி, சீன விஷயத்தில் காட்டும் நெருக்கம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும், ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் சீனா தனது ராணுவ முகாம்களை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சீனாவிலிருந்து அந்த இடங்களுக்குச் செல்லும் வழியில் எரிபொருள் நிரப்பிக் கொள்ளவும், வீரர்கள் ஓய்வெடுக்கவும், இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள சில தீவுகளை சீனா பயன்படுத்திக் கொள்கிறது. இதை இந்தியாவும், அமெரிக்காவும் எதிர்த்து வருகின்றன. சீனாவுக்கும், ஜப்பானுக்கும் சுமுக உறவு இப்போது இல்லை. அண்மையில் ஜப்பான் பிரதமர், இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, சீன நீர்மூழ்கிக் கப்பல்கள், கொழும்பு துறைமுகத்தில் தங்கிச் சென்றது, ஜப்பானுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்நிலையில் சீனாவுடனான உறவு மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்து மறுபரிசீலனை செய்யும் முடிவில் இலங்கை இருப்பதாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளதாக இலங்கை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன் ஒரு கட்டமாகத்தான், இலங்கை வெளியுறவு அமைச்சர், ‘இலங்கைத் துறைமுகங்களில், சீன நீர்மூழ்கிகளுக்கு இனி இடமில்லை’ என சீனாவில் வைத்தே கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன நீர்மூழ்கி கப்பல்களுக்கு இனி அனுமதியில்லை: இலங்கை திடீர் அறிவிப்பு
Popular Categories


