உலக வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த சந்திப்பு…
கொரிய தீபகற்பத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட கொரியா, தென் கொரியா இரு நாட்டுத் தலைவர்கள் இடையிலான உச்சி மாநாடு இன்று தொடங்கியது. கொரியப் போர் 1953-ஆம் ஆண்டு முடிந்த பின்னரும் வட கொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக பனிப் போர் நீடித்து வந்தது. வடகொரியா தொடர் ஆணு ஆயுத சோதனை நடத்தி வந்ததால், அண்மைக்காலமாக இரு நாடுகளுக்கும் இடையே மேலும் பதற்றம் அதிகரித்து வந்தது.
இந்நிலையில் அண்மையில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அணு ஆயுத சோதனைகளால் தென்கொரியாவை மிரட்டி வந்த வடகொரியா இறங்கி வந்தது. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க முன்வந்தது. தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை கைவிடுவதாக அறிவித்தது. இதை அடுத்து இரு நாடுகளின் உயர்மட்ட தூதுக் குழுவினர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான பனிப்போர்ச் சூழல் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியது.
இந்நிலையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்புமுனை நிகழ்வாக வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் இணைந்து உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேச முடிவானது. இதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தென்கொரியா சென்றார். அவருடன் 9 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவினரும் சென்றனர்.
இந்நிலையில் திட்டமிட்டபடி இரு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இரு நாடுகளின் எல்லையை ஒட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில் நடைபெற்ற இந்த மாநாட்டின் துவக்கத்தில், இரு நாட்டு தலைவர்களும் ஒருவரையொருவர் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இது இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவின் புதிய தொடக்கமாக அமைந்தது.
இந்த மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானம், இரு நாடுகள் இடையேயான கொரியப் போரை முறைப்படி முடிவுக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரியப் போர் முடிந்த பின்னர் வடகொரிய தலைவர் ஒருவர், தென்கொரியாவுக்கு செல்வது இதுவே முதல் முறை!