கொழும்பு: இலங்கையில் ஒருவர் இரு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும் என்ற முக்கியமான சட்டத் திருத்தம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இலங்கை அதிபராக இருந்த ராஜபட்ச 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அப்போது அவர் தனக்கு சாதகமாக பல அதிகாரங்களை மாற்றிக் கொண்டார். குறிப்பாக இலங்கை அதிபராக ஒருவர் 2 முறை மட்டுமே அந்தப் பதவியை வகிக்க முடியும் என்று இருந்த வரைமுறையை நீக்கினார். அதன் பின் 3ஆவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அவர் படுதோல்வியை சந்தித்தார். தற்போது சிறீசேன தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றதும், ராஜபட்ச செய்த பல தவறுகளை அது நீக்கி வருகிறது. அந்த வகையில் இலங்கை அதிபராக ஒருவர் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்பது உள்ளிட்ட 19-வது சட்டத் திருத்தத்தை (19ஏ) கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய அரசுக்கு முழுமையான பெரும்பான்மை இல்லாத நிலையில், இது நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், இந்த சட்டத் திருத்தம் மீது இரண்டு நாட்களுக்கு விவாதம் நடந்த நிலையில், நேற்று அதன் மீது வாக்கெடுப்பு நடந்தது. அப்போது இந்த சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக 215 ஓட்டுகளும், எதிராக ஒரே ஒரு ஓட்டும் விழுந்தது. இதன் மூலம் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
ஒருவர் இரு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்கலாம்: இலங்கையில் முக்கிய சட்டத்திருத்தம் நிறைவேற்றம்
Popular Categories



