அமெரிக்க அதிபர் டிரம்ப், பாக்., பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு நடந்த அடுத்த நாளே, 125 மில்லியன் டாலர் மதிப்பிலான எப்-16 ரக போர் விமானத்தை பாக்.,கிற்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக பென்டகன் அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு இந்தியா கடும் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. அதிநவீன திறன் கொண்ட போர் விமானமான எப் 16 ஐ, பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய உள்ளதாக ஜூலை 26 அன்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக விவகாரங்களுக்கான செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விவகாரத்தை டில்லியில் உள்ள அமெரிக்க தூதரிடம் கொண்டு சென்றுள்ளோம்.
அத்துடன் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதர் மூலம் அமெரிக்க அரசிடமும் நமது அதிருப்தியை தெரிவித்துள்ளோம் என்றார்.பாக்.,க்கு தொடர்ந்து தொழில்நுட்ப சேவைகளிலும் ஆதரவு தர உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளிடையே ஒப்பந்தமும் கையெழுத்தானது எனக் கூறப்படுகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாக்., விரும்பினால் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஒருபுறம் கூறி வரும் டிரம்ப், மற்றொரு புறம் பாக்.,க்கு ராணுவ உதவி செய்வதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இந்த முரண்பாடான செய்கை இந்தியாவின் கோபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.


