
தமிழ்நாட்டில் தலித் வாக்கு 21 சதவீதம், சிறுபான்மை மக்களுக்கான வாக்கு சுமார் 18 சதவீதம். இந்த இரண்டு சேர்ந்து கிட்டத்தட்ட 40 சதவீதம். இந்த 40 சதவீத வாக்குகளை (இந்தியாவிலேயே தலித்+ சிறுபான்மை வாக்கு சதவிதம் அதிகம் உள்ள பெரிய மாநிலம் தமிநாடு தான். )மையமாக வைத்தே திமுக கடந்த 15 ஆண்டுகளாக தனது அரசியல் அறுவடையை செய்து வருகிறது. பாஜக என்ற ஒரு “பூச்சாண்டி”யை தொடர்ந்து காட்டி, தலித் மற்றும் சிறுபான்மை மக்களை அச்சத்தில் வைத்துக் கொண்டு தேர்தல் வெற்றிகளை குவிப்பதே திமுகவின் முதன்மை உத்தி.
தலித் மக்களிடம், “பாஜக வந்தால் இடஒதுக்கீடு ரத்து, இந்தி திணிப்பு, வடநாட்டு பிராமண ஆட்சி” என்ற செய்தியை திமுக தனது ஊடகங்கள் மூலம் இடைவிடாது செலுத்துகிறது. கல்வி அறிவு குறைந்த ஏழை தலித் மக்களை முழுமையாக பாஜக மற்றும் இந்திக்கு எதிராக திருப்புகிறது. அதே முறையை சிறுபான்மை மக்களிடமும் பயன்படுத்துகிறது. “பாஜக ஆட்சிக்கு வந்தால் மத சுதந்திரம் இல்லை, நாட்டைவிட்டு விரட்டுவார்கள், பாதுகாப்பு இருக்காது” என்ற அச்சத்தை தினசரி வீடியோக்கள், மேடைகள், பேச்சுகள் மூலம் விதைக்கிறது. இப்படி தலித் மற்றும் சிறுபான்மை மக்களை இந்து அரசியலுக்கும் இந்திக்கும் எதிரான மனநிலையில் உறைய வைத்து, திமுக இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்நாட்டை முழுமையாக சுருட்டி நூறு சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டார்கள்.
இந்த அரசியல் தமிழ்நாட்டில் திமுகவுக்கு அறுவடை கொடுக்கிறது. ஆனால் அதே அரசியல், காங்கிரஸ் கட்சிக்கு வட இந்தியாவில் கல்லறை வெட்டுகிறது. திமுக இந்தி, இந்துத்துவா, வட இந்தியர்கள், இந்துக்கள் என்று ஒட்டுமொத்தமாக தாக்கும் அரசியலை நடத்துகிறது. இதை பாஜக வட மாநிலங்களில் காங்கிரஸுக்கு எதிரான ஆயுதமாக மாற்றுகிறது. “உங்கள் கூட்டணி கட்சி திமுக உங்களை இழிவுபடுத்துகிறது, உங்கள் மதத்தையும் மொழியையும் கேவலப்படுத்துகிறது” என்று காங்கிரஸை சுவர் ஓரமாக தள்ளுகிறது. அதன் விளைவாக வட மாநிலங்களில் காங்கிரஸ் பல இடங்களில் அரசியல் வரைபடத்திலேயே காணாமல் போகிறது.
இந்த பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிட்டிக்ஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ராகுல் காந்தியின் முன் ஒரு கடுமையான கணக்கை வைக்கிறார். “திமுகவின் இந்தி எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு அரசியல் தமிழ்நாட்டில் நமக்கு 40 தொகுதிகளை வாங்கித் தருகிறது. ஆனால் அதே அரசியல் வட இந்தியாவில் நம்மிடம் இருந்து 400 தொகுதிகளை பறிக்கிறது. இது லாபம் அல்ல, பேரழிவு” என்று நேரடியாக சொல்கிறார்.
அதோடு நிற்காமல் இன்னொரு உண்மையையும் மேசையில் வைக்கிறார். “திமுக எப்போதும் வெற்றி பெற முடியாது. அவர்களின் அறுவடை காலம் முடிவை நோக்கி செல்கிறது. 2029 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 40 இடங்களையும் அவர்கள் மீண்டும் எடுக்க முடியாது. கடந்த தேர்தலிலேயே பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், நம் கூட்டணிக்கு 15 இடங்கள் கூட கிடைத்திருக்காது” என்று கையில் புள்ளி விபர எண்களோடு பேசுகிறார்.
பிறகு அடுத்த அடி. “திமுகவை மெதுவாக கழட்டி விடுங்கள். தாவேக்கா என்ற புதிய கட்சியுடன் கூட்டணி போங்கள். அதன் மூலம் தமிழ்நாடு மட்டும் அல்ல, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, பாண்டிச்சேரி என முழு தென் இந்தியாவிலும் நமக்கு புதிய வாசல் திறக்கும். 2029 தேர்தலுக்கு அது தான் சரியான முதலீடு” என்று ராகுல் காந்தியிடம் நேரடியாக பரிந்துரை செய்கிறார்.
அதே நேரத்தில் ஒரு பிளான் பி-யையும் வைக்கிறார். “திமுகவை உடனே விட்டு வெளியேற முடியாவிட்டால், அவர்களை அழுத்துங்கள். 38 முதல் 40 சட்டமன்ற தொகுதிகள் கேளுங்கள். ஒரு ராஜ்யசபா சீட் கேளுங்கள். மூன்று முக்கிய அமைச்சுப் பதவிகள், ஒரு துணை முதலமைச்சர் பதவி கேளுங்கள். இதை தரவில்லை என்றால், தாவேக்கா கூட்டணிக்கு நகருங்கள்” என்று தெளிவாக கோடு இழுக்கிறார்.
ஆனால் இந்த கணக்கு டெல்லியில் சரியாக இருந்தாலும், தமிழக காங்கிரஸின் சென்னை கணக்கு வேறு. தமிழக காங்கிரஸ் என்பது தொண்டர்கள் இல்லாத தலைவர்கள் நிறைந்த கட்சி. 99 சதவீத தலைவர்கள் திமுகவின் தயவில் அரசியல் உயிர் பிழைப்பவர்கள். திமுகவை விட்டு வெளியேறினால் தங்கள் அரசியல் வாழ்க்கை முடியும் என்பதை அவர்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் “திமுக இல்லாமல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் சாவு” என்ற குரலே தமிழக காங்கிரஸ் முகாமில் ஒலிக்கிறது.
இந்த நிலையை காங்கிரஸ் மேலிடமும் புரிந்து கொள்கிறது. “திமுகவுக்கு நாம்தான் தேவை, நமக்கு திமுக அவசியம் இல்லை” என்ற முடிவுக்கு டெல்லி மெதுவாக வருகிறது. அந்த கருத்தையும் ராகுல் காந்தியின் முன் மீண்டும் வைக்கிறார்கள்.
இதற்கிடையில் திமுகவும் கணக்குப் போடுகிறது. காங்கிரஸ் கூட்டணியை விட்டால் கன்னியாகுமரியில் கூட ஒரு சீட் கிடைக்காது. மூன்று புள்ளி ஐந்து சதவீத வாக்குகள் ஒரே இரவில் கரைந்து போகும். சிறுபான்மை வாக்குகள் விஜய் பக்கம் நகரும். இந்த உண்மை திமுக தலைமைக்கு தெளிவாக தெரியும். அதனால் தான், வெளியில் பேசாவிட்டாலும், உள்ளுக்குள் ஒரு முடிவை எடுக்கிறார்கள். “எத்தனை தொகுதிகள் கேட்டாலும் தருவோம். அமைச்சரவையில் இடம் தருவோம். துணை முதலமைச்சர் பதவியும் தருவோம். கூட்டணியை மட்டும் உடைக்காதீர்கள்”, கூட்டணியை உடைத்துக் கொண்டு போனால் உங்கள் கட்சி உடைந்து இதற்கு முன்பு மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானது போல சிதம்பரம் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் அல்லது தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்னும் ஒரு புதிய காங்கிரஸ் கட்சியின் பிளவு தமிழ்நாட்டின் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களை வைத்து காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமைக்கு கசிய விடுற நிலைக்கு திமுக தயாராகிறது.
ஆனால் இதை இப்போது வெளியில் சொல்ல மாட்டார்கள். அதுபோல இப்போதே ஆட்சிப் பங்கு பேசினால், “திமுகக்கு தன்னம்பிக்கை இல்லை” என்று மக்கள் நினைத்து விடுவார்கள். அந்த பயம் அவர்களை அடக்கி வைத்திருக்கிறது.
இந்த எல்லாவற்றுக்கும் நடுவில் காங்கிரஸ் ஒரு முடிவை எடுக்க வேண்டிய இடத்தில் நிற்கிறது. திமுகவுடன் தொடர்வதா, அல்லது புதிய அரசியல் பாதையை திறப்பதா என்பது தான் கேள்வி. மல்லிகார்ஜுன கார்கே பெயரில் தலைவர் தான். அதிகாரம் இல்லை. ராகுல் காந்தி முடிவெடுக்க தயங்குகிறார். சோனியா காந்தி உடல்நலத்தால் அரசியலிலிருந்து ஓரமாக இருக்கிறார்.
யார் முடிவு எடுப்பார்கள் என்று தெரியாது. ஆனால் ஒரு முடிவு எடுக்காமல் காங்கிரஸால் இனிமேல் நகர முடியாது. அந்த முடிவு திமுகவின் அரசியலையும், காங்கிரஸின் எதிர்காலத்தையும், தமிழ்நாடு அரசியலின் திசையையும் ஒரே நேரத்தில் மாற்றப் போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், காங்கிரஸ் எந்த பக்கம் திரும்புகிறது என்று.
- எம். தங்கராஜ்




