பரமன் அளித்த பகவத் கீதை (17): சர்மிஷ்டை கதை

Published:

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 17
மகாபாரதக் கதைஆதிபர்வம் -2 – யயாதி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

சர்மிஷ்டை கதை

          சர்மிஷ்டை, அசுர குல அரசன் விருசபர்வாவின் மகள். இவளது நெருங்கிய தோழி, அசுர குலகுரு சுக்கிராச்சாரியின் மகள் தேவயானி. விருசபர்வாவின் ஆட்கள்தான் கசன் சுக்ராச்சாரியாரிடம் சீடனாக இருந்தபோது அவனை பலமுறை கொன்றவர்கள். ஒரு முறை குளத்தில் நீராடிவிட்டு திரும்புகையில் கவனக்குறைவாக அரச குமாரி சர்மிஷ்டையின் ஆடையை தேவயானி அணிந்துவிட்டாள். அதற்காக அவளை உடலாலும் மனதாலும் துன்புறுத்தினாள் சர்மிஷ்டை. தேவயானியை சர்மிஷ்டை ஒரு பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டாள். அதற்கு சர்மிஷ்டையை பழி வாங்க தேவயானி முடிவு செய்தாள்.

          தனது தந்தை சுக்ராச்சாரியாரிடம் சொல்லி, சர்மிஷ்டையை தனது வேலைக்காரியாக்கிக் கொண்டாள். தேவயானியை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றிய மன்னன் யயாதியை தேவயானி திருமணம் செய்துகொண்டாள். யயாதியுடன் தேவயானி அவனது நாடிற்குச் செல்லும்போது சர்மிஷ்டையும் அவளுடன் சென்றாள். 

          தேவயானிக்குத் தெரியாமல் சர்மிஷ்டை மீது காதல் கொண்ட யயாதி, சர்மிஷ்டையையும் மணந்துகொண்டான். யயாதிக்கும்-தேவயானிக்கும் பிறந்த மூத்த மகன் யதுவின் வழித்தோன்றல்கள் யாதவர்கள் (ஸ்ரீகிருஷ்ணரின் வம்சத்தவர்) என்றும் இரண்டாவது மகன் துர்வசுவின் வழித்தோன்றல்கள் சேர, சோழ, பாண்டியர்கள், மேலும் இவர்களின் ஒரு கிளையினர் ஒழுக்கங்குன்றி அரேபிய தேசம் அடைந்து யவனர்கள் ஆயினர் என்றும் யயாதிக்கும் சர்மிஷ்டைக்கும் பிறந்த மூன்றாவது மகன் திரஹ்யுவின் வழித்தோன்றல்கள் போஜர்கள் என்றும், நான்காவது மகன், அனுவின் வழித்தோன்றல்கள் மிலேச்சர்கள் என்றும், ஐந்தாவது மகன் புருவின் வழித்தோன்றல்கள் பௌரவர்கள் (புரு வம்சம் – கௌரவர்கள் மாற்றும் பாண்டவர்கள்) என்றும் அழைக்கப்பட்டனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

          ஒரு முறை ஷர்மிஷ்டையின் அரண்மனைக்கு சென்ற தேவயானி, அங்கு யயாதியின் உருவம் ஒத்த மூன்று குழந்தைகளை கண்டு, உங்கள் தந்தை யார் என வினவ, அவர்களும் யயாதி என உரைத்தது கண்டு, சர்மிஷ்டை மற்றும் யயாதி மீது கோபமுற்று, நடந்ததை தந்தை சுக்கிராச்சாரியாரிடம் உரைத்தாள். சுக்கிராச்சாரியும், தன் மகளுக்கு துரோகம் செய்த, யயாதியை உடனே கிழவனாக மாற சாபமிட்டார். பின்னர் வருத்தமுற்ற தேவயானி, சாபவிமேசனத்திற்கு வழி கேட்க, அவரும், யயாதியின் முதுமைப் பருவத்தை மகன்களில் ஒருவர் ஏற்றால், யயாதியின் முதுமை நீங்கி இளமை அடைவான் என்று கூற, யயாதியின் முதுமையைத் தேவயானியின் நான்கு மகன்களில் ஒருவர் கூட ஏற்காத நிலையில், ஷர்மிஷ்டையின் மகன்களில் புரு என்பவன், யயாதியின் முதுமை ஏற்று தன் இளமையை வழங்கினான். இதனால் மகிழ்ந்த யயாதி, தனக்குப் பிறகு சர்மிஷ்டைக்கு பிறந்த இளவரசன் புரு, தன் நாட்டை ஆள வரமளித்தான்.

          புருவம்சத்தில் பல தலைமுறைகள் கழித்து துஷ்யந்தன் பிறந்தான். அவன் சகுந்தலாவை மணந்து பரதன் என்ற மகனைப் பெற்றெடுத்தான். இவனால் இந்த வம்சம் பரதவம்சம் எனப் பெயர்கொண்டது. அதற்குப் பல தலைமுறைகள் கழித்து ஹஸ்தி என்பவர் பிறந்தார். இவர்தான் ஹஸ்தினாபுரத்தை அமைத்தவர். இவருக்குப் பலதலமுறைகள் கழித்து குரு பிறந்தார். இவரால்தான் இந்த வம்சம் குரு வம்சம் என அழைக்கப்படுகிறது. குருவின் மகன் விதுர்த். விதுர்த்தின் கொள்ளுப்பேரன் பிரதிபா. பிரதிபாவின் மகன் சந்தனு.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

          குரு குல மன்னர்களின் முக்கியமான அரசர்கள் குரு, பிரதீபன், சந்தனு, பீஷ்மர், திருதராட்டிரன், பாண்டு, விதுரன், பாண்டவர், கௌரவர், பரிட்சித்து மற்றும் ஜனமேஜயன் ஆவர். குரு குல மன்னர்கள் கங்கை ஆற்றிக்கும், யமுனை ஆற்றிக்கும் இடைப்பட்ட வளமான பகுதிகளை ஆண்டனர். பின்னர் குரு நாடு, குருஜாங்காலம் மற்றும் உத்தரகுரு என மூன்று நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. குரு நாட்டிற்கு மேற்கில் குருஜாங்காலம் மற்றும் கிழக்கில் உத்தரகுரு நாடுகள் இருந்தன.

குருச்சேத்திரப் போர்

          குரு குலத்தினரில் பாண்டவர்கள் தாங்கள் சூதாடி தோற்ற நாட்டின் உரிமை கோரி கௌரவர்களுடன் குருச்சேத்திரத்தில் போரிட்டனர். இவ்விருவருக்கும் ஆதாரவாக பரத கண்டத்து நாடுகளின் மன்னர்கள் படைகளுடன் போரிட்டனர். குருச்சேத்திரப் போரின் முடிவில் எஞ்சியவர்கள் குரு குலத்தினரில், பாண்டவர் ஐவர், யது குலத்தவரில் சாத்தியகி மற்றும் கிருதவர்மன் மற்றும் அந்தணர்களில் கிருபர், அசுவத்தாமன், மட்டுமே. மற்ற அனைவரும் மாண்டனர்.

Related articles

Recent articles

spot_img