
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கனவாக இருந்தது.
போஸ்டர் வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. இன்றைய தலைமுறையினர் எம்.ஜி.ஆரின் கனவை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் பொன்னியின் செல்வன் நாவலை அனிமேஷன் படமாக தயாரித்து வருகிறது. பல பாகங்களாக தயாராகும் இந்த படத்தின் முதல் பாகம். வந்தியத்தேவன் என்ற பெயரில் தயாராகி உள்ளது.
இதில் வந்தியத்தேவன் கேரக்டர் எம்.ஜி.ஆர் தோற்றத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது.
ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி இந்தப் படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். தவச்செல்வனின் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்த ஆண்டு பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
வந்தியத்தேவனின் அறிமுகப் பாடல் ஒன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாளையட்டி நேற்று வெளியிடப்பட்டது. உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும் என்று தொடங்கி ஒவ்வொரு நொடியும் வைரம் என்றால் காலம் புதையல்தானே; ஒவ்வொரு உள்ளமும் அரியணை என்றால் நிரந்தர அரசன் நானே! என்று நிறைவடைகிறது. படம் விரைவில் வெளிவருகிறது.