இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான வரவு, செலவு கணக்குகளை கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. நிகழ்ச்சி தொடர்பான கணக்கு வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாரிப்பாளர்கள் சங்க தரப்புக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தயாரிப்பாளர் சதீஷ் குமார் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இந்தியாவே உற்று நோக்கும் மிகப்பெரிய கலைஞனுக்கு நடத்தும் பாராட்டு விழாவுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்ததன் மூலம் அவரை அவமதித்து விட்டீர்கள் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள் என்று நீதிபதி கிருபாகரன் கண்டிப்புடன் கூறினார்.
இதுதொடர்பான மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் கிருபாகரன், அப்துல்குத்தூஸ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகள் நடைபெற்ற பின்னர், இந்த வழக்கை இறுதி நேரத்தில் தாக்கல் செய்திருப்ப தாகவும், இது சரியான செயல் அல்ல என்றும், நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் இந்தி பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தவர்களை, தமிழ்ப் பாடல் கேட்க வைத்தவர் இளையராஜா தான் என்று நீதிபதிகள் கூறினர். இந்திப் பாடல்களுக்கு மெட்டமைக்க, தமிழ் இசையைக் காப்பியடிக்கும் அளவிற்கு மிகத் தரமான முறையில் இசையமைத்து சாதனை படைத்தவர் இளையராஜா என நீதிபதிகள் புகழாரம் சூட்டினர்.
இளையராஜா 75 நிகழ்ச்சியின், வரவு-செலவு தொடர்பான கணக்கு விவரங்களை 2 வாரத்தில் தாக்கல் செய்யவும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.