1973ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்றுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தது. டயாலிசிஸ் செய்தும் குழந்தை பிழைக்கவில்லை. இதற்கு அடுத்து ஒவ்வொரு நாளும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் இதேபோல சிறுநீரக செயலிழப்புடன் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். அம்மாத முடிவில் கணக்கிட்டபோது 15 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்திருந்தனர்.
அந்த மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ரவிக்குமாரின் வீட்டின் அருகிலும் இதேபோல ஒரு குழந்தை பாதிக்கப்பட்டது. பயந்துபோன டாக்டர் அந்தக் குழந்தையின் பெற்றோரிடம் அந்தக் குழந்தைக்கு எப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டது என விசாரித்தார். குழந்தைக்கு காய்ச்சல் வந்து, பாரசிடமால் மருந்தைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த பாரசிடமாலின் பிராண்ட் பெயர் பிப்மால் – சி. புதிதாக சந்தைக்கு வந்திருந்த தண்ணீர் வடிவிலான பாரசிடமால் மருந்து.
இதையடுத்து, இதற்கு முன்பாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்துபோன 15 குழந்தைகளின் வீட்டிற்கும் சென்ற ரவிக்குமார், ஒவ்வொரு பெற்றோரிடமும் என்ன மருந்தை குழந்தைக்குக் கொடுத்தார்கள் என்பதை விசாரித்தார். பயந்தது போலவே எல்லாக் குழந்தைகளுக்குமே பிப்மால் – சி கொடுக்கப்பட்டிருந்தது.
உடனடியாக Pipmol – Cன் ஒரு மாதிரி வரவழைக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அந்த ஆய்வில்தான் நடந்த விபரீதம் தெரியவந்தது. அதாவது மருந்துகளில் வழக்கமாக solventஆக கலக்கப்படும் propylene glycolக்கு பதிலாக diethylene glycol கலக்கப்பட்டிருந்தது. இது உடனடியாக சிறுநீரகத்தைப் பாதிக்கும் மருந்து.
விஷயம் தெரியவந்ததும் அகில இந்திய வானொலிக்குச் சொல்லி, இந்த மருந்தை யாரும் சாப்பிட வேண்டாம் என தொடர்ச்சியாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
எப்படி புரொபைலீன் க்ளைக்காலுக்குப் பதிலாக டைஎத்திலீன் க்ளைக்கால் அந்த மருந்தில் கலக்கப்பட்டது என விசாரணை நடந்தது. என்ன நடந்திருந்தது என்றால், மருந்துக் கம்பனிக்கு, வழக்கமாக புரொபைலீன் க்ளைகால் சப்ளை செய்யும் ரசாயன நிறுவனம் தவறுதலாக டைஎத்திலீன் கிளைக்காலை சப்ளை செய்திருந்தது. மருந்துக் கம்பனி மூடப்பட்டது.
கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளிவந்த தி ஹிந்து மேகஸினில் இந்த சம்பவத்தை நாற்பத்தேழு ஆண்டுகளுக்கு பிறகு நினைவு கூர்ந்திருந்தார் டாக்டர் ரவிக்குமார்.
https://www.thehindu.com/opinion/open-page/when-a-drug-turned-killer/article30770710.ece
பிப்ரவரி 21ஆம் தேதி தி இந்தியன் எக்ஸ்பிரசில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
அதாவது, ஜம்முவில் உள்ள உதாம்பூரில் 9 குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இறந்துபோனார்கள். இவர்கள் ஒன்பதுபேருமே Coldbest-PC என்ற இருமல் மருந்தை சாப்பிட்டிருந்தார்கள்.
இந்த விவகாரத்திலும் புரொபைலீன் கிளைக்காலுக்குப் பதிலாக டைஎத்திலீன் கிளைக்கால் அந்த மருந்தில் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த Coldbest-PCஐ தயாரித்தது டிஜிட்டல் விஷன் என்ற இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனம். இந்த முறை மருந்தை மாற்றி அனுப்பியது சென்னையைச் சேர்ந்த மணலி பெட்ரோகெமிக்கல்ஸ். இப்போது சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரணை வளையத்தில் இருக்கிறார்கள்.
ஹிந்துவில் ரவிக்குமாரின் கட்டுரையைப் படித்த பிறகு, அதை விரிவாக எழுதி பகிரலாம் என்று நினைத்திருந்தேன். அதைச் செய்வதற்குள், Deja vuஐப் போல மீண்டும் அதே நிகழ்வு!
ஒரே மாதிரியான தவறு, 46 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் நடந்து, பல உயிர்களைப் பலியாக்கும்போது முதுகுத் தண்டு சில்லிடுகிறது. இணையத்தில் தேடிப்பார்த்தால், 1937ல் இருந்தே இந்த டைஎத்திலீன் க்ளைக்கால் உலகம் முழுவதும் பல உயிர்களை வாங்கியிருப்பது தெரிகிறது.
- பாமரன்