பிரியாணிக் கடைக்குப் போன ஸ்டாலினே… கருணாநிதி என்ன செய்திருப்பார் தெரியுமா..?

Published:

stalin anbu briyani - 2026

ஸ்டாலினுக்கு விவரம் பத்தாது – நேராக அடிவாங்கிய பிரியாணிக் கடைக்காரரிடம் ஓடிப் போய் ‘வருத்தம்’ தெரிவிச்சிட்டாரு!

இதுவே கலைஞர் ‘செயலா’ இருந்திருந்தால் அவர் ‘டீல்’ பண்ற முறையே வேற! பத்திரிகைகளுக்குப் பொதுவா ஒரு அறிக்கை :- “எல்லாக் கட்சிகளிலும் உணர்ச்சிவசப்பட்ட சிலர் இருக்கத்தான் செய்வார்கள்: எனினும் தாக்கப்பட்டவரின் மனம் புண்பட்டிருந்தால் (!) ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

அடுத்து ‘முரசொலி’ யில் உடன்பிறப்புக்கு விளக்கமாகப் புரியும் வகையில் ஒரு கடிதம்!

“உடன் பிறப்பே, சற்றொப்ப எட்டு குத்துகளை எனது இளவல் அந்தக் கடைக்காரருக்கு விட்டது கண்டு என் இதயம் கனத்தது; கண்கள் பனித்தன!

அந்த பிரியாணிக்கடை நண்பர் யார்? அவரும் தமிழர் தானே? யாரோ ஒரு முனுசாமியோ, முத்தையனோதானே? அவன் தாக்கப்பட்டால் என் இதயம் வலிக்காதா? திராவிடனான இராவணனை ‘அரக்கன்’ என்றாலே வலிக்குமே என் இதயம், என்பது நீ அறியாததா?

அந்தக் கடைக்காரன் என்ன குடுமி வைத்த வந்தேறி ஹரிஹர சர்மாவோ, கைபர் போலன் கணவாய் வழி வந்த சங்கர சுப்ரமணியமோ அல்லவே? ‘ராயர் மெஸ்’- ‘பிராமணாள் காஃபி க்ளப்’- என்றெல்லாம் இனவெறியை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆரியத்தின் அவதாரமா அந்தத் தமிழ் பிரியாணிக்கடை உரிமையாளன்? அல்லது பாலக்காட்டுக் கணவாய் வழியே வந்து டீக்கடை வைத்துள்ள நாயரா? அல்லவே, அவன் நம் தமிழினம் அல்லவா?

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

இதற்கு அர்த்தம் நான் ஏதோ ஹரிஹர சர்மாக்களின் ஹோட்டல்களையும், நாயர் டீக்கடைகளையும் அடித்து நொறுக்க வேண்டும் என்று நான் கூறுவதாகப் புரிந்து கொண்டுவிடாதே! அங்ஙனம் நீ புரிந்து கொள்ள மாட்டாய் என்பதை நான் நன்கறிவேன்!

‘ஆரிய பவன்’- என்ற உணவகப் பெயர்ப்பலகையைப் பார்க்கும்போதே உனது திராவிட ரத்தம் கொதிப்பதை நான் அறிவேன். அவ்வாறு ‘ஆரிய பவன்’ – என்று பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாரும், கைபர் – போலன் கணவாய் வழியே வந்த வேதம் ஓதிகளோ, மாடோட்டிகளோ அல்ல! பகுத்தறிவுப்படி தமிழர்கள் என்று நம்மால் அறிவிக்கப்பட்ட, வீட்டில் தெலுங்கு பேசும் வைஸ்யாள் சமூகத்தவர்களே பலர் ‘ஆரிய பவன்’- என்று இன உணர்வற்றுப் பெயரிடும் போது, உன் போலவே எனக்கும் ரத்தம் கொதிக்கவே செய்கிறது!

எனக்கு இப்போது உள்ள பெருங்கவலையே ‘ஆரிய பவன்’- என்று பெயரிட்ட உணவகப் பலகைகளை எல்லாம் உடைத்தெறிய எங்கே நீ புறப்பட்டு விடுவாயோ என்பதுதான்!

தம்பி, புரிந்துகொள் – அது அல்ல அண்ணா நமக்குக் கற்பித்த கடமை – கண்ணியம்- கட்டுப்பாடு! புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன். புரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். என் விருப்பத்தையும், நம்பிக்கையையும் நீ நிறைவேற்ற வேண்டும் என உனது அண்ணன் நான் அறைகூவி அழைக்கிறேன்!

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

எனது வருத்தம் உனது ரௌத்திரம் குறித்து அல்ல! குருதி கொப்பளிக்கப் பொங்கி எழும் உன் கோபத்தைக் குறி வைக்க நீ பழகவில்லையே என்பதுதான்!

அமைதி காத்திடு தம்பி – ஆரிய திராவிடப் போர் என்பது இராமயண காலத்திலிருந்தே இருப்பதாக பண்டித நேருவே எழுதியுள்ளார். இது பரம்பரைப் பகை! எனவே உனது சினத்தை ஒழுங்காற்றிக் களப்பணியாற்றக் கற்றுக்கொள்”—
(அன்புடன் மு.க)

மூலைக்கு மூலை ராயர் மெஸ், நாயர் டீக்கடை, ஆரிய பவன் எல்லாம் பஞ்சாய்ப் பறந்திருக்கும்!

இன்னும் நூறு ஜன்மம் எடுத்தாலும் கலைஞர் கிட்ட ஸ்டாலின் பிச்சை வாங்கணும்! அதை விட்டுட்டு உடனே பிரியாணிக் கடைக்காரரை நோக்கி ஓடிக்கிட்டு இருக்கார்! நாளைக்கே ஒரு வேளை தமிழகத்தில் மூலைக்கு மூலை தெக்கனாம்பட்டி, சிலுக்குவார்பட்டி, சிறுகூடல்பட்டி…- ன்னு ‘செயல் வீரர்கள்’ ACTION ல் இறங்கினால் அங்கெல்லாமும் ஸ்டாலின் காரை எடுத்துகிட்டு ஓடுவாரா? கலைஞர் அளவுக்கு… ம்ஹூம்… பத்தாது! TACTICS போதவில்லை இவருக்கு!

– முரளி சீத்தாராமன்
ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

Related articles

Recent articles

spot_img