காலை உணவுத் திட்டம் மற்றும் அரசு நலத் திட்டங்களை அனைத்து நிதியுதவிப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று, தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து தேசிய ஆசிரியர் சங்க (தமிழ்நாடு) பொதுச் செயலாளர் மு.கந்தசாமி வெளியிட்ட அறிக்கையில்,
சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் கூறியதாக வந்துள்ள பத்திரிக்கை செய்திகளில் கிராமப்புற சிறுபான்மை நிதிஉதவிப் பள்ளிகளில் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் மற்றும் 6-12 தமிழ்வழியில் பயின்ற சிறுபான்மை நிதியுதவி பள்ளிகளில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம்,பணிநியமன வயது தளர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குதல் குறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் வெளிவரும் என அறிவித்துள்ளதாக வந்துள்ளது
இது சமதர்ம சமூகநீதி கொள்கைக்கு முரணாக உள்ளது ஆகவே இது போன்ற நலத்திட்டங்களை நீட்டித்தால் அதை அனைத்து நிதிஉதவிப் பள்ளிகளுக்கும் சேர்த்தே வழங்க வேண்டும். சிறுபான்மை, சிறுபான்மையற்ற எனப் பாகுபாடு காட்டக்கூடாது. அனைத்து நலத் திட்டங்களையும் சிறுபான்மையினருக்கு தருவது போல மற்ற அரசு நிதிஉதவிப் பள்ளிகளுக்கும் கொண்டு வர வேண்டும். இதில் பாரபட்சம் காட்டக்கூடாது.
ஏனெனில் அனைத்து பள்ளிகளிலும் ஏழை எளிய மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் சிறுபான்மைப் பள்ளிகளுக்கு மட்டும் சலுகைகள் வழங்குவது சமூக நீதியாக கருத இயலாது. எனவே சிறுபான்மையினர் பள்ளிக்கு வழங்கும் அனைத்து நலத் திட்டங்களையும் அனைத்து திட்டங்களையும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கும் வகையில் நிதிநிலை அறிக்கை அறிவிப்பு இருக்க வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் -தமிழ்நாடு கேட்டுக் கொள்கிறது… என்று தெரிவித்துள்ளார்.