அறமும், அறிவும் இல்லாத அக்கிரமத்துறையாக மாறும் அறநிலையத்துறை, காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் ஸ்தல விருட்சத்தை வெட்டிய அநியாயத்தை கண்டிக்கிறோம் என்று இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் 1600 ஆண்டு தொன்மையானது இத்திருக்கோயில் திருப்பணி நடைபெற்று வருகின்றது.
இன்னிலையில் கோயிலில் உள்ள அரிய வகை மரங்களான சிவபூஜைக்குரிய நாகலிங்க மரம், சரக்கொன்றை மரம், வன்னி மரம் , மாமரம்,200 ஆண்டு தொன்மையான அரச மரத்துடன் இணைந்த வேப்பமரம், வில்வ மரம், ஸ்தல விருட்ச முருங்கை மரத்தையும் வெட்டியுள்ளார்கள்.
கும்பபிஷேகத்திற்கு யாக குண்டத்தில் போட வெட்டப்பட்டுள்ளதாக இக்கோயில் அறநிலையத்துறை அதிகாரி செயல் அலுவலர் திரு.நடராஜன் கூறியதாகத் தெரிகிறது.
காஞ்சி புராணத்தில் “அக்காஞ்சியில் நீங்காது அமர்ந்திடும் கொன்றைவார் சடையனைக் கச்சபேசன் தனைக் கும்பிடச் சென்றவர் கண்டவர் கருதினர் யாவரும் தீது தீர்ந்து ஒன்றி ஒன்றா நிலை மாறிலா முத்தி பெற்றுய்வரே” என்று கூறப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பு பாடல் பெற்ற ஸ்தலத்தின் மரங்களை வெட்டி உள்ளது இந்து சமய அறநிலைத்துறையின் உச்ச பட்ச கொடிய செயல். பக்தர்களுக்கும் , வழிபாட்டிற்கும் எவ்வித இடையூறும் இல்லாத மரங்கள் வெட்டப்பட்டுள்ளது அதிர்ச்சிக்குரிய விஷயமாக உள்ளது.
பல லட்சம் செலவில் பிரம்மாண்ட யாகசாலை கட்டியவர்களுக்கு யாக குண்டத்தில் போட விறகு வாங்குவதற்கு பணம் இல்லையா? யாரிடம் அனுமதி பெற்று இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை ஆலயங்களைக் காக்கவா? அல்லது அழிக்கவா? என்று பக்தர்கள் கேட்கிறார்கள்.
இத்தகைய அலட்சிய, அராஜகப் போக்கினை இந்துமுன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்குக் காரணமாக இருந்த அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும். இதுபோல் தொடரந்து கோவில்களில் நடைபெறும் அக்கிரமங்களை அடக்கத் தெரியாத அமைச்சர் சேகர் பாபு தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்துமுன்னணி துவங்கப்பட்ட காலத்திலிருந்தே அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆகவே பக்தர்கள் தன்னெழுச்சியாக குரல் கொடுத்து இந்த அக்கிரமத்துறையை அகற்ற போராட முன்வர வேண்டும்