“ஸ்ரீராம தூதன்”
மீ. விசுவநாதன்
“அஞ்சனை மைந்தனை ஆருயிர்த் தோழனை
நெஞ்சிலே வைத்துநாம் நித்தமும் கொஞ்சினால்
அஞ்சுதல் இல்லாத ஆனந்த நாட்களாய்
செஞ்சுதான் வைப்பான் சிறந்து. (1)
சிறந்ததோர் பூமியாம் சீராம் அயோத்தி
பிறந்ததோர் ராமனைப் போற்றிப் பறந்தவன்
கிட்கிந்தை சுக்ரீவன் கிட்டே இருந்தவன்
சட்டெனக் காப்பான் களித்து. (2)
களித்துநாம் சொல்கிற ராம்ராம் ஒலியில்
குளித்து மகிழும் குழந்தை – துளியும்
ஒளிக்கும் குணமிலாத் தூய ஒளியோன்
அளிப்பான் நமக்கே அருள். (3)
அருளாளன் ஆஞ்சநேயன் ஆழ்கடல் தாண்டி
பெருமானின் சேவையாய்ச் சீதைத் திருமாதைத்
தேடித் திரிந்துதான் கண்டு தெளிந்ததைப்
பாடியே சொன்னான் பணிந்து. (4)
பணிந்தவன் சொன்னதைப் பார்த்து மகிழ்ந்து
துணிந்தவன் நீயெனச் சொல்லி – பிணிதனைத்
தீர்த்தவன் என்றே பிரியமாய் அன்பிலே
வேர்த்தானே ராமன் வியந்து. (5)
வியத்தகு வித்தைகள் செய்யும் திறவோன்;
நயத்தகு வார்த்தைகள் நல்கி பயத்தை
விரட்டுற சொல்லோன்; வினைவென்ற யோகி;
அரட்டை அகன்ற அறம். (6)
அறத்தினது நாயகன் அன்புப் பிடியில்
மறத்தை மறந்த மதியோன் – புறத்தும்
அகத்தும் இராம அழகில் திளைக்கும்
மகத்தான ஞானி மனம். (7)
மனத்தில் துணிவு, மதியில் அகழம்,
சினத்தைச் சிதைத்த குணத்தோன் – இனத்தில்
குரங்கே எனினும் குவிக்கும் தியான
அரங்கில் அடங்கும் அகம். (8)
அகங்காரம் இல்லா அழகன் அனுமன்;
முகங்கோணாத் தூயதோர்த் தொண்டன் – இகத்தில்
பரத்தில் இணையில்லா பக்தரில் முக்தன் ;
கரத்தைக் குவித்திருப்போன் காப்பு. (9)
காப்பதில் ராம கனிவு; பகைக்கெனில்
ஆப்படிக்கும் வீரன்; அனைவர்க்கும் கூப்பிடு
தூரத்தில் உள்ள துணையவன்; ஞாலத்தின்
சாரமாய்த் தோன்றுகிற அஞ்சு. (10)
( அஞ்சு – பஞ்ச பூதமாக இருப்பவன்)
(இன்று – 11.01.2024 – ஸ்ரீ அனுமன் பிறந்த தினம்)