
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி
சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இம்மாதம் 20ஆம் தேதியோடு முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. 19.02.2026 கொல்கொத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் காலை 1100 மணிக்கு நடந்த இத்தாலி, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் மே.இ. தீவுகள் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கொழும்புவில் இலைங்கை ஜிம்பாபே அணிகளுக்கு இடையே மதியம் 0300 மணிக்கு நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஜிம்பாபே 6 விக்கட்டுகள் வித்தியாசதில் வென்று குரூப் B பிரிவில் முதலிடத்தைப் பெற்றது. சென்னையில் இரவு 0700 மணிக்கு ஆஃப்கானிஸ்தான் கனடா அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 20.02.2026 அன்று நடந்த கடைசி முதல் சுற்று ஆட்டத்தில், கண்டி, பல்லகெலே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி ஓமன் அணியை 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
சூப்பர் 8 ஆட்டங்களுக்காக முதல் சுற்றில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்கள் பெற்ற அணிகள் இரண்டு குரூப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் 1 – இந்தியா, ஜிம்பாபே, மேற்கு இந்தியத்தீவுகள், தென் ஆப்பிரிக்கா
குரூப் 2 – பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து
இதில் முதல் ஆட்டம் 21.02,2026 அன்று கொழும்புவில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்தது. ஆனால் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படவில்லை. அதனால் ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
22.02.2026 அன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. பல்லகலேயில் மதியம் 0300 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஆட்டம் அகமதாபாத்தில் இரவு 0700 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, இந்திய அணிகளுக்கு இடையே நடந்தது. பூவாதலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. தொடக்கத்தில் மூன்று மட்டையாளர்களை இழந்த அந்த அணி அதன் பின்னர் சுதாரித்துக்கொண்டு, சிறப்பாக ஆடியது. எய்டன் மர்க்கரம் (4 ரன்), க்விண்டன் டி காக் (6 ரன்), ரியன் ரிக்கிள்டன் (7 ரன்) ஆகிய மூவரும் அர்ஷதீப் சிங், பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் டிவால்ட் ப்ரூவிஸ் (45 ரன்), டேவிட் மில்லர் (63 ரன்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (44 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கட் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. பும்ரா மூன்று விக்கட்டுகள் எடுத்தார்.
இரண்டாவதாக ஆடவந்த இந்திய அணியில் இஷான் கிஷன் (பூஜ்யம் ரன்), அபிஷேக் ஷர்மா (15 ரன்), திலக் வர்மா (1 ரன்), சூர்யகுமார் யாதவ் (18 ரன்), வாஷிங்டன் சுந்தர் (11 ரன்) என வரிசையாக அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சிவம் துபே (42 ரன்) சற்று நிலைத்து ஆடினார். ஹிருதிக் பாண்ட்யா (18 ரன்) அவருக்கு கொஞ்ச நேரம் கம்பனி கொடுத்தார். ரிங்கு சிங் 2 பந்துகளில் பூஜ்யம் ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 18.5 ஓவர்களில் அனைத்துவிக்கட்டுகளையும் இழந்து 111 ரன் எடுத்தது. எனவே தென் ஆப்பிரிக்க அணி 76 ரன் களில் அபார வெற்றி பெற்றது.
இன்று (23.02.2026) மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பூவாதலையா வென்ற ஜிம்பாபே அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் மட்டையாட வந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் (9 ரன்) மற்றும் ஷாய் ஹோப் (14 ரன்) விரியவில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் களமிறங்கிய ஹெட்மயர் (85 ரன்) மற்றும் ரோமன் போவெல் (59 ரன்) இருவரும் அதிரடியாக ஆடினர். அவர்களுக்குப் பின்னர் ஆடவந்த ரூதர்போர்ட் (31 ரன்), ஷெப்பர்ட் (21 ரன்), ஜேசன் ஹோல்டர் (13 ரன்) ஆகியோரும் அதிரடி ஆட்டத்தைத் தொடர, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கட் இழப்பிற்கு 254 ரன் எடுத்தது. இது டி20 உலகக் கோப்பை ஆட்டங்களிலேயே இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்த உலகக் கோப்பை ஆட்டங்களில் இதுவே அதிகமான ஸ்கோர். இந்த 254 ரன்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 19 சிக்சர்கள் அடித்தது.
இரண்டாவதாக ஆடிய ஜிம்பாபே அணி 17.4 ஓவர்களில் 147 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதனால் மே.இ. தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நாளை (24.02.2026) இரவு 0700 மணிக்கு இலங்கை கண்டியில், பல்லேகலே மைதானத்தில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆட்டம் நடைபெறுகிறது.




