ஆந்திராவில் 5 துணை முதலமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனராம். எஸ்சி, எஸ்டி, பிஸி, சிறுபான்மையினர், கப்பு சமுதாயம் என ஐந்து பிரிவினரில் இருந்து ஒருவரை தேர்வு செய்து, 5 துணை முதல்வர்களை நியமிக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தீர்மானம் செய்துள்ளார்
நாட்டிலேயே முதல் முறையாக, எங்கும் நடக்காத அதிசயமாக, ஆந்திராவில்தான் 5 துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது முன்னர், சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில், இரண்டு துணை முதல்வர்கள் இருந்துள்ளனர். ஒருவர் பிஸி., இன்னொருவர் கப்பு சமுதாயம் என நியமிக்கப் பட்டிருந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இன்று, முதல்வர் ஜெகன் தங்கியிருந்த தாடேபள்ளியில் நடைபெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், புதிதாக தேர்வு செய்யப் பட்டிருக்கும் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது அவர், சமுதாயத்திற்கு ஒருவர் என 5 பேரை துணை முதலமைச்சராக மக்களின் விருப்பப் படி நியமிக்கப் படுவதாகக் கூறியுள்ளார்.
மேலும், துணை முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என 25 பேர் கொண்ட அமைச்சரவை நாளை காலை 9.15க்கு பதவி ஏற்கும் என்று அவர் கூறியுள்ளார். மக்கள் நம் செயல்பாடுகளை உன்னிப்பாகப் பார்க்கின்றனர். நாம் அவர்களுக்கு முந்தைய அரசுக்கும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் அரசுக்குமான வேறுபாட்டைக் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெகன் மோகன்!