பார் புகழும் பாரதத்தில் பண்டையக் காலம் முதலே கொண்டாடப் பட்டு வரும் பண்டிகை நவராத்திரி. இந்த நவராத்திரி கொண்டாட்டங்களின் மூலம், நம் நாட்டு பாரம்பரியப் பண்பாடு பெரிதும் வெளிப்படுகிறது.
நவராத்திரி பண்டிகையின் போது தென்னகத்தின் கோலமும், வடக்கின் ரங்கோலியும், மத்திய இந்தியாவின் சன்ஸ்கார் பாரதியும் என ‘இல்ல வாயில்களில்’ கோலமிட்டு கொண்டாடப்படுகிறது. இதனால் நம் நாட்டு ‘கோலமிடுதல்’ என்னும் பண்பாடு வெளிப்படுகிறது.
குமரி முனையில் உள்ள கன்னியாகுமரி கோயிலில் இருந்து காஷ்மீரத்து ஸ்ரீவைஷ்ணவி தேவி திகழும் எல்லை வரை, முப்பெரும் தேவிகளை மும்மூன்று இரவுகளில் வணங்கும் ‘பக்தி’ என்னும் பண்பாடு வெளிப்படுகிறது.
‘செப்புமொழிகளால்’ சிந்தனை ஒன்றினால், மகிழும் நம் பாரத அன்னையின் புன்னகையினால் பன்மொழி இலக்கிய வளம் காத்தல் எனும் பண்பாடு வெளிப்படுகிறது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெண்களால் போற்றிப் பாதுகாக்கப் படும் கலாசாரம் பேணுதல் என்னும் பண்பாடு வெளிப்படுகிறது.
தென் கர்நாடக இசையாகட்டும், வட இந்துஸ்தானி இசையாகட்டும், நவராத்திரி நேரத்தில் இல்லங்களில் ஒலிக்கும், மக்களின் மனத்தினை இணைக்கும் ‘இசையால்’, இசை காத்தல் என்னும் பண்பாடு வெளிப்படுகிறது.
அஸ்ஸாமின் பிஹுவும், மராட்டிய லாவணியும், குஜராத்தின் கர்பாவும், ஒரிஸாவின் ஒடிஸியும், பஞ்சாபின் பாங்க்ராவும், ஆந்திராவின் குச்சுப்பிடியும், கேரளாவின் கதகளியும், தமிழின் பரதமும் என நாட்டியம் பேணுதல் என்னும்
பண்பாடு வெளிப்படுகிறது.
மழலையர் முதல் பல்லும் சொல்லும் போன முதியவர்கள் வரை கரைபுரளும் ‘உற்சாகத்தால்’, இன்பமே பெருகும் எனும் பண்பாடு வெளிப் படுகிறது. குதூகலமான கொண்டாட்டங்களுடன்’, மகிழ்ச்சியே வாழ்வாதாரம் என்னும் பண்பாடு வெளிப்படுகிறது.
‘வாழையடி வாழையாய்’ விருந்தோம்பல் தொடர்வதால், பகிர்வதில் இன்பம் என்னும் பண்பாடு வெளிப்படுகிறது.
தெற்கிலும் வடக்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் கொண்டாடப்படும் நவராத்திரியால் நாம் யாவருமே கேளிர் எனும் பாரதத்தின் பாரம்பரியப் பண்பாடு வெளிப்படுகிறது.
திரைகடல் ஓடினாலும், திரவியம் தேடினாலும்
அங்கும் இந்திய மக்கள் நவராத்திரி கொண்டாடுவதால் மரபினை பின்பற்றுதல் என்னும் பண்பாடு வெளிப்படுகிறது.
- கட்டுரை: ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்