தினசரி ஒரு வேத வாக்கியம்: 33. வேதம் கூறும் உலக முன்னேற்றம்!

Published:

Dhinasari Jothidam

33. வேதம் கூறும் உலக முன்னேற்றம்!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“விஸ்வம் சுபூதம் சுவிதத்ரம் நோ௨ஸ்து” – அதர்வண வேதம் 

“பிரபஞ்சம் ஐஸ்வரியத்தோடும் ஞானத்தோடும் முன்னேறட்டும்!”

வேத கலாச்சாரத்தில் உள்ள விசாலமான உலக நன்மையைக் கோரும் விருப்பம் மேற்குறிப்பிட்ட மந்திரத்தில் வெளிப்படுகிறது.

வறுமை, அறியாமை இவ்விரண்டுமே முக்கியமான குறைகள். இவை இல்லாமல் இருந்தால் மனிதன் செல்வந்தனே! சமுதாயமும் நிறைவடைந்ததே! 

மக்களிடம் செல்வம் இருந்தால் அவர்களின் உடலும் மனமும் புஷ்டியாக விளங்கும். மன அமைதி கிட்டும். முக்கியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இவற்றுக்குக் குறையின்றி இருந்தால் பிற முன்னேற்றங்கள் குறித்து ஆலோசித்து அமல்படுத்தும் அவகாசம் கிடைக்கும்.

ஞானம் என்றால் இங்கு வேதாந்த பரிபாஷையில் பிரம்மஞானம் போன்று பெரிதாக பொருள் கொள்ள வேண்டியது இல்லை. ஆனால் தர்மம், பண்பாடு, சாஸ்திர அறிவு இவற்றை இங்கு ஞானம் என்ற பொருளில் அறியலாம்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

எங்கு, எப்போது, ஏன், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்துகொள்ளும் அறிவு எல்லோருக்கும் தேவை. அதுவே நாகரீக சமுதாயத்தில் முக்கியமானது.

ஞானம் என்பது பொருளீட்டுவதற்கு மட்டுமே அல்ல. நல்ல முறையில் செலவழிப்பதற்குக் கூட ஞானம் தேவை. ஞானத்தால் நிறுவனங்களையும் அமைப்புகளையும் குறைகளை களைந்து தூய்மையாக்க முடியும்.

ஒரு நாட்டில் மக்கள் அனைவரும் நல்லறிவு பெற்றிருந்தால் தாற்காலிக பேராசைக்கு உட்படாமல், சுயநலத்தை விட்டு, சமுதாய நலனையும், சாஸ்வத பிரயோஜனத்தையும் புரிந்துகொள்ளமுடியும். பொறுப்பற்றவர்கள் செய்யும் அக்கிரமங்களை தடுக்க முடியும்.தார்மீக பண்பாடுள்ள தலைவர்கள் அதிகரித்தால் நாட்டில் ஊழலைக் கூட தடுத்துவிட முடியும். 

அதனால் வெறும் சர்டிபிகேட் கல்வி, டிகிரி தகுதி மட்டுமே ஞானம் என்று எண்ணாமல் தார்மீக பண்பாட்டையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தம்மையும் தம் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக ஆரோக்கியமாக இருத்தி சமுதாயம் முழுமையும் வலிமை அடையும்படி செய்யும் சக்தி செல்வத்திற்கும் ஞானத்திற்கும் மட்டுமே உள்ளது.

செல்வம் பெற்றிருப்பது மட்டுமே மனிதனுக்கு முழுமை அளிக்காது. ஞானம் மனிதனை முழுமை ஆக்குகிறது. சில சந்தர்ப்பங்களில் ஞானம் செல்வத்தை விட உயர்ந்து நிற்கிறது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஞானம் இருந்தால் வறியவன் கூட மகிழ்ச்சியோடு வாழ முடியும். சமுதாய நலம் விரும்பியாக மாற முடியும். ஞானியிடம் செல்வம் வந்து சேர்ந்தால் அந்தச் செல்வம் பெரும்பேறு பெறுகிறது. அது க்ஷேமத்தை அளிக்கிறது.

‘தம் வர்கத்தவர் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும். மீதி உள்ளவர்களை இம்சித்தாவது தம் வர்கத்தோடு சேர்த்துவிட வேண்டும்’ என்ற கொள்கை பாரதிய சிந்தனையில் கிடையாது.

அதனால்தான் விஸ்வமனைத்தும் ஞானச் செல்வத்தோடு முன்னேற வேண்டும் என்று வேதம் விரும்புகிறது. அனைவரும் தம் மதத்தவராக, தம் பிரிவினராக மாற வேண்டுமென்று ஆசைப்படவில்லை. 

மானுட இனத்தின் முன்னேற்றத்திற்கு வேத தர்மம் பல யுகங்களுக்கு முன்பே எத்தகைய முழுமையான வளர்ச்சிக்கான கருத்துக்களை உரைத்துள்ளதோ கவனித்தால், மகரிஷிகளின் தேச, காலங்களுக்கு அதீதமான விஞ்ஞான நெறிமுறைகளுக்கு தலை வணங்காமல் இருக்க முடியாது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img