தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்
பிரிட்டிஷாரின் இந்திய வாரிசுகள் பின்பற்றிய பிராமண துவேஷம் பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்! இந்த கட்டுரையை ஒரு குறிப்பிட்ட ஜாதியை மெச்சிக் கொள்வதற்கான எழுத்தாக அன்றி ஒரு அற்புதமான காலசாரத்தை அழிப்பதற்கு பிரிடிஷார் தீட்டிய சதித் திட்டத்தை ஆராயும் விதமாகக் கொள்ளவேண்டும்.
அன்றைய காலகட்டத்தில் செய்யும் வேலையைக் கொண்டு பிரிக்கப்பட்ட அனைத்து வர்ணங்களைச் சேர்ந்தவர்களும் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்தார்கள்.
மிகவும் மதிப்பு வாய்ந்த வேதங்களையும் ஆயிரக்கணக்கான நூல்களையும் மனப்பாடம் செய்து தலைமுறை தலைமுறையாக அளித்ததோடு அறுபத்து நான்கு கலைகளையும் வித்யைகளையும் காப்பாற்றிய பிராமண வகுப்பினை ஜாதி, குலம் என்று அன்றி அவர்களுடைய உழைப்பின் பாரம்பரியத்தையும், வாழ்க்கை விதானத்தையும் கவனித்து சமுதாயம் நன்றியோடு கௌரவித்தது.
ஆடம்பரமின்றி வாழ்ந்து தேவைக்கு மட்டுமே தனம் சம்பாதிக்க வேண்டும் என்ற நியமத்தோடு இருந்தவர்கள் அன்றைய பிராமணர்கள். அந்த மூலாதாரத்தை அடியோடு துடைத்தெறியவேண்டும் என்று தீர்மானித்தனர் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்.
“வேத விஞ்ஞானச் செல்வத்தை புராணங்களாகவும், ஹரிகதைகளாகவும், கதா காலட்சேபங்களாகவும், தத்துவங்களாகவும், கூத்து போன்ற பல எளிமையான வடிவங்களாகவும் தயாரித்து பலவித ஸ்தாயிகளில் உள்ள மக்களுக்கு கிடைக்கச் செய்து வந்ததால் மட்டுமே சமுதாயத்தில் தெய்வபக்தியும் தேசபக்தியும் வளர்ந்தன. சமுதாயத்தில் தர்மம், நேர்மை போன்ற விழுமியங்கள் வளரும்படி செய்ததில் பிராமண வகுப்பு செய்த முயற்சி போற்றத்தக்கது” என்று ஸ்ரீஜடாவல்லபுல புருஷோத்தம் குறிப்பிடுகிறார்.
நம் தேசத்தில் பிரிடிஷார் ஆட்சி நடந்த நாட்கள் அவை. அன்றைய மதராசில் நடந்த சம்பவம் இது. ஒரு பிரபல வியாபாரி சாலையில் நடந்து செல்லும் போது வழியில் ஒரு ஆங்கிலேய அதிகாரி எதிர்ப்பட்டார். அந்த அதிகாரிக்கு மதிப்பளிக்கும் விதமாக வியாபாரி ஷேக் ஹான்ட் கொடுத்தார். ஆனால் அவரருகில் இருந்த குமாஸ்தாவுக்கு செருப்புகளைக் கழற்றிவிட்டு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.
அவ்விதம் தன்னை விடக் குறைந்த அந்தஸ்துள்ள குமாஸ்தாவுக்கு ஏன் அதிக கௌரவம் அளித்தாய் என்று அந்த அங்கிலேயர் கேட்ட போது வியாபாரி கூறினார், “இந்த குமாஸ்தா பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை எங்கள் கோவில் அர்ச்சகர். சிறந்த மருத்துவர். வேத பண்டிதர்” என்று பதிலளித்தாராம். சமுதாயத்தில் பிராமண வகுப்பினர் வேதத்தைப் பாதுகாப்பவர் மட்டுமின்றி, தேசத்தின் ஒற்றுமைக்கு எவ்வாறு பாடுபடுகின்றனர் என்பதை புரிந்து கொண்டார் அந்த அதிகாரி.
காஷ்மீர் முதல் கன்யாகுமாரி வரை அனைத்து பிரதேசங்களிலும் பிராமணர்கள் விரிந்து பரந்து பாரதிய கலாச்சாரத்திற்கு பிரதிநிதிகளாக இருந்து அனைத்து சமுதாய மக்களுக்கும் கல்வியறிவு ஊட்டி மேம்படுத்துகிறார்கள் என்ற விஷயத்தை ஆங்கிலேயர் கண்டறிந்தனர்.
கோவாவில் கிறிஸ்தவ மதம் நுழைந்து கோவில்களை மாற்றியமைத்து நல்லவிதமாகவோ பயமுறுத்தியோ மக்களைத் தம் மதத்திற்கு மாற்றி வந்த காலத்தில் அங்கு இருந்த பிராமணர்கள் மதம் மாறியவர்களை கங்கை நீர் தெளித்து ஹிந்துக்களாகச் செய்து வரும் செய்தியை சேவியர் தன் அதிகாரிகளுக்கு தெரிவித்தாராம்…
“இந்த பிராமணர்கள் யாரோ தெரியவில்லை நான் செய்து வரும் பணிக்கு தடையாக நிற்கிறார்கள். நாம் அவர்களை அழிக்கவேண்டும்” என்றார் சேவியர்.
ஹைந்தவ தர்மத்தின் மேல் இந்த தாக்குதல் இன்று நேற்று தொடங்கியது அல்ல. புத்தருக்குப் பிறகு அவரைப் பின்பற்றியவர்கள் ஊழல் மிகுந்தவர்களாய் பாரம்பரியமாக வரும் தேசிய சம்பிரதாயங்களை அடியோடு நாசம் செய்யும் தீவிர முயற்சியில் யாகம், யக்ஞம் போன்ற வைதீக கர்மாக்களை கடைபிடிக்கும் பிராமணர்கள் மேல் துவேஷம் கொண்டார்கள்.
நம் தேசத்திற்குள் புகுந்த முகலாய அரசர்களும் இதே துவேஷத்தைத் தொடர்ந்தார்கள்.
செங்கிஸ்கானுக்கு வாரிசான அக்பர் (தி கிரேட்?) தலைமையில் மொகலாயப் படைகள் கொன்றழித்த ஹிந்துக்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. கொல்லப்பட்டவர்களின் பூணூல்கள் 74 மணங்கு இருந்ததாம். (11.2 கிலோ =ஒரு மணங்கு). (திரு. எம்விஆர் சாஸ்திரி ஆதாரங்களோடு எழுதிய ‘எது வரலாறு?’ என்ற நூல்). ஹிந்து சமுதாயத்தின் மீது அதிகாரம் செய்து மதம் மாற்ற விடாமல் குறுக்குச் சுவர் போல் நின்ற பிராமணர்களின் மீது வேற்று நாட்டு மதங்கள் பழி தீர்த்துக் கொண்டன. மதம் மாறுவதற்கு சம்மதிக்காமல் நியம நிஷ்டையோடு வாழ்பவர்கள் மேல் ‘ஜிஜியா வரி’ விதிக்கப்பட்டது.
சமுதாய வாழ்க்கை என்னும் கூட்டுப் பயணத்தில் ஏற்படும் சிரமங்களைப் பகிர்ந்துகொண்டு பண்டையகாலம் முதல் தொடர்ந்து வருகின்ற சாஸ்திர விஞ்ஞானத்தை தலைமுறை தலைமுறையாக அளித்து வரும் கஷ்டமான பணியை ஏற்றனர் பிராமண வகுப்பினர். இவர்களின் மேல் அதன் பின்னர் வந்த ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் பிரிட்டிஷ் மத ஆட்சியாளர்களும் குரோதம் கொண்டனர்.
முழு ஹிந்து சமுதாயத்தின் மீதும் அதிகாரம் செய்யவிடாமல் குறுக்கே நிற்கும் சக்தி யார் என்று அந்த வந்தேறி மதக் கும்பல் விரைவில் கண்டறிந்தது. அப்படிப்பட்ட பிராமண வர்க்கத்தினரை சமஸ்கிருத கல்வியிலிருந்து விலக்கி, அவர்களை மதிப்பிழக்கச் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தனர் வேற்று நாட்டு மத ஆட்சியாளர்கள். அதன் இடத்தில் சர்ச்சுகளை நிலை நிறுத்த வேண்டும் என்பது அவர்களின் சதித் திட்டம்.
வந்தேறிகளின் அரசாங்க அதிகாரிகள் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பிராமண வெறுப்பை பொது மக்களிடையே பரப்பினார்கள். பிராமணர்கள் தம் ஞானத்தை பிறருக்கு பகிரவில்லை… பிராமணர்கள் சோம்பேறிகளாக வெறும் பூஜை மட்டுமே செய்து காலம் கழிக்கிறார்கள்… உற்பத்தித் துறையில் அவர்களின் பங்கு இல்லை… இது போன்றவை அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளில் சில.
அறிவுஜீவிகளான ஒரு வகுப்பினர் அந்நிய மதப் பரவுதலுக்குக் குறுக்காக நின்ற காரணத்தால் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் அவர்கள் மீது சேற்றை வாரி இறைத்துத் தாக்கும் முயற்சியை மும்முரம் செய்தனர். பிராமணர்களில் பலரைக் கொன்றழித்தனர்.
ஞானம் அனைவருக்கும் கிடைக்கவில்லை என்ற வாதம் உண்மையல்ல. பிரிடிஷார் வருவதற்கு முன்பு அனைத்து கிராமங்களிலும் திண்ணைப் பள்ளிகள் இருந்தன. அனைத்துக் குலங்களைச் சேர்ந்தவர்களும் சமமாக அந்த திண்ணை பள்ளிகளில் கல்வி கற்றனர். படிப்பறிவில்லாதவர்களோ தாய் மொழி படிக்கத் தெரியாதவர்களோ அன்று யாருமே இல்லை.
இதெல்லாம் 1770க்கு முன் பிரிடிஷார் வெளியிட்ட செய்திகளில் அடங்கியுள்ளது. ‘தர்மபால்’ இதனை வெளிச்சத்திற்குக் கொணர்ந்தார். நம் தேசத்தில் கல்வி சிலருக்கு மட்டுமே கிடைத்தது என்ற வாதத்தை தர்மபால் ஆதாரங்களோடு கண்டித்தார்.
1922-25 பிரிட்டிஷ் ரிகார்டுகளின்படி தமிழ்நாடு தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்த பாடசாலைகளில் பிராமணர் 13 சதவிகிதம், மற்ற குலத்தினர 84 சதவிகிதத்தினர். மதராஸ் நகரத்தில் பிராமணர்கள் 23 சதவிகிதம், பிற குலத்தவர் 69 சதவிகிதத்தினர் படித்தார்கள். பிற குலத்தவருக்கு பாரத தேசத்தில் படிக்கும் வசதி இல்லை என்ற ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பொய்களையையும் பிரசாரத்தையும் முழுவதுமாக தர்மபால் கண்டித்தார்.
“ஹிந்து சமுதாயத்தில் இருந்த வேற்றுமைகளை நீக்குவதற்குப் போராடி உலக நன்மையைக் கோருபவர்களாக சமுதாய சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியவர்கள் பிராமணர்கள். சுதந்திர போராட்டத்தில் உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்து சேவை செய்த தேசபக்தர்களின் மேல் ‘பிரித்தாளும் ஆட்சி’ என்ற துஷ்ட அரசியல் தந்திரத்தை மேற்கொண்ட ஆங்கிலேயர்கள் பல பொய்களை அந்த வகுப்பினர் மேல் சுமத்தினார்கள். பிராமணரல்லாதவர்களை பிராமணர்கள் மேல் தூண்டிவிட்டு ஆத்திரமூட்டி, ஒரு குலத்தையோ வகுப்பையோ வேறொன்றின் மீது உசுப்பிவிட்டு பிரித்தாளும் யுக்தியை ஆங்கிலேயர்கள் எவ்வாறு தந்திரமாக கையாண்டார்கள்? அந்த விளையாட்டில் நம் தலைவர்கள் எனப்படுபவர்களே எவ்வாறு இறுதியில் பலியாகிப் போனார்கள்? என்பதெல்லாம் நமக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவங்கள்!” என்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் மதிப்பிற்குரிய மாதவராவு சதாசிவ கோல்வல்கர் (குருஜி).
பிராமண வெறுப்பு என்பது ஒரு அரசியல் முழக்கமாக்கி சமுதாயப் போராட்டங்கள், துவேஷத்தைத் தூண்டும் பல்வேறு அமைப்புகள் ஆரம்பமாயின. இதனால் பரம்பரையாக வந்து கொண்டிருந்த குரு சிஷ்யத் தொடர்பு சேதமடைந்தது. ஞானப் பிரவாகத்திற்கு குறுக்கீடு நேர்ந்தது. பிராமண எதிர்ப்பு சமுதாயத்தில் பரவி, அதன் பின் வந்த பிராமணத் தலைமுறையினர் தம் தொழிலை விட்டு விலகவேண்டிய சூழ்நிலை உருவாகியது. கிராமங்களில் புரோகிதர்கள் கிடைக்காத குறை கண்கூடாகத் தெரிந்தது.
மத மாற்றத்திற்கு இதனை ஒரு வாய்ப்பாகக் கண்ட சர்சசுகள் அந்த இடத்தை ஆக்கிரமித்தன. சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட இந்த மேற்கத்திய வந்தேறிகளின் தந்திரம் தொடர்வது நம் துரதிருஷ்டம்.
Source: ருஷிபீடம், ஜூலை 2018