தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
English is the greatest language! – “உலக மொழிகளில் ஆங்கிலமே சிறந்த மொழி!”. இது ஒரு பெரிய பொய்.
“ஆங்கில மொழியைப் பரப்புவதற்கு ஆங்கில மீடியம் கல்வியை பாரத தேசத்தில் அறிமுகப்படுத்தியதன் பின்னால் எந்த விதமான விஞ்ஞானமும் தென்படவில்லை. யூரோப் தேசங்களின் விஞ்ஞானத்தின் முன் தேசிய வித்யைகள் அனைத்தும் குறைந்தவையே என்று காட்டும் வேறுபாட்டு புத்தியே இதில் தென்படுகிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைப் புகழ்ந்து ஆர்தர்ஸ்டான்லி, டென்னிசன் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய ஆங்கிலேய தேச பக்திக் கல்வியை பாரதிய மூளைகளுக்குள் திணிப்பதற்கு ஆங்கிலக் கல்வி பயன்பட்டது”. (பாரத மக்களுக்காக கல்வி” -சார்லஸ் ட்ரெவில்யன் 1838).
சுதந்திர பாரதம் உதயமாகி எழுபது ஆண்டுகள் கடந்தபின்னும் சொந்த மொழியையும் சொந்த நடையையும் புனரமைத்துக் கொள்ள இயலாமல் இருக்கிறோம்.
இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்று வரை மெக்காலேவையும் மாக்ஸ்முல்லரையும் பற்றிப் பேசாத கல்வி அரங்குகள் இல்லை என்றால் அதில் வியப்பில்லை.
யார் இந்த மெக்காலே? யார் இந்த மாக்ஸ்முல்லர்? இன்றைய ஆட்சியாளர்களை விட்டு விட்டு இவர்களை குறித்து விவாதிப்பது ஏன்?
1830ல் ஆங்கிலக் கல்வியை நம் தேசத்திற்குள் நுழைத்து நம் வரலாற்றை முழுவதும் தலைகீழாக மாற்றி பள்ளிகளிலும் கல்லுரிகளிலும் தவறான பாட நூல்களை அறிமுகம் செய்தவர் மெக்காலே!
“பாரதிய இலக்கியம் எல்லாம் சேர்த்து யூரோபியன் நூலகத்தில் ஒரு அலமாரியில் ஒரு தட்டில் அடுக்கக் கூடிய அளவுதான் உள்ளது” என்றார் அறியாமையோடு மெக்காலே!
இதனைக் கொண்டு அவருக்கு பாரதிய இலக்கியம் பற்றி உள்ள புரிதலை அறிந்து கொள்ளலாம்.
மெக்காலே 12-10-1836 தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார்…
“இந்தியாவில் ஆங்கில பள்ளிகள் தழைத்து வளர்ந்து வருகின்றன. கல்வி விஷயத்தில் நம் திட்டங்கள் பரவிவிட்டால் இந்தியாவில் இனி ஒரு விக்ரக ஆராதனை செய்பவன் கூட மீதி இருக்க மாட்டான்”
தான் அறிமுகம் செய்த கல்வி முறையின் லட்சியத்தை விவரித்து மெகாலே, “நிறத்திலும் குருதியிலும் மட்டுமே பாரதியர்களாகவும் எண்ணத்திலும் உணரச்சியிலும் ஆங்கிலேயர்களாகவும் இருக்கும் தலைமுறையை உருவாக்குவேன்” என்கிறார்.
இந்த மெக்காலே 1839ல் மாக்ஸ்முல்லரை சந்தித்தார். அவரிடம் ருக்வேதத்தை மொழிபெயர்க்கும் பணியை ஒப்படைத்தார். ஈஸ்ட் இந்தியா கம்பெனி இதற்காக லட்சக்கணக்கான ரூபாய்கள் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகக் கூறினார். ஆனால் ஒரு நிபந்தனை – இந்த ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்கும் ஹிந்துக்களுக்கு தம் வைதிக தர்மத்தின் மீது நம்பிக்கை அழிய வேண்டும் என்ற தன் தீய எண்ணத்தை வெளிப்படுத்தினார்.
ஈஸ்ட் இந்தியா கம்பெனியும் அதன் பின்னர் வந்த பிரிட்டிஷ் அரசாங்கமும் எடுத்துவந்த சீர்திருத்தங்களின் காரணமாக நம் தேச பள்ளிகளில் ஆயுர்வேதம், சமஸ்கிருத மொழி போன்ற தேசிய கல்விகளை போதிப்பது நிறுத்தப்பட்டது. தேசிய மொழிகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஆங்கில மீடியத்தில் கல்வி கற்பிக்கப்பட்டது.
மாக்ஸ்முல்லர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் (9-12-1866), “வேதங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியைத் தொடங்கியுள்ளேன். இந்தியாவின் எதிர்காலத்தின் மீது இதன் தாக்கம் தீவிரமாக இருக்கப் போகிறது. அவர்களின் மூவாயிரம் ஆண்டு வரலாற்றுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஆதாரமான வேதங்களை துடைத்தெறியும் பணி இந்த மொழிபெயர்ப்பு மூலம் நடக்கப் போகிறது” என்கிறார்.
கிறிஸ்துவ மத தீவிர அபிமானி ‘போதன்’ என்பவர் நிறுவிய பொருளாதார செழிப்பு வாய்ந்த ‘போதன் டிரஸ்ட்’ என்ற அமைப்பை ஆங்கிலேயர்களுக்கு சமஸ்கிருத மொழியில் பயிற்சி அளிப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
இந்த நிறுவனத்தின் மூலம் பொருளாதார உதவி பெற்ற மாக்ஸ்முல்லர் நம் புராணங்களையும் இதர நூல்களையும் சுயநலம் மிக்க இலக்கோடு மொழிபெயர்த்தார். இங்கிலாந்தில் நிரந்தரமாக வாழத் தொடங்கியபின் வேதத்தில் டாக்டரேட் கூட சம்பாதித்தார். எந்த ஒரு பாரதிய மொழியிலும் தேர்ச்சி இல்லாத, என்றுமே பாரத தேசத்தைப் பார்த்திராத மாக்ஸ்முல்ல்ர் 27-11-1894ல் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் பைபிள் குறித்து எடுத்துக்கூறி, அப்படிப்பட்ட சிறந்த நூல் உலகிலேயே இல்லை என்கிறார். வேதத்தையும் சமஸ்கிருத மொழியையும் குறைத்து மதிப்பிட்டுப் பேசுகிறார்.
பாரதிய இலக்கியம் முழுவதும் அதர்மத்தோடு கூடியது, கள்ளம் கபடமானது என்று பிரச்சாரம் செய்த பிரிட்டிஷ் வந்தேறிகள் தம் இலக்கியத்தை அற்புதமாக பிரச்சாரம் செய்தார்கள். சர்ச்சுகள் செய்த துஷ்பிரசாரத்தால் ஆங்கிலக் கல்வி கற்ற இந்தியர்கள் கூட வேத இலக்கியத்தின் மீது அவமதிப்பை காட்டத் தொடங்கினர்.
“எல்லாம் வேதத்திலேயே இருக்கிறதாம்!” என்று ஏளனம் செய்யும் போலி மேதாவிகளுக்கு அப்போதும் இப்போதும் கூட குறைவில்லை.
பிரிட்டிஷாருக்கு ஊழியம் செய்வதே கௌரவம் என்று எண்ணும் மனநிலை கொடிருந்ததால் இந்தியர்களின் அறிவுக்கூர்மை அன்றைய ஆட்சியாளர்களுக்கு நன்றாக உதவியது. அவர்களின் பணிளைச் செய்து கொடுப்பதற்குத் தேவையான குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி முறை இன்றும் கூட தொடர்கிறது.
கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதே லட்சியமாக ஆங்கிய மீடியம் பள்ளிகள் ஒவ்வொரு ஊரிலும் நிறுவப்பட்டன. பள்ளிகளில் தாய்மொழி பேசிய மாணவர்களை அவமதித்து அபராதம் விதிக்கப்பட்டது. கலாசாரத்திற்கும் சம்பிரதாயத்திற்கும் சின்னங்களான பொட்டு, மை, போன்றவை தடை செய்யப்பட்டன. (இன்றும் கிறிஸ்துவ பள்ளிகளில் இதே முறை தொடர்கிறது. ஆனாலும் ஹிந்துக்கள் தம் பிள்ளைகளை அந்த பள்ளிகளுக்கு அனுப்புவதை நிறுத்தாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.)
ஆங்கிலக் கல்வி பயின்றவருக்கே சன்மானம், ஒட்டுரிமை, கஜாரோஹணம், உத்தியோகம் அளிக்கப்பட்டன. இவ்விதமாக ஆங்கில மோகத்திற்கு விதை நாட்டப்பட்டது.
வேத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தம் அடுத்த தலைமுறையை வேதக் கல்வியிலிருந்து தொலைவில் வைத்தார்கள். ஆங்கில மொழியைக் கற்பது ஒரு கௌரவ அடையாளமாக மாறியது. உள்ளூர் மொழி, தாய் மொழி பயன்படுத்துவது வெட்கக்கேடாக கருதப்பட்டது. பல்வேறு சாஸ்திரங்களில் நிபுணர்களாக இருந்தாலும் ஆங்கிலம் பேச முடியாவிட்டால் கல்வியறிவு இல்லாதவராகவே கருதப்பட்டார்.
கிரகணங்கள், சூரியோதயம், சூரிய அஸ்தமனம் போன்றவற்றை கணக்கிட்டு கூறும் பஞ்சாங்க அறிஞருக்கு ஆங்கிலம் பேச வராவிட்டால் உபயோகமற்றவரே! சமஸ்கிருதத்தில் பொதிந்துள்ள அபாரமான விஞ்ஞானம் யாருக்கும் கிடைக்காமல் போனது. சம்ஸ்கிருத செல்வப் பெட்டகத்தின் சாவி காணாமல் போனது.
சமஸ்கிருதம், பிராக்ருதம் போன்ற புராதன மொழிகளோடு ஒப்பிட்டால் ஆங்கிலம் மிகப் புதியது. அறிவியல் பூர்வமானது அல்ல. நிறைவானதும் அல்ல. தேசிய மொழிகளில் இருக்கும் கலைச்சொற்களை ஆங்கிலத்திற்கு மாற்ற முடியாது. உதாரணத்திற்கு புண்ணியம், தர்மம்… போன்றவை.
நம் தேசத்தின் பல்லாயிரம் ஆண்டு அனுபவத்தையும் விஞ்ஞானத்தையும் பொருள் புரிந்து கொள்ள முடியாத தலைமுறை உருவாகி வருகிறது.
தாய் மொழியில் கல்வி கற்பதில் உள்ள விஞ்ஞானத்தை பல ஆய்வுகள் எடுத்துக் கூறிய போதிலும் அரசாங்கங்கள் காதில் போட்டுக் கொள்வதில்லை. பெற்றோர் அதை விட மோசம். தாய் மொழி படிக்கத் தெரியாத தலைமுறை உருவானால் இதுநாள் வரை நாம் கட்டிய இலக்கிய மாளிகை இடிந்து போகாதா? தாய் மொழியில் எழுதப்பட்ட நூல்கள் அழிந்து விடாதா? தேசிய மொழிகள் மறைந்து விடாதா?
சிந்திப்போம்!
“ப்ரகதி பதாம் நஹி விசலேமா – பரம்பராம் சம்ரக்ஷேம“ – “முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து சென்று நம் பாரம்பரியத்தை பாதுகாத்துக் கொள்வோம்!” (க்ருத்வா நவ த்ருட சங்கல்பம்… என்ற சம்ஸ்கிருத பாடல்).
ஆங்கில மோகத்தால் தாய் மொழியிலிருந்து விலகிச் செல்பவரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. தம் பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசுவதை கௌரவமாக எண்ணுவதும் அதிகமாகியுள்ளது. மம்மி, டாடி, அங்கிள் என்ற அழைப்புகளும் பிறந்த நாள் பண்டிகைகளில் ஆங்கிலேய கலாசாரமும் நுழைந்தன. கிடைத்த விடுதலைக்கு பொருள் இல்லாமல் போனது.
வடை பாயசத்தோடு கூடிய நம் தேசிய விருந்துணவை விட்டுவிட்டு… பிரெட் துண்டுகளைத் தின்கிறோம்.!
அரசியல் சட்டத்தின் அதிகார மொழி!
உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்க இடம் தேடியலைந்து தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக் கொண்டார்கள். தாய்மொழியான ஹீப்ரூவை அறிந்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவரே இருந்தாலும் தன்னம்பிகை உள்ளவர்கள். ஆதலால் அந்த நாட்டவர் தம் மொழிக்குப் பட்டம் கட்டினார்கள். அவர்களே இஸ்ரேல் நாட்டவர்! போராடி சாதித்த சுதந்திரத்தின் பழங்களை அனுபவிக்கின்ற வீரர்கள் அந்த யூதர்கள்.
அதற்கு முற்றிலும் மாறானது நம் தேசம். இரு தேசங்களும் ஏறக்குறைய ஒன்று போலவே வேற்று நாட்டு ஆட்சியிலிருந்து விமுக்தி அடைந்தன. ஆனால் யாரோ ஒரு ஆங்கிலேய எழுத்தாளர் கூறியது போல் India’s freedom is a bargained freedom! பேரம் பேசி சாதித்துக் கொண்ட சுதந்திரம் நம்முடையது. நம் தேசத்திற்கு இரண்டு பெயர்கள் “India that is Bharat”. அதிகார மொழியாக ஆங்கிலம், ஹிந்தி!!
அரசியல் சட்டத்தை அமைத்த டாக்டர் அம்பேத்கர் சமஸ்கிருதம் துணை மொழியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவருடைய ஆசை நிறைவேறவில்லை. தாய்மொழியான சம்ஸ்கிருதத்திற்கோ, ஹிந்திக்கோ, பிற இந்திய மொழிகளுக்கோ கிடைக்க வேண்டிய கௌரவம் வெளி நாட்டு மொழிக்கு கிடைத்தது. “I am the Last English Prime Minister” என்றார் முதல் பிரதமர்!
அவருடைய விருப்பத்தின்படி நம் தேசத்தில் ஆங்கிலம் வேரூன்றியது. பிரித்தாளும் அரசியல் தந்திரத்தோடு பிரிட்டிஷார் நகர்த்திய காய்களால் மதராஸ் மாநிலத்தவர் ஹிந்திக்கு எதிராக போராடினார்கள். இன்றுவரை போராட்டங்களுக்கு “அஞ்சி” மத்திய அரசு ஆங்கிலத்திற்கு முதல் மரியாதை கொடுத்து வருகிறது.
அரசியலமைப்பில் பிரிவு 343 லிருந்து 351 வரை அதிகார மொழித் தொடர்பான கருத்துக்களே! ஹிந்தியை முழுவதும் அரசியல் சட்டத்தில் அதிகார மொழியாக கொண்டு வருவது அசாத்தியமென்று நம் “தலைவர்கள் கருதினர்”. அதற்காக பதினைந்து ஆண்டு காலத்தை ஒதுக்கினார்கள். அதனால் அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள். ஆங்கிலத்தைக் கூட இணையாக சில ஆண்டுகள் தொடர வேண்டுமென்று பரிந்துரைத்தனர்
1955ல் BG கேர் தலைமையில் அதிகார மொழிச் சங்கம் ஏற்பட்டது. அவர் தயாரித்த அறிக்கையை பார்லிமென்ட் கமிட்டி பரிசீலித்து சிபாரிசுகளைச் செய்தது. கம்பும் உடையாமல் பாம்பும் சாகாமல் good–goody யாக யாருக்கும் வலிக்காமல் தனக்கும் வலிக்காமல் தப்பித்துக் கொள்வது போல் இருந்தது அந்த அறிக்கை. அதன் விளைவாக ஆங்கிலம் நம் தலை மேல் ஏறி அமர்ந்து கொண்டது.
“மத்திய அரசின் நடைமுறைகளுக்கு பாரதிய மொழியான ஹிந்தியை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஆனால் அதற்கு நிச்சயமான கெடு விதிக்கத் தேவையில்லை” என்று முடிவுக்கு வந்தார்கள். 1965 ஜனவரி 26 கெடு தேதி நெருங்கியதால் தமிழ்நாட்டில் ஹிந்தி வெறுப்பு போராட்டம் உற்சாகமடைந்தது. தற்கொலைகள், அரசாங்க சொத்துக்களை எரிப்பது, போலீசார் துப்பாக்கிச் சூடு என்று மாநிலம் பற்றியெரிந்தது.
அதனால் அரசாங்கம் சமரசத்திற்கு வந்தது. “தற்போதைக்கு ஆங்கிலம் பயன்படுத்துவது குறித்து வரையறை விதிக்கக் கூடாது. 1965குப் பின்னரும் கூட தேவைப்படும் வரை பார்லிமென்ட் பரிந்துரைத்த நடைமுறைப் பணிகளுக்கு ஆங்கிலத்தை பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டதால் வேற்றுமொழி நம் தேசத்தில் ஆழமாக வேரூன்றிக் கொண்டது.
அரசியலமைப்பின் 343 ம் பிரிவுக்கு ஏதுவாக அதிகார மொழிச் சட்டத்தை எடுத்து வந்தார்கள். இந்த சட்டம் ஏற்படுத்திக் கொடுத்த வசதியின்படி பதினைந்து ஆண்டுகள் கெடு முழுமையடைந்த பின்னரும் ஹிந்தியோடு கூட ஆங்கிலமும் அதிகார விவகாரங்கள் அனைத்திற்கும் பயன்படுத்தலாம். 345 பிரிவின் படி மாநிலங்களில் கூட ஆங்கிலப் பயன்பாட்டின் மீது இணக்கத்தன்மை ஏற்படுத்தியுள்ளது.
347 ஆவது பிரிவின் படி சுப்ரீம் கோர்ட்டிலும் ஹைகோர்ட்டிலும் விவாதங்களும் தீர்ப்புகளும், பார்லிமென்ட், சட்டசபைச் சட்டங்கள், ஜனாதிபதி அல்லது கவர்னர்கள் வெளயிடும் உத்தரவுகள், அரசாங்க ஆணைகள், நிபந்தனைகள் நியமனங்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். 348 பிரிவு கூட ஆங்கில மொழியை மெச்சிக் கொள்ளுவது போலவே உள்ளது. இதன்படி கோர்ட் தீர்ப்புகள், டிகிரிகள், உத்தரவுகள் பார்லிமென்ட் சட்டம் செய்யும் வரை ஆங்கிலத்திலேயே தொடரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஹிந்தியை அதிகார மொழியாகச் செய்ய வேண்டுமென்ற சங்கல்பம் அரசியலமைப்பில் உண்மையாக உள்ளதா? அரசியலமைப்பின் நகல் 1987வரை ஹிந்தியில் இருக்கவில்லை. இந்த ஆணைகளை அதிகாரபூர்வமாக ஹிந்தியில் மொழிபெயர்த்து 58 அரசியமைப்பு திருத்தம் மூலம் 394 ஏ பிரிவில் சேர்த்தார்கள். அரசியமைப்பு மூலம் தொற்றிக் கொண்ட இந்த ஆங்கில மோகம் வரவர இன்னும் அதிகரித்து நம் மொழிகளின் வளர்ச்சிக்கு தடையாக நிற்கிறது. தேச பக்தர்களின் வேதனை வனத்தில் ஒலிக்கும் கூக்குரலாக யாருக்கும் கேட்காமல் போகிறது.
Source: ருஷிபீடம், தெலுங்கு ஆன்மீக மாத இதழ், செப்டம்பர்-2018