தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“Punctuality is absent among Indians – நேரம் தவறாமை இந்தியர்களுக்குத் தெரியாது!”
உலக நாடுகளில் இந்தியர்களுக்கு மட்டுமே நல்ல நேரம் பார்ப்பது என்ற விஞ்ஞான முறைமை உள்ளது. ஒரு பணியை நன்கு தேர்ந்தெடுத்த நேரத்தில் கச்சிதமாக மணி, நிமிடம், வினாடியோடு கூட செய்து முடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நாம். நம்மைப் பார்த்து முதலில் வியந்து, பின்னர் ஏளனம் செய்வதற்காக Indian Punctuality என்ற சொல்லை பயன்படுத்தினர் வந்தேறிகள்.
திருமணம், புதுமனை புகுவிழா போன்ற விழாக்களில் முகூர்த்த நேரத்தை தவறாமல் கடைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் நம்மை விட யாரும் இல்லை.
அகந்தை கொண்ட பிரிட்டிஷார் தம் தாழ்வுமனப்பான்மையை காட்டிக் கொள்ள விரும்பாமல் இவ்விதமான ஆட்சேபணைகளை கூறத் தொடங்கினர். போகப்போக நமக்கு நேரம் தவறாமை குறித்த அலட்சியம் இருப்பதாகவும் இந்தியர்கள் எதையும் சரியான நேரத்திற்குத் தொடங்க மாட்டார்கள் என்றும் பிரச்சாரம் செய்தனர்.
மனிதன் எப்போது உறக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும்? எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும்? என்பது பற்றி ரிஷிகள் படைத்த சாஸ்திரங்கள் கூறும் அறிவியல் நமக்கு உள்ளது.
“ப்ராஹ்மீ முஹூர்தே உத்திஷ்டே ஸ்வஸ்தோ ரக்ஷார்தமாயுஷம்”
பொருள்: சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து ஆரோக்கியத்தை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் – என்பது ஆயுர்வேத நூல்களில் முதல் பக்கத்திலேயே உள்ள அறிவுரை!
சோம்பலை அருகில்கூட நெருங்கவிடாத பாரதியர்களுக்கு நேரம் தவறாமை தெரியாதென்று அபவாதம் சுமத்துவது அசட்டுத்தனம்.
நித்தியம் செய்யும் சந்தியாவந்தனத்தில் அர்க்கியத்தை சரியான நேரத்தில் செய்யாவிட்டால் பிராயச்சித்தம் செய்து கொள்ளும் பண்பாடு நமக்குள்ளது. சரியான நேரத்தில் எதையும் செய்ய வேண்டும் என்று போதிக்கின்ற ஸ்லோகங்கள் சமஸ்கிருத மொழியில் பல உள்ளன.
மகாபாரதத்தில் உள்ள இந்த ஸ்லோகப் பகுதி நமக்குள்ள நேரம் தவறாமையை தெரிவிக்கிறது…
ஸ்வ: கார்ய மத்ய குர்வீத
பூர்வாஹ்ணே சாபராஹ்ணிகம் !
பொருள்: நாளை செய்யலாமென்ற பணியை இன்றே செய்ய வேண்டும். மதியம் செய்யலாம் என்று எண்ணிய வேலையை காலையே செய்ய வேண்டும்.
ஹிதோபதேசம் கூறும் இந்த நற்சொல் நாம் நேரத்தை எத்தனை மதிப்புள்ளதாக கணக்கிடுகிறோம் என்பதை தெரிவிக்கிறது…
க்ஷணஸ: கணஸ்ஸ்சைவ வித்யாம் அர்தஞ்ச சாதயேத் !
பொருள்: நேரத்தை வீணடிக்காமல் யாரிருப்பார்கள்… சுப முகூர்த்தம் வைத்துக் கொண்டு நேர விரயம் இன்றி வேலைகளைச் செய்யும் பாரதியர்களை விட?.
வந்தேறிகள் நம் மேல் செய்த நகைச்சுவையை நாமும் நம்மைப் பற்றி நினைத்துக் கொள்வது தாழ்வு மனப்பான்மையின் உச்சம்!
Source- ருஷிபீடம் மாத இதழ், மார்ச், 2019