சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – பகுதி 2
தெலுங்கில்- பி.எஸ் சர்மா
தமிழில்- ராஜி ரகுநாதன்
கூப கனன நியாயம் – வீடு பற்றி எரியும் போது கிணறு தோண்டுவது போல…!
கூப: – என்றால் கிணறு. கனனம் – என்றால் தோண்டுவது. வீடு பற்றி எரிகிறது. தீயை அணைப்பதற்கு நீர் வேண்டும். ஒரு புத்திசாலி தண்ணீருக்காக கிணறு தோண்டத் தொங்கினானாம்.
எந்த விஷயமானாலும் அது குறித்த முன் யோசனை வேண்டும் என்பதை நையாண்டியாகக் கூறும் சமஸ்கிருத நியாயம் இது.
நீதி சதகத்தில் உள்ள ஒரு சுலோகம் இதே கருத்தை தெரிவிக்கிறது.
சிந்தநீயா ஹி விபதாம் ஆதாவேவ ப்ரதிக்ரியா |
ந கூபகனனம் யுக்தம் ப்ரதீப்தே வஹ்னினா க்ருஹே || (ஆர்ய தர்மம்)
பொருள்- ஒரு வேலையைத் தொடங்கும் போதே எதிர்ப்படக் கூடிய தடைகள் குறித்து முன்பாகவே யூகித்து, அவற்றை எவ்வாறு கடப்பது என்று யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு தடைகள் நேர்ந்தபின்பு யோசிக்கத் தொடங்குவது சரி அல்ல. வீடு பற்றி எரியும் போது அணைப்பதற்கு நீருக்காக கிணறு தோண்டத் தொடங்குவது அறிவுள்ள பணியல்ல.
ஏதாவது பெரிய செயலைச் செய்ய எண்ணும் போது முழுமையான முன்யோசனை அவசியம். செய்ய வேண்டிய வேலைக்கான பட்டியலைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். யோசனை-1, யோசனை-2 என்பதாக எழுதிக் கொள்வது அறிவுள்ள செயல்.
தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் முன்னோக்குப் பார்வையோடு விளங்க வேண்டும். கடைசி நேரத்தில் அவசர அவசரமாக புத்தகத்தைத் திருப்புவதை ‘கூப கனன’ நியாயத்திற்கு உதாரணமாகக் கூறலாம்.
மின்சாரம் தடைப்படும் என்று தெரிந்தால் தீப்பெட்டி, மெழுகுவர்த்தி போன்றவற்றை முன்பாகவே எடுத்து வைத்துக் கொள்வோம். மழை நாளில் குடை எடுத்துச் செல்வோம். இவை முன்யோசனைக்கு எளிய உதாரணங்கள். திருமணம் போன்ற சுப நிகழ்வுகளின் போதும், மிகப் பெரிய அரங்க ஏற்பாட்டின் போதும் முன்யோசனையோடு திட்டமிடுவது மிகவும் தேவை.
விடுதலைக்குப் பிறகு முன்யோசனையில்லாத முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நமக்கு இராணுவத்தின் தேவையில்லை என்றெண்ணினார். நமக்கு பகை நாடுகளே இல்லை என்ற பிரமையில் இருந்தார். அவருடைய பிரமையை தவிடு பொடியாக்கும்படி 1948 லேயே பாகிஸ்தானும் 1962ல் சைனாவும் நம்மைத் தாக்கின.
சைனா பல காலமாக நம் மீது போர் தொடுக்கச் செய்து வந்த ஏற்பாடுகளை நம் தேசத் தலைமை உணரவில்லை. முன்னோக்குத் திட்டமில்லாத காரணத்தால் நம் தேசத்தின் பல பகுதிகளைப் போரில் இழந்தோம்.
சமுதாய நலம் விரும்பியான கோல்வல்கர், உல் துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல் இருவரும் எச்சரித்தபோதும், ராணுவத்தை நவீனப்படுத்த வேண்டிய தேவையை எடுத்துக் கூறிய போதும் அன்றைய பிரதமர் நேரு கண்டு கொள்ளவில்லை. மேஜர் ஜெனரல் (ரி) ஜி.டி. பக்ஷி சைனா போர் குறித்து புகழ்பெற்ற டாகுமென்டரியில் பேசுகையில் இது குறித்து அச்சமின்றி எடுத்துரைத்தார்.
சைனாவின் ஆக்கிரமிப்பில் நான்காயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீர்கள் காயமடைந்தனர். பலர் உயிரிழந்தனர். நான்காயிரம் வீரர்கள் எதிர்களால் சிறை பிடிக்கப்பட்டனர். அதிர்ந்து போன நேரு ‘கூப கனன’ முயற்சிகளை ஆரம்பித்தார்.
மற்றுமொரு உதாரணம்- நம் ஆரோக்கியம் குறித்து…
பர்த்ருஹரி நீதி சதகத்தில் உள்ள சுலோகம் இது விஷயமாக கூறுவது என்னவென்றால்…
யாவத் ஸ்வஸ்தமிதம் சரீர மருதம் யாவாஜ்ஜரா தூரதோ
யாவச்சேந்த்ரிய சக்திரப்ரதிஹதா யாவத் க்ஷயோநாயுஷ: |
ஆத்மஸ்ரேயசி தாவதேவ விதுஷாம் கார்ய: ப்ரயத்னோ மஹான்
சக்தீப்தே பவனேது கூபகனனம் ப்ரத்யுத்யம் கீத்ருச: ||
பொருள்- இந்த உடல் நன்றாக இருக்கும் போதே. நோய்த் தொந்தரவு இல்லாமல், முதுமை வராமல், சுகமாக இருக்கும் போதே, உடல் உறுப்புகள் வலிமையாக இருக்கும் போதே, ஆயுள் இருக்கும் போதே மோட்சத்திற்கான முயற்சிகளைச் செய்வது புத்திசாலிகளின் கடமை. வீடு பற்றிக் கொண்டபின் கிணறு தோண்ட முயற்சிப்பவரை புத்திசாலிகள் என்று கூற இயலாது அல்லவா?
இந்த சமஸ்கிருத நியாயம் நமக்கு அளிக்கும் செய்தி – முன்யோசனையோடு முன்னோக்கி நகர்! சரியான நேரத்தில் விழித்துக் கொள்!