spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஅயோத்தி எம் அரசே!

அயோத்தி எம் அரசே!

- Advertisement -
ayodhya ram

– சுஜாதா தேசிகன்

இக்கட்டுரையை எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அயோத்தியில் ஸ்ரீராமர் பிரதிஷ்டையான அத்தருணம் என் மனதின் எண்ண ஓட்டங்களை விவரிக்க இயலவில்லை.

முதல் முறை அயோத்திக்குச் சென்ற அனுபவத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.

2017ல் அக்டோபர் 10 இரவு பேருந்தில் தூங்கிக்கொண்டு இருந்தபோது “அயோத்தி வந்தாச்சு!” என்று எழுப்பப்பட்டேன். முழித்த போது எங்கோ ராம பஜனை கேட்டது. மங்கலான வெளிச்சத்தில் சில குரங்குகள் தென்பட்டன.

காலை சூரியோதயத்தில் சரயூவில் மூழ்கி அயோத்தியை ரசிக்க ஆரம்பித்தேன்.

அயோத்யா என்றால் சொல்ல முடியாத அழகு என்று பொருள். ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனது கருட பஞ்சாசத்தில் பெரிய திருவடியின் பார்வையை ‘அயோத்யா’ என்கிறார். அதாவது ஜெயிக்க முடியாத அழகு வாய்ந்ததாம் அவர் திருவடி.

முன்பு அயோத்யா என்றால் ‘ராமஜன்ம பூமி’ என்ற பெயர் நினைவுக்கு வந்து உள்ளூரக் கொஞ்சம் பதற்றம் நம்மைப் பற்றிக்கொள்வதை மறுக்க முடியாது.

காரணம் நாம் படிக்கும் வரலாறு வடி கட்டியது. ஏதோ ஆங்கிலேயரும், முகம்மதியர்களும் நமக்கு நல்லது செய்தார்கள் போன்ற தோற்றத்துடன் எழுதப்பட்டுள்ளது. ஹிந்துக் கோயில்களின் மீதும், நம் தேசத்தின் மீதும் அவர்கள் புரிந்த காட்டுமிராண்டி தாக்குதலின் சுவடுகளை நான் செய்த பல யாத்திரைகள் முழுவதும் பார்க்க முடிந்தது. இவை எல்லாம் நம் வரலாற்றுப் பாடத்தில் இல்லாத ஒன்று. ஆங்கிலேயர்கள்தான் ரயில்வே, போஸ்ட் பாக்ஸைக் கொண்டு வந்தார்கள் என்று ரிட்டையரான தாத்தாக்கள் பிதற்றிக்கொண்டு இருப்பதற்கு, நம் வரலாற்றைச் சரியாக எழுதாததுதான் காரணம்.

மதன் எழுதிய ’வந்தார்கள் வென்றார்கள்’ என்ற சரித்திரப் புத்தகத்தை இன்றும் பலர் விரும்பி படிப்பதுண்டு. நானும் இரண்டு முறை படித்திருக்கிறேன். சமீபத்தில் படித்த போது அயோத்தி பற்றிய எழுதிய வாசகங்களைப் படித்த போது சற்று அதிர்ந்து போனேன்.

//இந்தியாவுக்கு வந்த பிறகு குவாலியர் அரண்மனையையும் சந்தேரி அரண்மனையையும் பார்த்து வியந்த பாபர், துருக்கிய கட்டடக்கலை நிபுணர்களை வரவழைத்து, ஆக்ராவில் சில மாளிகைகளையும் மசூதிகளையும் இந்தியக் கட்டடக் கலையைப் பின்பற்றி உருவாக்கினார். அவை எதுவும் தற்போது இல்லை. மிஞ்சியிருப்பது, பானிபட் கிராமத்தில் (போரில் வெற்றி பெற்ற பிறகு) கட்டிய ஒரு மசூதி மற்றும் அயோத்தியில் அவர் ஆணையின்கீழ் மீர்பாக்கி என்ற தளபதி கட்டிய ஒரு மசூதி (இதுவும் தற்போது இந்து மதத் தீவிரவாதிகளால் இடிக்கப்பட்டுவிட்டது). //

அதாவது பாபர் நம் ஸ்ரீராமர் ஆலயத்தின் மீது கட்டிய மசூதி என்று எழுதவில்லை. போகட்டும். ஆனால் அதை இடித்தது ஹிந்து தீவிரவாதிகளாம்! மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ முழுவதும் படித்தால் ‘வந்தார்கள் கொள்ளையடித்தார்கள்’ என்று தலைப்பைத் தான் அவர் சூட்டியிருக்க வேண்டும்.

1528ல் பாபர் மசூதி ஒன்று ஸ்ரீராமர் கோயில் இருந்த இடத்தின் மீது மீர்பாக்கி என்னும் பாபரின் படைத்தலைவரால் கட்டப்பட்டது. கலவரம் நடந்த பிறகு, ஆங்கிலேயர்கள் கட்டைப் பஞ்சாயத்து செய்து, ஒரு பகுதியில் மசூதியையும், இன்னொரு பகுதியில் கோயிலையும் அனுமதித்தார்கள். 1949ல் ஸ்ரீராம மூர்த்திகளை அங்கே பிரதிஷ்டை செய்தார்கள். 1992ல் அங்கே இருந்த மசூதியை இடித்து மீண்டும் அங்கே ராமரை பிரதிஷ்டை செய்தபோது நடந்தவை எல்லாம் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்த வரலாறு.

நான் பள்ளியில் படிக்கும்போதுதான் எனக்கு அயோத்தி ஸ்ரீராமர் கோயில் அறிமுகம். என் தந்தையின் நண்பர் ஒரு பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார். அவர் அச்சகத்தில் எழுத்துக்களைக் கோத்து வார்த்தையாக்குவதைப் பார்த்திருக்கிறேன்.பார்க்க மிக ஒல்லியாக ஊசிபோல இருப்பார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் இருந்தார்.

அவர் என் இல்லத்துக்கு வரும்போது ‘ராம ஜன்ம பூமி’ பற்றிய பேச்சு ஆரம்பித்துவிடும். என் தந்தை அவரிடம் ‘உனக்கு வீடு மனைவி மக்கள் எல்லாம் இருக்கிறார்கள். போராட்டம் என்று நீ சென்று உனக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்களின் நிலைமை என்னாவது?’ என்று அறிவுரை கூறுவார். அவர் தன் சொந்த நிலத்தை யாரோ ஆக்கிரமித்துவிட்டது போல உணர்ச்சிவசப்பட்டு சத்தமாகப் பேசுவார்.

ஒருமுறை என் இல்லத்துக்கு வந்து ‘ராமர் கோயில் கட்ட அயோத்திக்குக் கற்கள் அனுப்புகிறோம்’ என்று ரசீதுப் புத்தகத்துடன் வந்து பணம் வாங்கிக்கொண்டு சென்றார். பிறகு அவரை சிலகாலம் காணவில்லை. பிரிண்ட்டிங் பிரஸும் மூடியிருந்தது. விசாரித்ததில் அவர் அயோத்திக்குச் சென்றுள்ளார் என்று கூறினார்கள்.

சில வருடங்கள் கழித்து, ஒரு தடவை வீட்டுக்கு வந்து, காவல்துறை, லாக்கப், பிரிண்டிங் பிரஸ் சீல் என்று ஏதோ பேசிவிட்டுச் சென்றார். அதற்குப் பிறகு எங்கே சென்றார், என்ன ஆனார் என்று தெரியவில்லை. நாங்களும் அவரையும் ராமரையும் மறந்தே போனோம். ஏதோ ராமர் ஏதோ கோயில் எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் என்றுதான் அந்த வயதில் தோன்றியது. சிறுவயதில் எனக்கு இவையெல்லாம் புரியவில்லை என்றாலும், அவர்தான் அயோத்தி ராமர் கோயில் பற்றி எனக்கு முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தவர்.

அதற்குப் பிறகு, ராமர் கோயில் தொடர்பான பிரச்சினைகள் நாளிதழ்களில் வரத் தொடங்கின. பாபர் மசூதி (உண்மையில் அது மசூதி அல்ல!) இடிப்புப் படங்கள், துக்ளக் அட்டைப் படத்தைக் கருப்பாக்கி ’அயோத்தியில் அயோக்கியத்தனம்’ என்று நடுநிலைமை தலையங்கமும் எழுதினார். அதில் சோ “அயோக்கியத்தனம் நடந்திருக்கிறது… ஹிந்துக்கள் அமைதியை விரும்புகிறவர்கள் ராமர் கோயில் வர வேண்டும் என்று அவர்கள் நினைக்கலாமே தவிர, மசூதியை இடித்து அந்த இடத்தில் தான் கோயிலைக் கட்ட வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்… ” என்று எழுதினார்.

அட்டைப்படத்தில் (15.5.90) “அனுமனே மற்ற வானரங்கள் எங்கே” என்று ஸ்ரீராமர் கேட்பதாகவும், அதற்கு அனுமார் “அவைகள் எல்லாம் இந்தியாவில் அரசியல் தலைவர்களாகி உங்களுக்குக் கோயில் கட்ட வேண்டும், கட்டக் கூடாது, என இரு கோஷ்டிகளாகப் பிரிந்து, உங்கள் பெயரில் கூத்தடித்துக் கொண்டிருக்கின்றன பிரபோ!” என்று பதில் சொல்லுவது இருந்தது. சோ மீது மிகுந்த அபிமானம் இருந்தாலும் இன்று இதைப் பார்த்து படிக்கும் போது அயோத்தி பற்றி அவரின் கருத்து பல கடாசத்தக்கது என்றே தோன்றுகிறது.

அக் காலத்தில் தமிழகத்தில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று பிரபலமானவர்கள், எழுத்தாளர்கள் யாரும் தைரியமாகக் கூறவில்லை, குரல் கொடுக்கவில்லை. மனதுக்குள் இருப்பதை எழுத்தில் போலியாக, பாசாங்காக எழுதினார்கள் (இன்றும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்)

ராமருக்கு வேண்டும் கோயில்

பாபருக்கு வேண்டும் மசூதி

எங்களுக்கு வேண்டும் சுத்தமான கழிப்பறைகள்!

என்ற புத்திசாலித்தனமான வரிகளைப் பொதுஜன ஊடகங்கள் எடுத்துக்கூற, நாமும் இவற்றைப் படித்துவிட்டுச் சென்றோம். தமிழ்நாட்டில் நிலவிய இந்த அலட்சியப் போக்கால், சேது சமுத்திரம் இடிக்கும் திட்டம், ராமர் என்ன பொறியியலாளரா என்ற பேச்சுக்கள் எல்லாம் எழக் காரணம்.

அந்த காலத்தில் ஜெயலலிதா அவர்கள் மட்டும்தான் தைரியமாக ‘இந்தியாவில்தானே ராமர் கோவிலைக் கட்ட முடியும்’ என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் கூறினார். அயோத்தி முழுக்க ராமர் கோயில் இருக்கிறது, எதற்கு இன்னொரு கோயில் என்ற கண்டனங்களை இடதுகையால் புறம் தள்ளினார். இன்று ஸ்ரீராமர் கோயில் வந்த பிறகு ஜெயலலிதா அன்றே கூறினார் என்று அதிமுகவில் யாரும் கூறவில்லை, அவர்கள் நேர்த்தியில் விபூதியைக் கூட 2024 தேர்தலுக்காக அழித்துக்கொண்டு விட்டார்கள்.

தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு ஸ்ரீராமர் பற்றித் தெரியும், ஆனால் அயோத்தி பற்றி அதிகம் தெரியாது என்றே கூற வேண்டும். இங்கே இருப்பவர்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டிய தாஜ்மஹாலைப் பார்த்திருப்பார்கள், ஆனால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் ஸ்ரீராமர் காலடி பட்ட அயோத்திக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம். சென்றிருந்தால் அப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டார்கள்.

ஸ்ரீராமர் வடநாட்டுச் சாமி என்று திட்டமிட்டுப் பிரசாரம் செய்கிறார்கள். தமிழகத்தில் 1952ம் வருட மூன்றாம் வகுப்பு பாரத நாட்டுச் சரித்திரப் பாடப் புத்தகத்தின் முதல் பாடம் ‘இராமன்’. ஆனால் நானோ நீங்களோ படித்த காலத்தில் இராமன் எங்கும் இல்லை. ஸ்ரீராமரை பற்றிப் பள்ளியில் எங்கு படித்தேன் என்று யோசித்தேன். Ram killed Ravana. – Active Voice; Ravana was killed by Ram. – Passive Voice. நமக்குத் தெரிந்த ராமர் அவ்வளவே! எங்கோ யாரோ செய்த அரசியலால் ராமர் மறைந்துவிட்டார். அதை மீட்டெடுக்க மீண்டும் அரசியல் செய்வதில் என்ன தப்பு?

அயோத்தி பற்றியும் ராம ஜென்ம பூமி பற்றியும் தமிழ்நாட்டு மக்களுக்கும், ஏன் இந்தியாவிற்கும், அத்வானி போன்ற தலைவர்கள் முன்னின்று நடத்திய ‘ரத யாத்திரை’தான் வெளிச்சம் போட்டுக் காட்டியது. பாரதிய ஜனதா ராமரை அரசியலாக்கினார்கள் என்று எளிதாகச் சிலர் பழி சுமத்தலாம். ஆனால் ஒரு வரலாற்றை மீட்டெடுக்கும் பொருட்டு அதில் தப்பில்லை.

சங்கத் தமிழ் என்று போற்றப்படும் புறநானூறு (358) பாடல் ஒன்று தவத்தின் பெருமையைக் கூறுகிறது.தவத்தின் பெருமையைப் பாடிய புலவரின் பெயரை மட்டும் தெரிந்துகொள்ளலாம். அவருடைய பெயர் வான்மீகியார்.

இதை எழுதியவர் வால்மீகியா அல்லது வால்மீகி மீது இருந்த பற்றால் அந்தப் பெயரை வைத்துக்கொண்ட ஒருவரா என்று எல்லாம் ஆராய்ச்சிக்குள் போகாமல். நமக்குப் புலப்படும் வெளிப்படையான உண்மை – புறநானூறு காலத்தில், ஒரு பாடலைப் பாடியவர் பெயர் வான்மீகியார். இந்தப் பெயர் வடமொழியின் திரிபு என்பது நமக்குப் புலப்படுகிறது. வடமொழி தெரிந்தவர்கள் தமிழ்மொழியையும் நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள்.

ஸ்ரீராமாயணம் எழுதிய வால்மீகி அதன் ஆரம்ப ஸ்லோகத்தில் தன் குருவான நாரத பகவானைக் கூறுமிடத்தில் ‘தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக்விதாம் வரம்’ என்று தவத்தை முதன்மையாகச் சொல்லிச் சிறப்பிக்கிறார்.

ராமாயணம் எழுதிய வான்மீகி தமிழ் நன்றாகக் கற்ற காரணத்தால் தான் அவரால் ராமாயணத்தை எளிமையான ஸ்லோகங்களால் செய்ய முடிந்தது என்பது பெரியவர்கள் நிர்வாகம். வான்மீகி சென்னைக்கு வந்திருக்கிறார் என்பது சென்னைவாசிகள் எவ்வளவு பேருக்குத் தெரியும்? திரு வால்மீகி ஊர் என்பதுதான் திரு வான் மியூர் என்று இன்று மாறியிருக்கிறது.

திருவான்மியூரிலிருந்து வால்மீகி பல்லாவரம் சென்றுள்ளார். அங்கே திருநீர்மலையில் இருக்கும் பெருமாள் கோயிலில் பெருமாள் அவருக்கு ஸ்ரீராமராகக் காட்சி கொடுக்க அவரைச் சேவித்திருக்கிறார். ஸ்ரீராமரை குணவான் என்பார்கள். சீல குணத்துக்கு எடுத்துக்காட்டு ஸ்ரீராமர். சிலகுணத்தை நீரின் தன்மையுடன் ஒப்பிடுவார்கள். திருநீர்மலை பெருமாளுக்குப் பெயர் நீர்வண்ணன். இது மட்டுமல்ல, கர்ப்ப கிரஹத்தில் மூலவருடன் வால்மீகி முனிவரும் அங்கே இருக்கிறார். இந்த திவ்ய தேசத்தை சேவிக்க திருமங்கை ஆழ்வார் பல மாதங்கள் காத்துக்கொண்டு இருந்தார் என்பது இன்னொரு தகவல்.

ராமாயணத்தில் காவிரி பற்றிய குறிப்பு இருக்கிறது. அந்தக் காவிரிக் கரையில் இருக்கும் ஸ்ரீரங்கப் பெருமாள்தான் ஸ்ரீராமர் பூஜித்த பெருமாள் என்ற தகவல்கள் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாமல் மறைத்து மறக்கடிக்கப்பட்டது. மோடியின் ஸ்ரீரங்க விஜயத்தின் போது தான் அது வெளிச்சத்துக்கு வந்தது.

அயோத்தியா பற்றிய செய்திகள், படங்கள், புத்தகங்களைக் கூகிளில் பார்க்கலாம். ஆனால் நேரில் பார்க்கும்போது இங்கே ஸ்ரீராம ஸ்பரிசம் ஏற்படுவது நிச்சயம். எங்குத் திரும்பினாலும் ஸ்ரீராம பஜனைகள். கோயில்களில் தாடி வைத்த பெரியவர்கள் ஸ்ரீ ராமாயணத்தைச் சதா படித்துக்கொண்டே இருக்கிறார்கள். எங்குத் திரும்பினாலும் வானரக்கூட்டம். வீடுகள் இருக்கிறதா, இல்லை எல்லாம் கோயிலா என்று பிரமிப்பே ஏற்படுகிறது.

ஸ்ரீராமர் அருள் இல்லை என்றால் நமக்கு நம்மாழ்வாரே கிடைத்திருக்க மாட்டார்! மதுரகவிகள் அயோத்தியில் இருந்தபோதுதான் வானத்தில் ஓர் ஒளி தென்பட்டது. அதைத் தேடிக்கொண்டு சென்று திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரிக்கு வந்தடைந்து நம்மாழ்வாரைப் புளியமரத்துப் பொந்தில் பார்த்து அவருக்குச் சிஷ்யரானார். திருவாய்மொழி நமக்குக் கிடைத்தது. இது அயோத்தியின் பெருமை!

அயோத்தி முழுக்க குரங்குகளைப் பார்க்க முடிகிறது. அவைகளை யாரும் ஒரு சங்கடமாக நினைப்பதில்லை.

பாபர் மசூதிக்குள் இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்தரவை 1986ல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், 1991ல் தனது சுய சரிதையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

//“பூட்டியிருந்த கோயிலின் கதவைப் பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலிஸ் கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு அச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்துகொண்டு அதனை வணங்கினேன்.” //

இது மட்டும் அல்ல, உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீ பராசரன் ராமருக்காக காலில் செருப்பு இல்லாமல் 92 வயதிலும் நின்று கொண்டு வாதாடியது உங்களுக்கு எல்லாம் தெரியும். “பரா: – என்றால் எதிரிகள் என்று பொருள், சர: என்றால் அம்புகள். ஸ்வாமி தேசிகன் ‘பராசரா’ என்றால் எதிரிகளைத் தன் வாதங்களின் அம்பு மழையால் தோற்கடிக்கும் வீரர் என்கிறார்.

ஒரு முறை ஒரு பெரியவரிடம் வழக்கறிஞராக இருக்கிறேன் வழக்குகளில் வாதாடுகிறேன். நான் யாரை வணங்க வேண்டும் என்று கேட்க அதற்கு அந்தப் பெரியவர் அனுமார் என்று பதில் கூற அன்றிலிருந்து அவருடைய கோட் பாக்கெட்டில் சின்ன சந்தன சிற்ப அனுமாரும், பார்த்த சாரதி படமும் நிரந்தரமாயின.

திரு பராசரனுக்கு அந்த அனுமாரே வந்து சில இடங்களில் வாதாடினாரோ என்று கூடத் தோன்றுகிறது. ஒரு வழக்கில் இவர் சரியாக வாதாடவில்லை. பராசரனுக்கு என்ன ஆயிற்று என்று பலர் குழம்பினார்கள். அப்போது பராசரன் தன் கோட்டு பாக்கெட்டில் கையை விட்டுப் பார்த்த போது அங்கே அந்தச் சந்தன அனுமாரைக் காணவில்லை. உடனே தன் ஜூனியரை அழைத்து தன் அறையிலிருந்து அந்த அனுமாரை எடுத்து வரச் சொன்னார். அதற்கு பிறகு அவர் செய்த வாதங்களைப் பார்த்து நீதிமன்றம் பிரமித்துப் போனது.

ஸ்ரீராம ஜன்ம பூமி வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது “தாய், தாய்நாடு சொர்கத்தை விடப் பெரியது” என்று வாதத்தைத் தொடங்கினார் இந்த 92 வயது வழக்கறிஞர். தீர்ப்பு வந்த அன்று இரவு அவர் தங்கியிருந்த கட்டிடத்து மொட்டை மாடியில் சுமார் 30-40 குரங்குகள் வந்தது. எல்லாக் குரங்குகளும் சீதையை அசோகவனத்தில் அனுமார் கண்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டுப் பல சேஷ்டைகளைச் செய்தது போல அன்று மொட்டை மாடியில் குரங்குகள் செய்தது. அருகில் இருந்த மரக் கிளைகளை உடைத்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது.

”வாழ்கையில் ராமாயணம் படித்து முன்னுக்கு வந்திருக்கிறேன் “This is the least I owe to Lord Rama” என்று நீதிமன்றத்தில் பிரகடனப்படுத்தினார் திரு பராசரன்.

ஸ்ரீராமர் பிரதிஷ்டையான அன்று ஒரு குரங்கு ஒன்று வந்தது என்ற செய்தியைப் படித்திருப்பீர்கள். இன்னொரு குரங்கு கதை இருக்கிறது.

ராமஜென்ம பூமி வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் ஜகத்குரு ராமானந்தாச்சார்யா. இவரைப் பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகம் தெரியாது. ராமபத்ராச்சார்யா 22 மொழிகளைப் பேசக்கூடியவர். பல மொழி கவிஞர்.100 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்; நான்கு காவிய கவிதைகள்; துளசிதாஸின் ராம்சரித்மனாஸ் மற்றும் ஹனுமான் சாலிசாவுக்கு இந்தி, சமஸ்கிருத வர்ணனைகள் இந்தியாவில் துளசிதாஸின் மிகப் பெரிய அதிகாரிகளில் ஒருவர். இவருக்குக் கண் தெரியாது!

சிறுவயதில் கிராமத்தில் நடந்த ஒரு வித்தைக்காரரின் குரங்கு நடன நிகழ்ச்சியில் வேடிக்கை பார்த்த குழந்தைகளைக் குரங்கு தொடத் தொடங்கியபோது, பயத்தில் குழந்தைகள் திடீரென்று ஓடத்தொடங்கினார்கள். ராமானந்தாச்சார்யாவும் ஓடிய போடு ஒரு சிறிய வறண்ட கிணற்றில் விழுந்து சிக்கிக்கொண்டார், ஒரு பதின்ம வயது பெண் அவரை காப்பாற்றினார்.அவர் அன்று தப்பிப் பிழைத்ததற்குக் காரணம் அன்று காலை அவர் தாத்தா ராம்சரித்மனாஸில் ஒரு வரியைக் கற்றுக்கொண்டது தான் காரணம் என்றார்.

துளசி தாசரின் அந்த வாக்கியத்தின் பொருள்

இந்த ராமரை பாடுபவர்கள், ஹரியின் பாதத்தை அடைகிறார்கள், அவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு கிணற்றில் ஒருபோதும் விழ மாட்டார்கள்.

அதற்குப் பிறகு ராமபத்ராச்சார்யா தினமும் துளசிதாசரின் அந்த வரியை எப்போதும் சொல்ல ஆரம்பித்தார்.

“கற்பார் இராம-பிரானை அல்லால், மற்றும் கற்பரோ?” என்ற வாக்கியத்தின் முழு உருவம் ராமானந்தாச்சார்யா!

ராமானந்தாச்சார்யா ராம ஜன்ம பூமி வழக்கில் முக்கிய சாட்சி ஒன்றை அளித்தார் என்பது பலருக்குத் தெரியாது. அதைப் பற்றிக் கூறும் முன் ஸ்ரீரங்கத்தில் முகமதியர் படையெடுப்பின்போது பல ஆயிரம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

உலூக்கானை என்ற முகமதுபின் துக்ளக் 1321ல் தென் இந்தியாவின் மீது படையெடுக்க விரும்பினான். அவனுடைய முக்கிய குறிக்கோள் தங்க வைரங்களின் கருவூலமாகத் திகழும் கோயில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே. டில்லியிலிருந்து பல போர்வீரர்களுடனும், 60,000 குதிரைப்படையுடன் புறப்பட்டான்.

அதே சமயம் ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளைக் காக்க ஒரு குழு பிள்ளைலோகாச்சாரியாருடன் செல்ல ஸ்வாமி தேசிகனின் தலைமையில் பெரிய பெருமாளுக்கு முன் சுவர் எழுப்பி, தாயாரை வில்வ மரத்துக்கு அடியில் ஏளச்செய்து, உலூக்கானால் 12000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொல்லப்பட்டு அந்த இடமே போர்க்களமாக இருக்க,

பிணக்குவியல்களுக்கு நடுவே பிணமாகக் கிடந்து, . உலூக்கான் படை அந்த இடத்தை விட்டு அகன்ற பின்னர் சத்தியமங்கலம் வழியாக மேல்கோட்டை வந்தடைந்தார் வேதாந்த தேசிகர். கூடவே கையில் ‘ஸ்ருத பிரகாசிகை’ ஓலைச்சுவடியையும், பட்டரின் இரண்டு குழந்தைகளும் காப்பாற்றினார்.

இதைக் குறித்து எழுத்தாளர் சுஜாதா விகடனில்(2005)

//”…. நாட்டுப்புறப் பாடல்கள் கல்வெட்டுகள் போல! முக்கியமான பஞ்சம், வெள்ளம், இயற்கையின் சீற்றங்கள், படையெடுப்புகள் எல்லாம் நாட்டுப்புறப் பாடல்களில் ஏதேனும் வரியில் பிரதிபலிக்கும்.

யாராவது கோவிந்தா கூட்டத்தின் பாடல்களை உன்னிப்பாகப் படியெடுத் தால், கி.பி. 1323-ல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம். அல்லது வெள்ளைக் கோபுரத்தில் ஏறி இரண்டு ஜீயர்களும், அழகியமணவாள தாசர் என்பவரும் தற்கொலை செய்து கொண்ட செய்திகூட ஒளிந்திருக்கலாம்.

//

என்று எழுதிய போது “இனியாவது திரு. சுஜாதா இது போன்ற ஆதாரமற்ற தகவல்களை முன்னிலைப்படுத்தாமல் இருப்பது நல்லது என்று எதிர்ப்பும் எச்சரிக்கையும் விடுத்தனர்.

நாட்டுப்புறப் பாடல்களைத் தேடிப் போக வேண்டாம். ஸ்வாமி தேசிகன் எழுதிய அபீதிஸ்தவத்தைப் படித்தாலே போதும்! சாரத்தை இங்கே கொடுக்கிறேன்.

”திருவரங்கனே! நீ முன்பு இராமாவதாரத்தில் சரணடைந்தவனுக்கு அபயம் அளித்தாய். அது உனது விருதம். உன் கருணைக்குப் பாத்திரமாயுள்ள அடியேனையும் நீ காத்தருள வேண்டும். நான் அகப்பட்டு இருக்கிறேன். உன்னை அனுபவிப்பதற்குத் தடை வருவதைக் கண்டு அஞ்சுகிறேன். திருவரங்கத்தில் உன்னை அன்றி வேறொன்றையும் நாடாத பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு உன்னை அனுபவிப்பதற்கு இப்போது தடையும் அச்சமும் உண்டாகியுள்ளது. ஸ்ரீரங்க நாதா! கலி புருஷனுக்கு ஏவலாட்கள் போன்று துருக்கர்கள், யவநர்கள் முதலானோர் மூலமாக இந்த உலகத்தில் மிகுதியான பயம் வளர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட பயத்தை உன்னிடம் இருக்கும் மிகுந்த சக்தியுடையதும் அந்தணர்களைக் காப்பதற்கும் பயன்படும் உன் ஐந்து திரு ஆயுதங்களால் நொடிப்பொழுதில் பலமாக அழிப்பாயாக. அந்தணர்களுக்குத் தீங்கு விளையாமல் காக்க வேண்டும்.

இங்கு உள்ள எதிரிகளோ அசுரர்களைக் காட்டிலும் மிக்க கொடுமை விளைவிப்பவர்களாயுள்ளார்கள். அவர்களால் பலர் பூஜித்த ஸ்ரீரங்க ரங்க விமானத்துக்கு ஏதாவது பெருந்தீங்கு விளையுமோ என்ற அச்சம் உண்டாகின்றது. எனக்கு தலை முழுவதும் நரைத்துவிட்டது. எங்காவது திருவரங்கத்திலோ அல்லது வேறு எங்காவது உன்னை அனுபவித்து வாழ அருள் புரிய வேண்டும்” என்று புலம்புகிறார் ஸ்வாமி தேசிகன்.

2003ல் அலகாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்ற ராமர் கோயில் வழக்கின் குறுக்கு விசாரணையின் போது ராமானந்தாச்சார்யா துளசிதாசரின் ‘தோஹ சட்டகம்’ என்ற 8 ஸ்லோகங்களை மேற்கோள் காட்டினார். இது ஸ்வாமி தேசிகனின் அபீதிஸ்தவம் போல நமக்கு ஒரு பெரிய வரலாற்று ஆவணம்.

தோஹ சட்டகத்தில் துளசிதாசர் கூறிய சாரம் இது தான்

அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜனனமான இடத்தை முஸ்லீம்களும் பாபரும் எப்படி அழித்து, அதற்குப் பதிலாக ஒரு மசூதியைக் கட்டினார்கள் என்பதை துளசிதாசர் தெளிவாக விவரித்துள்ளார்.

யவநர்கள் எப்படி ஹிந்து நூல்கள், உபநிடதங்கள் மற்றும் பிற நூல்களைக் கேலி செய்தார்கள் மற்றும் அவமதித்தார்கள், இந்துக்களின் மத அடையாளங்களான குடுமி, பூணூலை எப்படி அகற்றினர். இந்துக்கள் தங்கள் நம்பிக்கையைக் கைவிடுமாறு பார்ப்பனர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர் என்று விவரித்துள்ளார்.

மேலும் பாபர் 1528 ஆம் ஆண்டு அயோத்தியில் இந்துக்களின் இனப்படுகொலைக்கு வழிவகுத்த கொடூரமான பிரச்சாரத்தை எவ்வாறு வழிநடத்தினார்; பாபரின் கூட்டாளியாக இருந்த மிர் பாக்கி ஸ்ரீ ராம் ஜனம் செய்த பூமியில் இருந்த கோவிலை இரக்கமின்றி அழித்ததையும், அதை மசூதியாக மாற்றியதையும் பற்றி பகவான் ராமின் மரியாதைக்குரிய கோவிலை மாற்றியதைக் கண்டு அவர் எவ்வளவு மனம் உடைந்தார் என்று விவரித்துள்ளார். ஒரு காலத்தில் இந்து சமயச் சொற்பொழிவுகள் மற்றும் கோவில் மணிகளின் ஓசையுடன் எதிரொலித்த இடம் குர்ஆன் ஓதுதல்களுடன் எப்படி எதிரொலித்தது என்று விவரித்துள்ளார்.

ஸ்வாமி தேசிகன், துளசிதாசர் இருவரும் ‘யவநர்கள்’ என்ற பதத்தை உபயோகித்துள்ளார்கள். இச் சொல் முகலாயர்கள் அல்லது காட்டுமிராண்டிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.

பிள்ளை லோகாசாரியார், ஸ்வாமி தேசிகனின் போன்றோரின் திடபக்தியும் தியகங்களும், தேசிகன் நம்பிக்கையுடன் எழுதிய அபீதிஸ்தவம் ஸ்லோகங்களால் எதிரிகள் அழிந்து கோபணார்யர் உதவியுடன் 48 ஆண்டுகள் கழித்து 1371ல் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.

அதே போல் கடந்த ஐந்நூறு ஆண்டுகளால் ஸ்ரீராம ஜன்ம பூமியை மீட்கும் போராட்டத்தில் ராம பக்தர்களின் தியாகங்களும், துளசிதாசர் மனம் வெம்பி எழுதிய ‘தோஹ சட்டகம்’ போன்றவற்றால் அன்று கோபணார் போல இன்று மோடி ஸ்ரீராமரை பிரதிஷ்டை செய்தார்.

14 ஆண்டுகள் வனவாசம் முடித்து அயோத்திக்கு திரும்பிய ஸ்ரீராமரையும் சீதையையும் கண்டு உள்ளம் பூரித்த நாட்டு மக்கள் போல் 500 ஆண்டுகள் கழித்து ’ஸ்ரீராம லல்லா’ மீண்டும் தன் இருப்பிடத்துக்கு வந்த அந்த நிகழ்வை பார்க்கும் போது அந்த இடம் அயோத்தியாகி, ஆனந்த கண்ணீருடன் பரவசப்பட்டார்கள்.

இன்று ராமானந்தாச்சார்யா போன்ற மகான்களைக் கண்டுகொள்ளாமல் நம் சமூகம் ‘பாபர் நாமா’ என்ற இந்தக் காட்டுமிராண்டியின் நாட்குறிப்பைப் பெரிய பொக்கிஷம் போல மொழிபெயர்த்துப் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்! ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றால் அவன் ‘இதுத்துவ வெறியன்’ என்றும், தமிழகத்தில் ’ஜெய் ஹிந்து’ என்றால் தமிழ் துரோகி என்பது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவிட்டார்கள்.

ஸ்ரீராமர் பிரதிஷ்டையின் போது 500 ஆண்டுகள் நமக்கு மறைமுகமாக கட்டப்பட்டிருந்த இந்த சங்கலிகள் அறுக்கப்பட்டு எல்லோரும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்கி நாம் பாரதத்தில் அன்று இருந்தோம் என்பதே பெருமைபட வேண்டிய விஷயமானது.

நம்மாழ்வார் “நல்-பால் அயோத்தியில் வாழும் சராசரம்” என்கிறார். ‘நற்பால் அயோத்தி’ என்றால் ‘அயோத்தி மண்ணை மிதித்தாலே இராமப் பக்தி தானாக உண்டாகும்’. அதாவது ராமகுணங்கள் நடனமாடுகிற அயோத்தி என்று பொருள். அதனால் ஒரு வருடத்துக்கு முன் அயோத்திக்கு மீண்டும் சென்ற போது நல்ல மழை. ஸ்ரீராமர் காலடிப் பட்ட இடம் என்று அயோத்தியில் மழையிலும் காலில் செருப்பு இல்லாமலே எல்லா இடங்களுக்கும் சென்று வந்தேன்.

‘ஸ்ரீராமாயணம் என்ற ஜீவநதி, வால்மீகி என்ற மலையில் தோன்றியது. ஸ்ரீராமன் என்ற பெருங்கடலை நோக்கிப் பாய்கிறது. புண்ணியமான அந்த நதி, இந்த மண்ணுலகைப் புனிதமடையச் செய்யட்டும்’ என்பது ராமாயணத் தினசரிப் பிரார்த்தனை ஸ்லோகம்.

ஸ்ரீராமாயணம், பாரத நாட்டைப் புனிதப்படுத்தட்டும் என்ற குறுகிய பிரார்த்தனை இல்லை, இந்தப் பூமண்டலத்தையே புனிதமாக்கட்டும் என்கிறது.

நம் எல்லோர் இல்லத்திலும் பூஜை அறை இருக்கிறது. நாம் வசிக்கும் தெருவில் ஒரு கோயில் இருக்கிறது. ஊருக்கு என்று ஓர் ஆலயம் இருக்கிறது. நம் தேசத்துக்குத் திருப்பதி, ஸ்ரீரங்கம், மதுரா, அயோத்தியா, புரி, பத்ரி போன்ற முக்கியமான வழிபடும் ஸ்தலங்கள் இருக்கின்றன. உலகிற்குப் பாரதமே கோயிலாக இருக்கிறது. இன்று அதன் எபிசென்டர் (மையப்பகுதி) அயோத்தியா என்றால் அது மிகையாகாது.

தொண்டரடிப் பொடி ஆழ்வார் ”அயோத்தி எம் அரசே! அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே” என்று பாடினார். ஐந்நூறு வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீராமர் எழுந்து வந்துள்ளார்.

ராமருக்கு இன்னொரு பெயர் சத்தியசீலன். சத்தியம் என்றால் உண்மை என்ற பொருள் மட்டும் இல்லை, இன்னொரு பொருள், என்றும் நிலைத்து இருப்பது என்பது!

ஜெய் ஸ்ரீராம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe