மவுண்ட்பேட்டன் இரத்த ஆறு ஓடாது என்று கூறி விட்டார், ஆனாலும் எங்கு பார்த்தாலும் வன்முறை வெறியாட்டம் இரத்தக் களறி!
காந்தியால் ‘ அகிம்ஸை ‘ சோறூட்டி வளர்க்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் இந்தப் புதிய நிலையைக் கண்டு திகைத்துப் போய் விட்டனர்.
ராணுவ அனுபவம் மிக்க மவுண்ட்பேட்டன், சுதந்திர பாரதத்தின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்று, நிர்வாக அனுபவம் இல்லாத தங்களுக்கு, கடினமான இந்த சூழ்நிலையில் வழிகாட்ட வேண்டுமெனக் காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஆங்கில அரசின் வைஸ்ராயிற்கு எத்தகைய அதிகாரங்கள் இருந்தனவோ அத்தகைய அதிகாரங்களை பெற்று மவுண்ட்பேட்டன் வலம் வந்தார்.
அதே சமயம், ஜின்னா ‘’ உங்கள் வேலை முடிந்து விட்டது நீங்கள் போகலாம்’’ என்று மவுண்ட்பேட்டனை கழித்துக் கட்டி விட்டு, அவரே பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தெற்கு ஆசியாவில் கூட்டுப் படைகளின் தளபதியாக பணியாற்றிய காலந்தொட்டு தன்னுடைய பத்திரிகை தொடர்பாளராக இருந்த, தன்னுடைய நண்பரும், மிகுந்த நம்பிக்கைக்குரியவருமான ஆலன் –கேம்பல் ஜான்சனை, மவுண்ட்பேட்டன் உடன் வைத்துக் கொண்டார்.
எவ்வளவு வேகமாக, பெட்டி, படுக்கையை மூட்டைக் கட்டிக் கொண்டு நாட்டை விட்டு புறப்பட முடியுமோ, அதற்கான முனைப்பிலே, ஆயத்தத்திலேயே மவுண்பேட்டனின் கவனம் இருந்தது.
உலகத்திலேயே, சீனாவிற்கு அடுத்த படியாக ஜனத்தொகையை பெற்றிருந்த பாரதத்தை திட்டப்படி பிளந்தாகி விட்டது. பிரிவினை எழுப்பிய விளைவுகளை, புதிதாக பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசுதான் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த தலைவலி தனக்குத் தேவையில்லை எனும் எண்ணமே மவுண்ட்பேட்டன் மனதில் இருந்தது.
அதுவே பிரிட்டிஷ் அரசும் அவருக்கு இட்ட கட்டளை. காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தல் காரணமாக சிறிது காலம் இருக்க வேண்டியது ஆகி விட்டது.
ஹிந்து முஸ்லீம் கலவரங்களை அடக்கி விட்டு கிளம்பி விடலாம் என திட்டமிட்டார். அதைச் செய்யா விட்டால் உலக அரங்கிலே, ஒரு சிக்கலான சூழ்நிலையில் பிரிட்டிஷ் அரசு நிர்கதியாக விட்டு விட்டு வெளியேறியது எனும் அவப்பெயரை தவிர்க்க விரும்பினார்.
பலம் வாய்ந்த ராணுவமும், விமானப்படையும் இருக்கிறது, ஆகவே பரவி வரும் கலவரங்களை சட்டென அடக்கி விடலாமென தப்புக் கணக்கு போட்டு விட்டார்.
’’ நான் மிகவும் கடுமையான முறையில் செயல்படுவேன். பீரங்கிகளையும் விமானங்களையும் பயன்படுத்தி, கலவரங்களை ஓடுக்குவேன் ‘’ என மிரட்டிப் பார்த்தார். ஆனால் அவர் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கத் தவறி விட்டார்.
நாடு மத அடிப்படையில் பிளக்கப்பட்டதால் ராணுவமும் பிளந்து கிடந்தது. ராணுவத்திலிருந்த முஸ்லீம் படைகள் பாகிஸ்தான் பக்கம் சென்றன. ஹிந்து, சீக்கியர்கள் பாரதம் பக்கம் அணிவகுத்து நின்றனர். ஒரு சில முஸ்லீம் அதிகாரி களைத் தவிர ஏனைய முஸ்லீம் அதிகாரிகள் பாகிஸ்தான் பக்கம் தாவினர்.
கடற்படையும், விமானப்படையும் இவ்வாறே பிளந்து நின்றன. ஹிந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் ஏனைய ஹிந்துக்கள் மீது பாகிஸ்தானின் முஸ்லீம் ராணுவப் படையினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.
இந்த வன்முறை தாக்குதல்கள் தினசரி நிகழ்வாகி விட்டது. பாரத ராணுவத்தினர் கொதித்து போயிருந்தனர். எந்த நேரமும், முஸ்லீம்கள் மீது பதில் தாக்குதலில் ஈடுபடத் துடித்துக் கொண்டிருந்தனர்.
இங்கிருக்கும் முஸ்லீம்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க மவுண்ட் பேட்டன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காந்தி, நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பாரதத்தின் ராணுவத்தை பயன்படுத்த மவுண்ட்பேட்டன் தயங்கினார்.
ஏனென்றால் தங்கள் ஹிந்து சகோதர சகோதரிகளுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கண்டு வெகுண்டிருந்த நம் நாட்டின் ராணுவத்தினர், வேறு விதமாக நடந்து கொள்வார்களோ என மவுண்ட்பேட்டன் அஞ்சினார்.
இந்தக் களேபரம் நடந்து கொண்டிருந்த நிலையில், சுதந்திர அரசு பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள், பாகிஸ்தானுடனான முதல் ராணுவ ரீதியான மோதல் துவங்கியது. காஷ்மீர் தங்கள் நாட்டிற்கு வர வேண்டிய பகுதி, ஆகவே அதைப் பெற்றே ஆக வேண்டுமென பாகிஸ்தான் துடித்தது.
போரிட்டாவது எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள முடிவுச் செய்தது.
விளைவு… காஷ்மீரைக் கைப்பற்ற பாகிஸ்தானிய முஸ்லீம் படைகள் வேகமாக முன்னேறி வந்தன.
பாகிஸ்தான் என்றால் அவர்கள் எண்ணப்படி ,
P – PUNJAB
A – AFGHANA ( NORTH WEST FRONTIER REGION )
K – KASHMIR
I – INDUS ( SOME SAY IT’S ISLAM )
S – SIND
TAN – THE TAN IS SAID TO REPRESENT BALUCHISTAN
ஆகவே ஜின்னாவும்,முஸ்லீம் லீகும் தங்களுக்கு என்ன தேவை என்பதில் தெளிவாகவே இருந்தனர். காங்கிரஸ் தலைவர்கள் காஷ்மீர் விஷயத்திலும் சொதப்பினர்.
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்




