’ முதல் சுதந்திரப் போர் 1857 ‘ கையெழுத்து பிரதியின் நகல் ஒன்று,ரகசியமாக பாரதத்திற்கு வந்து சேர்ந்தது. அதனை,மகாராஷ்ட்ரா மாநிலம் சோலாப்பூர் நகரில்,யாரும் அறியா வண்ணம் அச்சிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இப்படி ஒரு முயற்சி நடப்பதைப் பற்றி அறிந்த போலீஸார்,தீவிரத் தேடுதலில் ஈடுபட்டனர்.
காவல்துறையிலிருந்த ஒரு நண்பர்,அச்சக உரிமையாளரிடம்,அவருடைய அச்சகத்தை சோதனையிட எப்போது வேண்டுமானாலும் போலீஸ் வரக் கூடும் எனும் தகவலை தெரிவித்து எச்சரித்தார். உடனடியாக அந்த கையெழுத்து பிரதியின் நகல்,
பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பூனாவிலிருந்த சாவர்க்கரின் நண்பர்களிடம் பாதுகாப்பாக வைத்திருக்க அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பிறகு,அந்த புத்தகத்தை அச்சிட வேறு பதிப்பகம் கிடைக்காமல் போயிற்று. இதற்கிடையே,இங்கிலாந்தில்,அந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணியிலே தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார் சாவர்க்கர்.
அதன் ஆங்கில பதிப்பு ஹாலந்து நாட்டில் அச்சிடப்பட்டு வெளியானது.
‘ FREE INDIA SOCIETY ‘ ன் ஆதரவாளர்கள், பாரதத்தில் அவற்றை இலவசமாக விநியோகிக்கும் பொருட்டு,நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாங்கினர்.
CHARLES DICKENS,SIR WALTER SCOTT போன்ற பிரபல ஆங்கில எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களின் பெயர்களை தாங்கிய அட்டைகளோடு அவை பாரதத்திற்கு வந்து சேர்ந்தன. அமெரிக்காவிலிருந்த, ’ இந்த உன்னத நோக்கத்தின் ஆதரவாளர்கள் ‘,அவர்கள் பங்கிற்கு,அங்கே அவர்களும் நூலை பதிப்பிட்டு,பாரதத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
பல புத்தகப் பிரதிகள் போலீசார் வசம் பிடிப்பட்டது; விளைவு…
ஆங்கிலேயப் பெண்ணிடம் காதல் வயப்பட்டு போயிருந்தாலும்,ஆங்கிலேயர்களுக்கு எதிரான சாவர்க்கரின் போராட்டம் முனை மழுங்கிப் போய் விடவில்லை…
அவர் அபாய கரமானவர், அபாய கரமானவர்தான் என்று முடிவுச் செய்து ,ஆங்கிலேய அரசு அவர் பாரதத்திற்கு திரும்புவதற்கு தடை விதித்தது.
1909ல்,’ FREE INDIA SOCIETY ‘ ன் தீவிர உறுப்பினரும்,சாவர்க்கரின் நெருங்கிய நண்பருமான மதன்லால் திங்ரா சர் கர்ஸன் வைலி என்பவரை லண்டனில் சுட்டுக் கொன்றார்.
குதிராம் போஸ் மற்றும் வங்காளத்தை சேர்ந்த வேறு பல புரட்சியாளர்களின் வழக்குகளில்,அவர்களுக்கு எதிராக,அரசு வழக்கறிஞராக இருந்து,அவர்களுக்கு தூக்கு உள்ளிட்ட கடும் தண்டனைகளை பெற்று தந்தவர் சர் கர்ஸன் வைலி.
வைலியை சுட்ட பின் திங்ரா தப்பிக்க முயற்சி செய்யவில்லை. அவரின் பாக்கெட்டிலிருந்த ஒரு அறிக்கையை போலீசார் கைப்பற்றினர்.
அதில்… ’ தாய்நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டதை தவிர வேறு எந்த குற்றமும் செய்யாத எம் தேசத்து இளைஞர்களுக்கு ஈவிரக்கமற்ற தண்டனைகளை வழங்கிய ஆங்கிலேய அதிகாரிகளை பழிவாங்கவே கர்ஸன் வைலியை கொன்றேன் ‘ என்றிருந்தது.
ஆங்கிலேயர்களைப் போலவே நடை,உடை,பாவனைகளை மாற்றிக் கொண்டு அவர்களைப் போலவே வாழ வேண்டும் என்ற கனவுகளோடு இங்கிலாந்து சென்ற ஒரு இளைஞன்,சாவர்க்கரின் சமீபத்தின் காரணமாக ,சுதந்திரப் போராளி ஆகிப் போனான்.
தன் இன்னுயிரை தேசத்தின் விடுதலைக்காக அர்ப்பணிக்கவும் சித்தமானான். திங்ரா,சாவர்க்கருக்கு மிக நெருங்கிய நண்பர் என்பதால்,சாவர்க்கருக்கும் கர்ஸன் வைலியின் கொலை சதியிலே பங்கிருக்கும் என லண்டன் போலீஸ் உறுதியாக நம்பியது.
அவர்கள் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக,சாவர்க்கரும்,சிறையில் அடைக்கப்பட்டிருந்த திங்ராவை சந்திக்க போலீசாரிடம் அனுமதி கோரினார்.
திங்ராவின் வழக்கிற்காக நிதி திரட்டினார்,கர்ஸன் வைலியின் கொலையை கண்டித்து,இங்கிலாந்து வாழ் பிற இந்தியர்கள் அறிக்கை வெளியிட்ட போது அதைக் கடுமையாக எதிர்த்தார்.
ஸ்காட்லந்து யார்ட் சாவர்க்கரை உன்னிப்பாக கண்காணிக்கத் தொடங்கியது. அவருடைய இயக்கத்தை வேரோடு அழிக்க முயற்சிகளை மேற்கொண்டது.
( தொடரும் )
- எழுத்து: யா.சு.கண்ணன்




