காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 95): வாக்குமூலத்துக்கு மேற்கொண்ட பயிற்சி!

Published:

digambar ramachandra badge - 2026

நாதுராம் கோட்ஸேவுக்கு துப்பறியும் நாவல்களை படிப்பதில் ஆர்வம் அதிகம். அவருக்கு பிடித்த எழுத்தாளர் ERLE STANLEY GARDNER.ஆப்தேயிற்கு AGATHA CHRISTIE பிடித்தமானவர். ஆனால் புனைவு ( FICTION ) குற்ற கதைகளுடன் அவர்களுக்கு இருந்த பரிச்சயம் நிஜ வாழ்க்கையில் கிரிமினல்கள் எப்படியெல்லாம் நடந்துக் கொள்வார்கள் என்பதை ஏனோ அவர்களுக்குக் கற்றுத் தரவில்லை.

கடைசி வரையிலும் அவர்கள் கற்றுக்குட்டிகளாகவே இருந்தார்கள்.அவர்கள் செய்த அனைத்து காரியங்களிலும் தகுதியற்றவர்களாகவே அவர்களை காட்டிக் கொண்டார்கள். கூட்டாளிகளுக்கு கொடுத்த பண விவரத்தையெல்லாம் கூட கவனத்துடன் கணக்கு புத்தகத்தில் குறித்து வைத்திருந்தார் நாதுராம் கோட்ஸே.

தாங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் கடந்து செல்லும் தடங்களை கவனமாக மறைக்க முயற்சி செய்யாது,தடயங்களை விட்டுச் சென்ற வண்ணம் இருந்தனர்…

ஒரு நண்பரிடம் இது பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் கூறினார் : ’’ அவர்கள் கிரிமினல்கள் அல்லவே. இந்த தேசத்திற்கு எதிராக, ஹிந்துக்களுக்கு எதிராக நடந்த செயல்களுக்கு சரியான பாடமாக ஒரு எதிர்வினையை ஆற்ற வேண்டும் எனும் எண்ணம் மட்டுமே கொண்டவர்கள். ஆகவே அவர்களிடம் கிரிமினல்களின் நேர்த்தியை எதிர்பார்ப்பது தவறு ‘’ என்றார்.

அவருடைய வாதம் சரியாகவே தோன்றியது… தொடருக்குள் மீண்டும் வருவோம்…

பிஸ்டலுக்கு பதிலாக பாட்கே ரிவால்வரை பெற்று வந்ததில் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அன்றைய காலை பொழுதை,தங்கள் இலக்குக்கான,தேவைகளுக்கான பணத்தை திரட்டுவதில் கழித்தனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

இதற்காக ஒரு டாக்ஸியை வாடகைக்கு அமர்த்தி,பம்பாய் முழுவதும் தங்கள் கையிலிருந்த ’ ஹிந்து நலனில் அக்கறைக் கொண்டு’ அது சம்பந்தப்பட்ட காரணங்களுக்கு பணம் கொடுப்பவர்கள் பட்டியலுடன் அவர்களை சந்திக்கச் சென்றனர்.

இடையே திக்ஷித் மஹராஜை சந்தித்து, ஒரு பிஸ்டலை அவரிடமிருந்து பெற மீண்டும் முயற்சித்தனர். அவர் கொடுக்க மறுத்து விட்டார். ஒரு முறை ஹிந்து மஹா சபா அலுவலகத்திற்கு சென்று சங்கர் கிஷ்டய்யாவிற்கு அவர் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து அறிவுறுத்தல்கள் கொடுத்தனர்.

அதன் பிறகு கோட்டை பகுதியிலிருந்த SEA GREEN HOTEL( SOUTH ) சென்று அங்கு இன்னும் அழுதுக் கொண்டிருந்த மனோரமா சால்வியை தேற்றி அழைத்துக் கொண்டு போய் அவரது இல்லத்திற்கு அருகே விட்டனர்.

அதன் பிறகு… பின்னாளில் அப்ரூவராக மாறி பாட்கே அளித்த வாக்குமூலத்தின்படி (அதை நாம் நம்பும் பட்சத்தில்),தாதருக்கு சென்று சங்கர் கிஷ்டய்யாவை ஹிந்து மஹா சபா அலுவலகத்திலிருந்து அழைத்துக் கொண்டு, சாவர்க்கர் இல்லத்திற்கு சென்று அந்த பெரியவரிடம் ஆசிகளைப் பெற்றனர்.

அப்ரூவராக மாறிய பின்.. பாட்கே…. அந்நாட்களில் தான் கண்டதையும், கேட்டதையும், ஞாபகம் பிசகாமல் சிறு விவரத்தையும் விடாமல் விவரித்த விதமே சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

சாட்சியாக அவர் கோர்ட்டில் தங்கு தடையின்றி பேசிய விதம், வசனத்தை மறக்காமல் வார்த்தைக்கு இடறாமல் ஒப்புவித்த நன்கு கற்றுத் தேர்ந்த நடிகரைப் போல் இருந்தது.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

அவர் கூறியதுபடி.. ‘’ நாங்கள் டாக்ஸியிலிருந்து இறங்கி சாவர்க்கர் வீட்டிற்கு நடந்துச் சென்றோம். சங்கர் கிஷ்டய்யாவை காம்பவுண்டிற்கு வெளியில் காத்திருக்கும்படி சொன்னார்கள். ஆப்தே, நாதுராம், நான் ஆகிய மூவர் மட்டும் வீட்டின் உள்ளே சென்றோம். ஆப்தே என்னை தரை தளத்தில் இருந்த ஒரு அறையில் காத்திருக்கும்படி சொன்னார்.

நாதுராமும், ஆப்தேயும் மாடிக்குச் சென்றார்கள்.5 அல்லது 10 நிமிடங்கள் கழித்து அவர்கள் கீழே இறங்கி வந்தார்கள். அவர்களை தொடர்ந்து டட்யாராவ் ( சாவர்க்கர் ) இறங்கி வந்தார்.அவர் ஆப்தேயிடமும்,நாதுராமிடமும் ‘’ YESHHASWI HOUN HAI ‘’ என்று கூறினார். அப்படியென்றால் ‘’ வெற்றியுடன் திரும்பி வாருங்கள் ‘’ என்று பொருள்.

நாதுராமும்,ஆப்தேயும் தாங்கள் மேற்கொள்ள இருந்த பணிக்கு முன் சாவர்க்கரை சந்தித்திருந்தால் அது இயற்கை. ஏனென்றால்,அன்றைய காங்கிரஸ்காரர்கள் எப்படி காந்தியை வணங்கத்தக்கவராகக் கருதினார்களோ அது போல சாவர்க்கர், நாதுராமிற்கும், கோட்ஸேயிற்கும்…

அவருடைய தரிசனம், தாங்கள் நடத்த இருந்த காரியத்திற்கு,ஒரு மங்களகரமான தொடக்கமாக கருதியிருக்கலாம். ஆனால் அதிலிருந்து…. உண்மையிலேயே பாட்கே கூறியப்படி ….. அப்படியொரு சந்திப்பு நடந்திருந்தால்… சாவர்க்கர் காந்தியை கொல்லும்படி அந்த இருவருக்கும் ஆணையிட்டார் என்றோ அதற்கு தனது ஆசிகளை வழங்கினார் என்றோ கூறுவது சரியாக இருக்காது.

ஏனென்றால் ஆரம்ப முதலே ….காந்தியை கொல்ல அவர்கள் மேற்கொண்டு வந்த ஏற்பாடுகளிலும் கொலையை செய்த முறையிலும் எந்த நேர்த்தியும் இல்லை; முறையான திட்டமிடுதலும் இல்லை… நம்பக்கூடாத பாட்கேயை கூட்டாளியாக தேர்வு செய்தனர்… இப்படி கூறிக் கொண்டே போகலாம்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

அவர்களை சாவர்க்கர் வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்பட்ட டாக்ஸி டிரைவர் அந்த வீட்டின் அருகிலேயே இல்லை… வீட்டின் மெயின் கேட்டிற்கு வெளியே காத்திருக்கும்படி கூறப்பட்ட சங்கர் கிஷ்டய்யா, சாவர்க்கரை பார்க்கவே இல்லை…

அதை விட சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்… சங்கர் கிஷ்டய்யா கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்திலிருந்து… பாட்கே எப்படி அவ்வளவு சிறப்பான சாட்சியாக.. அப்ரூவராக… கிளிப்பிள்ளை  போல் வாக்குமூலம் அளித்தார் என்பது தெரிய வருகிறது.

கைதாகி சிறையிலிருந்த போது சங்கர் கிஷ்டய்யாவிற்கு… கோர்ட்டில் அவர் என்ன பேச வேண்டும்… எப்படி பேச வேண்டும் என விடாது பயிற்சி அளித்தார் பாட்கே.

சங்கர் கிஷ்டய்யாவின் வாக்குமூலம் சில உண்மைகளை பறைச்சாற்றுகிறது…

அது… திகம்பர் பாட்கே கூட தன் வாக்குமூலத்தை அளிக்க எவ்வளவு கடுமையாக பயிற்சி மேற்கொண்டார் என்பது. அது பற்றி… பின்னர் பார்க்கலாம்.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Related articles

Recent articles

spot_img