காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 97): தடயங்களை விட்டுச் சென்றவர்கள்!

Published:

karkare - 2026
ஆப்தே கூறியபடி, ’ FRONTIER MAIL’ ரெயிலை பிடிக்க வேண்டும் என்றுதான் திகம்பர் பாட்கே நினைத்தார். ஆனால் அது மாலை 7 மணிக்குத்தான் புறப்படப் போகிறது என்று அறிந்த போது,இடையில் நிறைய நேரம் இருந்த காரணத்தால்,தன் பழைய நண்பர் ஒருவரை சந்திக்கச் செல்லலாம் என்று முடிவு செய்தார்.

அந்த நண்பர் பெயர் நவ்ரே. அவர் தாதர் பகுதியில் அமைந்திருந்த ‘ அஸ்ரா ஹோட்டலின்’ உரிமையாளர். தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகாமையில் தான் இந்த ஹோட்டல் இருந்ததால்,பாட்கே அங்கே புறப்பட்டுச் சென்றார்.

பாட்கே பின்னாளில் கூறும்போது… நவ்ரே தன் விருந்தினராக அன்றைய இரவை தன் ஹோட்டலில் கழிக்கும்படி கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

நான்கு நாட்களாக ஓடியாடி திரிந்ததால்,சரியான தூக்கமும் இல்லாது போன காரணத்தால்,நல்ல மெத்தை படுக்கையில் படுத்து தூங்கலாமே என்று எண்ணம் ஏற்பட்டு,அன்றைய இரவை அங்கு கழிக்க முடிவு செய்ததாகக் கூறினார்.

அத்தோடு அடுத்த நாள் மாலையில் கிளம்பினாலும்,உரிய நேரத்தில் டெல்லி சென்றைடந்து,காந்தி கொலை திட்டத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட பங்கினை செய்து முடித்து விட முடியும் என எண்ணினாராம்….

ALSO READ:  தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

விமானத்தில் பறப்பதற்கு முன்,ஆப்தேயும்,நாதுராமும் உருவாக்கிய ‘ பரபரப்பு விளம்பரத்தின் ‘ காரணமாக,அவர்கள் போலி பெயர்களில் பயண டிக்கெட்டுகள் எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்றே தோன்றியது…

அவர்கள் பயணித்த விமானம் அஹமதாபாத் வழியாக செல்லும் ஒன்று.  அஹமதாபாத்தில் ஒரு மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக,தாதா மஹராஜும் அதே விமானத்தில் பயணித்தார். அவருக்கு ஆப்தே மற்றும் நாதுராமிடம் ஈடுபாடு விட்டு போயிருந்த காரணத்தால்,அவர்களும் பம்பாயில் இருந்த போது அவரை சந்திக்க செல்லவில்லை.

விமானத்தில் அவர்களை கண்ட போது அவர் கையசைத்தார்.அவர்களும் பதிலுக்கு கையசைத்தனர். அஹமதாபாத் விமான நிலையத்தில்,பக்தர்கள் ஏராளமான மாலைகளை தாதா மஹராஜிற்கு அணிவித்து அவரை வரவேற்று அவரை சுற்றி நின்றனர்.

ஆப்தேயை கையசைத்து அருகே அழைத்த தாதா மஹராஜ்,சற்றே தள்ளி அழைத்துச் சென்று ‘’ நீங்கள் நிறைய பேசினீர்களே,ஆனால் எதுவுமே செய்ததாகத் தெரியவில்லையே ‘’ என்றார்.

அதற்கு ஆப்தே அளித்த பதில் : ’’ நாங்கள் எங்கள் வேலையை செய்யும் போது உங்களுக்கே தெரிய வரும்’. ஆப்தேயும்,நாதுராமும்தான்,தாங்கள் கடந்து வந்த வழி நெடுகும் தடயங்களை விட்டு வந்தார்கள் என்றால் இவர்களை மிஞ்சினார்கள் கார்கரேயும், மதன்லால் பஹ்வாவும்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

கார்கரே பிறருக்காக பணத்தை செலவழிப்பாரேயன்றி தனக்கென செலவு செய்யும் போது செலவுகளை மிக சிக்கனமாகவே செய்வார். சரியான ரெயிலை தவற விட்டு விட்டு 24 மணி நேரத்தில் டெல்லி சென்றடைவதற்கு பதிலாக, ஒரு மெதுவாகச் செல்லும் ரெயிலில் மூன்றாம் வகுப்பில் பயணித்தனர் கார்கரேயும் மதன்லால் பஹ்வாவும். அது டெல்லியை அடைய 40 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் ரயில்.

அவர்களிருந்த பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்த இருபதிற்கும் மேற்பட்டோர் களில், அங்சேகர் ( ANGCHEKAR ) என்பவரும் ஒருவர். பாகிஸ்தானிலிருந்து அகதியாக திரும்பியவர் அவர்.

பாகிஸ்தான் பகுதியில் ஒரு சிறு அரசு உத்யோகத்தில் இருந்தவர். இப்போது டெல்லி சென்று பணியிட மாற்றத்திற்கு முயல்வதற்கு பயணித்துக் கொண்டிருந்தார்.

மராத்தியில் இருவர் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட அவர், தன் தாய் மொழியில் யாரோ பேசுகிறார்களே என்று, கார்கரேயுடனும்,பஹ்வாவுடனும் உரையாடத் தொடங்கினார்.

கார்கரே தன் பெயரை மாற்றிக் கூறாமல் கார்கரேயென்றே அறிமுகம் செய்து  கொண்டார்.தான் ஹிந்து மஹா சபா ஊழியர் என்பதையும்,மஹாசபையின் வேலை யொன்றின் தொடர்பாக டெல்லி செல்வதாகவும் அங்சேகரிடம் தெரிவித்தார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

அங்சேகரின் பிரச்சனைகளைப் பற்றி கேட்டறிந்த அவர்,டெல்லியில் அவருக்கு யாரையும் தெரியாதென்பதை அறிந்து ,தங்குவதற்கு இடமில்லை என்று அங்சேகர் கூறியதால், அகதிகளிடம் மிகுந்த பச்சாதாபம் உடையவர் என்பதால்,அங்சேகர் தங்களுடனேயே ஹிந்து மஹா சபா அலுவலகத்தில் தங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்.

சாதாரணமாக ஹிந்து மஹா சபா அலுவலகக் கட்டிடத்தில்,கட்சி ஊழியர்கள் தங்குவதற்காக சில அறைகள் ஓதுக்கப்பட்டிருக்கும்.  அங்குதான் கார்கரேயும் பஹ்வாவும் தங்க எண்ணியிருந்தனர். இப்போது அவர்களுடன் அங்சேகரும்.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Related articles

Recent articles

spot_img