ஹிந்து மஹா சபா பவனில், தங்கியிருந்த அறையில், தான் வைத்திருந்த தேங்காய் எண்ணெய் பாட்டிலையும், பேனா கத்தியையும்,ஒரு சிறு போர்வையையும் கொண்டு வரும்படி கோபால் கோட்ஸே,ஷங்கர் கிஷ்டய்யாவை அனுப்பினார்.
ஷங்கர் கிஷ்டய்யா பவனுக்கு சென்று கோபால் கோட்ஸே கேட்டவற்றை கொண்டு வந்தார்.
ஒரு மரத்தின் கீழ் போர்வையை விரித்து விட்டு, ரிவால்வரின் துருவையும் மண்ணையும் அகற்றும் பணியில் கோபால் கோட்ஸே ஈடுபட்டார்.
திடீரென ஒரு கணம் பீதி ஏற்பட்டது.
சில குரல்கள் கேட்க, இரண்டு ரிவால்வர் களையும் போர்வையின் கீழ் தள்ளி விட்டார்கள்.
அவர்களை நோக்கி சீருடை அணிந்திருந்த மூவர் வந்துக் கொண்டிருந்தார்கள்.
இதை எப்படி சமாளிப்பது ?
உடனே பாட்கேயை விரிப்பின் மீது படுக்கச் சொல்லி விட்டு,ஷங்கர் கிஷ்டய்யாவை கணுக்காலில் எண்ணெயை தேய்த்து விடச் சொன்னார்கள்.
சீருடை அணிந்திருந்த மூவரும் அருகில் வந்தபோதுதான் அவர்கள் காட்டிலாகா காவலாளிகள் என்று தெரிந்தது.
ஒரு காவலாளி, காட்டிலே அவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வினவினார்.
கோபால் கோட்ஸே,ராணுவத்திலே பணிபுரிந்தபோது,நன்றாக பஞ்சாபி பேசக் கற்றுக் கொண்டிருந்ததால்,காவலாளிகளிடம் தாங்கள் காலாற நடந்து விட்டு வர வந்ததாகவும்,வந்த இடத்தில்,தங்கள் நண்பருக்கு கணுக்கால் பிசகி விட்டதாகவும் கூறினார்.
கோபாலின் பதிலில் திருப்தியடைந்த காவலாளிகள் அங்கிருந்து சென்று விட்டார்கள்.
ஆனால்,சிறிது நேரம் ஏற்பட்ட பீதியில்,ஆப்தே அரண்டு விட்டார்.
ரிவால்வரை வெட்டவெளியில் ரிப்பேர் செய்ய வேண்டாம் என்றும்,பவனுக்கு திரும்பிச் சென்று அங்கு செய்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
நால்வரும் அறைக்கு திரும்பினார்கள்.அங்கு கார்கரேயும்,மதன்லால் பஹ்வாவும் திரும்பியிருந்தார்கள்.
நண்பகல் ஆகிவிட்டிருந்த நிலையில்,காந்தியை கொல்வது எனும் தங்கள் முடிவை செயல்படுத்த
வேண்டிய நேரத்திற்கு ஐந்து மணிகள் இருந்தன.
பவனின் அறையை காலி செய்துவிட்டு,அனைவரையும் அழைத்துக் கொண்டு,அவர்களின் பொருட்களையும்,எடுத்துக் கொண்டு,இரண்டு டாக்ஸிகளில்,தானும்,நாதுராமும் தங்கியிருந்த மெரினா ஹோட்டலுக்கு ஆப்தே திரும்பினார்.
பாட்கேயையும்,ஷங்கர் கிஷ்டய்யாவையும்,கீழேயிருந்த உணவகத்திற்கு சென்று மதிய உணவை முடித்துக் கொண்டு வரச் சொன்னார்.
அவர்கள் இருவரும்,சாப்பிடச் சென்றிருந்த போது,தாங்கள் கொண்டு வந்திருந்த BLASTING FUSE எரிவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது என்று பரிக்ஷித்து பார்த்தார்கள்.
அறையின் கதவை சாத்தி விட்டு,ஒரு நீளத்திற்கு ஃப்யூஸ் வயரை எடுத்துக் கொண்டு அதனை பற்ற வைத்தார்கள்.
பின்னாளில் இது பற்றி கார்கரே கூறுகையில் :
‘ கண்ணை மறைக்கச் செய்யும் அளவிற்கு வெளிச்சமும்,ஹிஸ் எனும் ஓசையும் கேட்டது.
நாங்கள் கண்ணை திறந்தபோது அறை எங்கும் புகை மண்டலம்.அதன் காரணமாக நாங்கள் அனைவரும் இருமத் தொடங்கினோம்.
ஒரு மெத்தையின் மீது போட்டிருந்த விரிப்பை எடுத்து அந்த ஃப்யூஸ் வயரின் எரிந்துக் கொண்டிருந்த துகள்கள் மீது போட்டு அணைக்கத் தொடங்கினோம்.
அறையிலிருந்து புகை வருவதை பார்த்து,ஹோட்டல் ஊழியர் ஒருவர் ஓடி வர,தான் புகைபிடிக்கும் போது,தவறி ஒரு மெத்தை விரிப்பு தீ பிடித்துக்கொண்டதாகக் கூறி ஆப்தே சமாளித்தார்’.
நிதானமாக உணவு சாப்பிட்டு விட்டு, திகம்பர் பாட்கேயும்,ஷங்கர் கிஷ்டய்யாவும் அறைக்கு திரும்பினார்கள்.
அங்கே அறையில்,நண்பர்கள் அனைவரும் உற்சாகக்களிப்புடன் இருப்பதை பார்த்தார்கள்.
உற்சாகத்திற்கு காரணம் …
கோபால் கோட்ஸே தன் ரிவால்வரை சரி செய்து விட்டிருந்தார்.
( தொடரும் )